Primary tabs
-
பாவேந்தர் பிள்ளைத் தமிழ் பருவத்திற்குப் பத்துப் பாடல்களாக மொத்தம் 101 பாடல்களைக் கொண்டுள்ளது. முதற்பாடலில் பேரறிஞர் அண்ணா அவர்களை நினைவு செய்யும் வாயிலாக அவருடைய சிறந்த இயல்புகள் போற்றப்படுகின்றன.
காப்புப் பருவம் தவிர ஏனைய பருவங்களைப் பாடும்போது குழந்தைகளின் அந்தந்தப் பருவங்களின் இயல்புகள் தெளிவாக விளக்கப்பட வேண்டும் என்பதற்கேற்ப, பாவேந்தர் பாரதிதாசனின் கருத்துகளும் கொள்கைகளும், சாதனைகளும் விளங்க இந்நூல் அமைந்துள்ளது.
‘பாவேந்தர் புகழைப் பாடும் தகவிலாச் சிறிய கவி’ என்று அவையடக்கமாகக் கூறிய போதிலும் பாவேந்தரின் புகழை எஞ்சாது இயம்புகிறது இந்நூல். தமிழ் மன்னன், தமிழ் விளக்கு, புரட்சிக் குயில், புதுவை முரசு, விடுதலைக் கவி என்றெல்லாம் பெயர் சூட்டிப் பெருமை கொள்கிறார் புலமைப்பித்தன்.
பாவேந்தர் பிள்ளைத் தமிழில் அமைந்துள்ள ஈற்றடிகளில் சொற்சுவை, பொருட்சுவை, சந்தச் சுவை ஆகியன சிறப்பாக அமைந்துள்ளன.
தமிழ்ப் பாட்டுக்களின் பயன்பாட்டினைத் தாம் வாழும் சமுதாயத்திற்கேற்றாற் போல் மாற்றி, தமிழ்க் கவிதை உலகில் பெரும் புரட்சி செய்தவர் பாவேந்தர் பாரதிதாசன். பல ஆண்டுகளாக உருவாக்க முடியாத கருத்துகளும், தத்துவங்களும் தந்தை பெரியாரால் உருவாயின. இக்கருத்துகளும், தத்துவங்களும் பேரறிஞர் அண்ணாவின் உரைநடையிலும் மேடைப் பேச்சிலும் முழுமையாக வெளிப்படுத்தப் பட்டன. இக்கருத்துகள் அனைத்தும் பாவேந்தர் பாரதிதாசனால் பாடப்பட்டன.
வலியோர் சிலர் எளியோர் தமை
வதையே புரிகுவதா
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா
- (முதல் தொகுதி. பக்-173)என்றுவினா எழுப்பிக் குடியாட்சிக்குக் குரல் கொடுத்த பாவேந்தரை,
. . . . . . . . . . உறங்குவோரும்
புலியாகி வருகவென்று போர்க்குரல் எழுப்பியொரு
புரட்சிப் புயல் விளைத்தாய்
- (பா.34)என்று சப்பாணிப் பருவத்திலே பாடுகிறார்.
சங்க காலம் தொடங்கி, அண்மைக்காலம் வரையிலாகப் பல வரலாற்று நிகழ்வுகள் பாவேந்தர் பிள்ளைத் தமிழில் பதிவு செய்யப்படுவதைக் காணலாம்.
சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர் புகழையும் (பாடல் எண்கள் - 30, 38, 50, 72) சேர மன்னன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் ஈகை வளத்தையும் அவன் இமயத்தில் வில் பொறித்த செய்தியையும், சேரன் செங்குட்டுவனின் வடநாட்டுப்போரையும் (பாடல் எண்கள் - 33, 97, 3, 8, 32, 63) பற்றி இந்நூல் குறிப்பிடுகிறது.
கரிகாலன் காவிரிக் கரை அமைத்த செய்தியையும் (25) பாண்டியன் இமயத்தில் கயல் பொறித்ததையும் (44), பாரி, பேகன் ஆகிய வள்ளல்களின் கொடைத்திறத்தையும் (84, 4) இந்நூல் குறிப்பிடக் காணலாம். பிற்கால நிகழ்வுகளாக இந்தி எதிர்ப்புப் போராட்டம், மொழிக்காகத் தீக்குளித்த மாணவர்களின் உயிர்த் தியாகம் (100) ஆகியன குறிப்பிடப்படுகின்றன.
பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தது முதல் தொடரும் நிகழ்வுகளை எடுத்துக் கூறும் வரலாற்றுப் பெட்டகமாகவும் விளங்குகிறது.
கோலஞ்சிறந்த தமிழணங்கின்
குடைக்கீழ் இந்த உலகனைத்தும்
குறுகிக்கிடப்பப் புது யுகத்தைக்
கொணரத் தகுந்த அறிவியற்கும்
சாலச் சிறந்தாள் இவளென்று
சரிதம் படைக்கும் இது நாள் - (78)என்று தமிழக அரசு தமிழ் வளர்ச்சி கருதித் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைப்பது முதலான எல்லா வகையான முயற்சிகளையும் சுட்டிக் காட்டும் இலக்கியமாகத் திகழக் காணலாம்.
- பெரியாரைப் போற்றுதல்
செங்கீரைப் பருவத்தில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுக்குப் பொற்கிழி வழங்கிய செய்தியை நினைவுபடுத்திப் பாடுகின்றார், புலவர்.
ஈரோட்டு வெண்தாடி வேந்தனெனும் எந்தையவர்
இலட்சியப் பாசறைக் கோர்
இனிய கவி முரசென்று மனமகிழ நாடெல்லாம்
ஏத்தெடுத்துத் துதித்தும்
பாராட்டு மொரு நாட்பசும் பொற்செழுங்கிழி
பரிந்தளித்திட்டவாறுஎன்று வரும் பாடலில் தமிழகத்து அரசியல், சமுதாய இயல், கலை இலக்கிய இயல் ஆகிய துறைகளில் ஒரு புதிய திருப்பத்தை, தந்தை பெரியாரின் சுய மரியாதை இயக்கம் ஏற்படுத்தியதையும் புலமைப்பித்தன் சுட்டிக்காட்டுகிறார்.
பெரியார் பிறந்து வளர்ந்து புகழ் பெறுவதற்குக் காரணமாக இருந்ததால் அவர் பிறந்த ஊராகிய ஈரோடும் அவர் முகத்தில் தோன்றி அழகு செய்ததால் வெண்தாடியும் புலவர் பாடும் புகழுடையதாக ஆயின என்பதை, பாரதிதாசனும் பாடக் காணலாம்.
தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும். அவர்தாம் பெரியார்.
இராக்காலத்தில் உடுக்கணங்கள் என்று சொல்லப்படுகின்ற நட்சத்திரங்களாகிய அற்ப இனம் புடை சூழ வளரும் குறைத் தன்மையைப் பெற்றிருப்பவன் நீ. எங்கள் கவிஞராகிய குழந்தையோ தந்தை பெரியாரோடு ஒன்றுபட்டு வாழும் ஏற்றத்தைத் தனக்குரித்தாகக் கொண்டுள்ளது என்று அம்புலிப்பருவத்தில் பாரதிதாசனுக்கும் அம்புலிக்கும் உள்ள வேறுபாட்டை எடுத்துச் சொல்லி அம்புலியை விளையாட வருமாறு அழைக்கிறார் புலமைப்பித்தன்.
- அண்ணாவைப் போற்றுதல்
பாவலர் புலமைப்பித்தன் புதுமை உலகம் காணத் துடிக்கும் தம் உள்ளத் துடிப்புக்கு மூலமாக விளங்கிய பேரறிஞர் அண்ணாவை முதற்கண் பாடுகிறார். பேரறிஞர் அண்ணா அவர்களின் மூன்று சிறந்த இயல்புகளை முதற்பாடலிலேயே சுட்டிக் காட்டுகிறார். அவருடைய நா நலம், அவர் பொது வாழ்வில் கடைப்பிடித்த நடைமுறை, தமிழ்நாட்டில் அவர் தோன்றிய சிறப்பு ஆகியவற்றைப் பாடுகிறார்.
கேட்டாரைத் தன் வசப்படுத்தும்படியாகத் தமிழைக் கையாண்டவர் அறிஞர் அண்ணாவைப் போல் யாருமில்லை. தமிழ் தன்னை உரையிலும் எழுத்திலும் உலகம் விரும்பக் கருத்தும் கனிவும் கலந்துறவாடக் கையாளும் உரவோன் ஒருவன் தோன்ற வேண்டுமென நெடுநாள் செய்த தவத்தின் பயனாகத் தோன்றியவர் அறிஞர் அண்ணா என்ற கருத்துப்பட,
தமிழ் உடற்றிய பெருந்தவத்தால்
தோன்றிய உரவோன் - (பா - 1)
என்று பாடுகின்றார்.பார் முழுவதும் வெல்லும் சொல்லேருழவன் அண்ணா
-(13)
என்று அண்ணாவைப் பாராட்டுகின்றார்.
சப்பாணிப் பருவத்தில், பாரதிதாசனின் கவிதைச் சிறப்பினையும் அண்ணாவின் திறமையையும் இணைத்துப் போற்றுகிறார். “தமிழகத்துக்கென அமைந்து மறைந்த பழைய புகழை உன் கவிதை கொண்டு புதுப்பித்துத் தமிழகத்துக்கும் தமிழுக்கும் வெற்றியளித்த பேரறிஞர் அண்ணாவின் புகழைப் பாடுவேன்” என்கிறார். அண்ணாவின் தமிழ்ப்பணியினை
இளந்தமிழ்க் கோர் கொற்றமளித்தவன்
பெற்றிமை பாடுவேன் கொட்டுக சப்பாணி - (37)(பெற்றிமை = தன்மை)
என்று சிறப்பித்துப் பாடுகிறார்.