தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பாட முன்னுரை

  • 4.0 பாட முன்னுரை

    புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் முதல் கவிதைத் தொகுதி 1938-ல் வெளிவந்திருக்கின்றது. அக்கவிதைத் தொகுதியின் மூலம் மூன்று காவியங்களைப் படைத்துள்ளார் என்பதை அறியலாம். புரட்சிக் கவிஞர் என்று உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை பெற்றது, கவிஞரின் காவியங்களுள் முதலாவதான ‘சஞ்சீவிபர்வதத்தின் சாரல்’ எனும் காவியமாகும். அதனைத் தொடர்ந்து புரட்சிக்கவி, வீரத்தாய் எனும் காவியங்கள்.

    தமிழ்ப் பெண்கள் வீராங்கனைகளாகவும் வீரப் புதல்வரைப் பெற்றவர்களாகவும் காட்ட நினைத்துத் தான் வீரத்தாயைப் படைத்தார். ஒன்பது காட்சிகளால் படைக்கப்பட்ட ‘வீரத்தாய்’ காவியம் ஓர் ஓரங்கக் கவிதை நாடக வகையைச் சார்ந்தது எனலாம்.

    உறவினர் அனைவரையும் இழந்த பிறகும் தனக்கிருந்த ஒரே மகனைப் போருக்குச் செல்லுமாறு அனுப்பியவள் புறநானூற்றுத் தாய்.

    சீவகனின் தாய் அனாதையாய் இடுகாட்டில் மயில் பொறியில் இறங்குகிறாள்; தவக்கோலம் பூண்டு மறைந்து வசித்து வருகிறாள். அவள் மகன் முனிவர் ஒருவரிடம் மாமன்னர்க்குரியதான பல கலைகளைப் பயில்கிறான். அவனே காப்பியத் தலைவனாகச் சீவக சிந்தாமணியில் படைக்கப்படுகிறான். அதேபோல, கரிகாலன் பிறப்பில் அனாதை. அவனை, அவன் மாமன் இரும்பிடர்த்தலை அரசனாக மாற்றினான். அதுபோலவே, ‘வீரத்தாய்’ காவியத்தில் மகனை வீரனாக்குவது அவனது தாயே. இக்காவியத்தில் ஆண்மாந்தர்களை விடப் பெண்மாந்தர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

    கல்வி இன்றி, உரிமை இழந்து, சிந்தனை அறியாமல் கண்டதெல்லாம் குடும்பம் என்றே கிடந்த பெண்கள் உலகத்தை அகற்றிட, அப்பெண்களின் பார்வையைப் பறித்த சமுதாயத்திற்குப் பகுத்தறிவை ஊட்டிட நினைத்து உருவானதுதான் ‘வீரத்தாய்’ காவியம்.

    மணிபுரி, மன்னன் இல்லாமல் பாழாய்க்கிடக்கும் நிலையைப் பயன்படுத்தி சேனாபதி காங்கேயனும் மந்திரியும் ஒன்றுசேர்ந்து சூழ்ச்சியால் அரசாட்சியைப் பெற்றிட, இளவரசியையும் சுதர்மனையும் ஊர்ப்புறத்தில் விட்டுவிட்டுச் சதித்திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால், இளவரசி யாருக்கும் தெரியாமல் தன் மகனுக்கும் தெரியாமல் அவனுக்கு எல்லாக் கலைகளையும் கற்றுக்கொடுத்து வளர்க்கிறாள். தகுந்த நேரம் பார்த்துச் சூழ்ச்சியை முறியடித்து வெற்றியும் பெறுகிறாள். இளவரசன் சுதர்மன் மணிபுரி அரசின் முடியைச் சூடும் சமயத்தில், சுதர்மனே, ‘இந்த நாடு எல்லார்க்கும் உடைமை, எல்லார்க்கும் உரிமை’ என முரசறைவித்துக் குடியரசு ஆட்சிமுறைக்கு நாட்டை மாற்றுகிறான் என்பதைப் பற்றிச் சொல்வது’ தான் ‘வீரத்தாய்’ காவியம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:03:43(இந்திய நேரம்)