தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4.3

  • 4.3 கதை மாந்தர்

    குறைவான பாத்திரப்படைப்புகளைக் கொண்டே இக்காவியத்தை முடித்திருப்பதனால், இதனை ஓரங்கக் கவிதை நாடகமாகக் கருதலாம். வீரத்தாய் விஜயராணி, சேனாபதி காங்கேயன் ஆகிய இருவரின் பங்களிப்பே காவியத்தில் அதிகமாகக் காணப்படுகிறது.

    4.3.1 விஜயராணி

    ஆண்மாந்தரை எளிதாக விஞ்சும் பெண்மாந்தரான ‘வீரத்தாய்’ எனும் பெயரிலேயே காப்பியத்தை அமைத்துள்ளார்.

    படியாத பெண்ணினால் தீமை - என்ன
    பயன் விளைப்பாள் அந்த ஊமை - என்று

    படியாத பெண்களால் இந்தச் சமுதாயத்திற்கு என்ன பயன் வந்துவிடப் போகிறது என்று இரக்கமும், அதே நேரத்தில் கோபமும் கொண்டவராகப் பெண்ணினத்தை நேசிக்கிறார் பாரதிதாசன். அந்த எண்ணத்திலேயே,

    “அரசியோ வீரம், உறுதி அமைந்தாள்!
    தரையினர் மெச்சும் சர்வ கலையினள்

    என்று வீரத்தாயை முதலில் அறிமுகம் செய்கிறார்.

    பெண்கள் மிகவும் சாதாரணமானவர்கள் என்னும் தவறான கணிப்பைத் தவிடுபொடியாக்கிச் சேனாபதியின் ஆசைக் கனவுகளையே சிதறடித்து விடுகிறாள் அரசி.

    வெற்றிக்கான விதையைச் சரியாகப் பாதுகாப்பதில் வீரத்தாய் விழிப்பாகக் காணப்படுகிறாள்.

    கிழவராக வேடம் பூண்டு, கல்வியறிவில்லா மூடனாக வளர இருந்த சுதர்மனைக் கல்வி, கேள்வி, வீர தீரக் கலைகளில் தேர்ச்சி பெறச் செய்து ஒழுக்கமிக்க வீரனாக வளர்க்கிறாள் வீரத்தாய்.

    பெண் என்றால் இப்படியன்றோ பிறந்திட வேண்டும் என்று பல நாட்டு மன்னர்களும் போற்றும் விதத்தில் வீரத்தாயைப் படைத்துள்ளார் கவிஞர்.

    பெண்மையைப் புல்லாக மதித்துப் புன்மை செய்யப் புறப்பட்ட சேனாபதி பெண்மையின் வலிமை மிகுந்த இயல்பினைக் கண்டு, இடிந்து, தலைகுனிந்து நிற்பதைக் காணமுடிகிறது.

    சுற்றுச் சார்பு ஏதுமின்றித் தன் தோள் வலி ஒன்றையே நம்பிக் காலம் பார்த்திருந்து வெற்றி சூடும் பெண்மணியாக வீரத்தாய் படைக்கப் பட்டிருக்கிறாள்.

    எத்தனை வஞ்சகம் இடைப்பட்டாலும் அத்தனையும் இடையொடிந்து போக, வாள் பயிற்சி பெற்ற வஞ்சியாகவும் வயிரம் பாய்ந்த நெஞ்சளாய்த் தான் பெற்ற பிள்ளைக்குத் தக்க கலைகளைப் பயிற்றுவிப்பவளாகவும் காணப்படுகிறாள்.

    ‘அறிவு பெற்ற படியாலே எல்லாம் பெற்றீர்’!

    என்றும்,

    தக்க நல்லறிஞரின்றித் தரணியும் நடவாதன்றோ! என்றும் மந்திரியின் மூலமாக வீரத்தாயின் பெருமைகள் பேசப்படுகின்றன.

    ‘நிற்கையிலே நீ நிமிர்ந்து நில் குன்றத்தைப் போல
    நெளியாதே லாவகத்தில் தேர்ச்சி கொள்’

    எனத் தன்மகனைத் தேற்றி, வீரம் செறிந்தவளாகக் காணப்படுகிறாள்.

    இறுதியில் நாட்டைக் குடியரசுக்குட்படுத்தி மக்களின் வாழ்த்துக்களைப் பெறுபவளாக ‘வீரத்தாய்’ படைக்கப்பட்டிருக்கிறாள்.

    4.3.2 காங்கேயன்

    காப்பியங்களில் வரும் எதிர்பாத்திரப் படைப்புப் போலத் தான் காங்கேயனும் படைக்கப்பட்டுள்ளான். மணிபுரி மன்னனிடம் கூடவே இருந்து மதுப்பழக்கத்தை உண்டு பண்ணி அதிகாரத்தைப் பறித்துக் கொண்டவன் காங்கேயன்.

    சூழ்ச்சி செய்து, சூழ்நிலையை உருவாக்கி நாட்டைக் கைப்பற்றத் திட்டமிட்டவனாகவும் காணப்படுகிறான். இத்திட்டத்திற்கு மந்திரியை உதவிக்கு அழைத்து, அவனுக்குப் பங்கு தருவதாகச் சொல்லித் தன் பக்கமாக இழுத்தவன். அதே நேரத்தில், அரசி விஜயராணியை வசப்படுத்தவும் நினைத்தவன்.

    ஆடை, அணிகலன்களை அணிந்து கொள்வதும் வாசமலர்களைச் சூடிக் கொள்வதும் ஆடவர்களுக்குச் சேவை செய்வதுமே பெண்களின் தலையாய பணி என்று பெண்களை இழிவாகக் கருதுபவன்.

    ‘அஞ்சுதல் வேண்டாம் அவளொரு பெண்தானே!’ எனக் கேவலமாக இளவரசி விஜயராணியை நினைத்து, அழிவிற்கு ஆட்படுபவனாகக் காணப்படுகிறான்.

    கல்வி, கலை. நல்லொழுக்கம் - இம் மூன்றிலும் தேறாதவன் ஆண்மகனே ஆனாலும் ‘நடைப்பிணம்’தான் எனக் கூறி, இவ்வழியிலேயே மன்னன் மகன் சுதர்மனை வளர்க்கவும் திட்டமிடுகிறான் காங்கேயன்.

    ‘ஆவி அடைந்த பயன் ஆட்சி நான் கொள்வதப்பா’ என வஞ்சனையால் நாட்டைப் பெற வகை தேடினவனாகக் காணப்படுகிறான்.

    அரசாங்க பொக்கிஷத்தை அவசர அவசரமாகத் திறக்கச் சொல்லி, அதனை, அனுபவிக்கத் துடிக்கும் நெஞ்சினனாகக் காங்கேயன் இருக்கிறான். தானே மணிபுரி அரசனாக முடிசூடப் போவதாகச் சொல்லும் வேளையில் மணிபுரி மக்களுக்கு மகிழ்ச்சி தராத ஓர் அரசனாகக் காணப்படுகிறான். மன்னனையும் அரசியையும் பற்றித் தவறான இழிவான செய்தியைப் பரப்புகிறான். ‘அமுதூட்டி அருமையாக வளர்த்த மன்னன் மகனுக்குக் கல்வி வரவில்லை’ என்று தவறாகப் பிரச்சாரம் செய்கிறான். இவ்வாறு வஞ்சனை, பொய், ஆத்திரம், பேராசை எனும் பல்வேறு முகங்களின் ஒட்டுமொத்த உருவமாய்க் காங்கேயன் திகழ்வதை இக்காவியத்தில் காணலாம். இறுதியில் பொய்யுரைகளை நம்பாத பல நாட்டு மன்னர்களும் கண்டிக்கும் அளவிற்கு அவனது ஏமாற்று வேலை அமைந்துள்ளது.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1.
    ‘வீரத்தாய்’ காவியம் உருவான ஆண்டு எது?
    2.
    ‘வீரத்தாய்’ காவியம் எடுத்துரைக்கும் கருத்து யாது?
    3.
    பாரதிதாசன் இயற்றிய மூன்று கவிதைக் காவியங்களைக் குறிப்பிடுக.
    4.
    ‘பாரதிதாசன்’ என்னும் பெயர் கொண்டது எங்ஙனம்?
    5.
    மன்னன் மகன் சுதர்மனைச் சேனாபதி காங்கேயன் எவ்வாறு இழிவாக மதிப்பிடுகிறான்?
    6.
    பெண்களைப் பற்றிச் சேனாபதியின் கருத்து யாது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2017 12:02:21(இந்திய நேரம்)