Primary tabs
-
6.6 அக இலக்கியங்களில் பெருந்திணை
சங்க அக இலக்கியங்களில் கலித்தொகையில் மட்டுமே பெருந் திணையைச் சார்ந்த பதினான்கு பாடல்கள் உள்ளன. மருதக்கலியில் இரண்டு, முல்லைக் கலியில் இரண்டு நெய்தற்கலியில் பத்து என மொத்தம் பதினான்கு பாடல்கள் பெருந்திணை ஒழுக்கத்தைக் கூறுகின்றன என முன்னர்க் கண்டோம். பிற அக இலக்கியங்களில் பெருந்திணையைக் காண இயல வில்லை.
கலித்தொகையில் 62ஆவது பாடலும் பெருந்திணையைச் சார்ந்ததாகும். ஒத்த உருவு முதலியவை இல்லாத தலைவன் தலைவி இருவரும் மிக்க காமத்தால் மாறுபட உரையாடிக் கூடக் கருதுகின்றனர்.
”தன்னுடன் புணரும் குறிப்பு இல்லாத என்னைப் புணர்ச்சி விருப்புடன் கையால் வலியப் பிடிக்கும் இவன் நாணம் இல்லாதவன்” என்று தலைவி கூறுகிறாள்.
”உன் மேனியைத் தழுவுவதற்கு இனிதாய் உள்ளது. அதனால் தழுவினேன்” என்று பதில் தருகிறான் தலைவன்.
”தனக்கு இனிதாய் இருக்கிறது என்று எண்ணிப் பிறர்க்கு இனியது அல்லாததை வலியச் செய்வது இன்பத்தை அளிக்குமோ?” என்று தலைவி வினா எழுப்புகிறாள்.
“தண்ணீர் விரும்புவர்க்கு இனியது என்று அருந்துவது அல்லாமல் அந்த நீர்க்கு இனியதாய் இருக்கும் என்று எண்ணி அருந்துவாரோ!” என்று விடை தருகிறான் தலைவன்.
வேட்டார்க்கு இனிதாயின் அல்லது நீர்க்கினிதென்று
உண்பவோ நீருண் பவர்(அடிகள் : 10-11)
(வேட்டார்= தாகம் கொண்டார்; உண்பவோ= உண்பார்களோ)
காமத் துன்பத்தில் ஆழ்த்தும் பெண்களை வன்மையாகச் சேர்வதும் ஒருவகை மணம் என நூலோர் கூறுகின்றனர் என்றும் கூறுகின்றான். இவைகளைக் கேட்ட தலைவி புணர்ச்சிக்கு உடன்படுகிறாள். இது மிக்க காமத்து மிடல் என்னும் பெருந்திணை ஒழுக்கம்.
பெருந்திணையைச் சற்று அதிக அளவில் (பத்துப் பாடல்கள்) பாடியவர் நல்லந்துவனார். மடலேறுதலைக் கூறும் 138ஆம் பாடலை முன்பே கண்டோம். இங்கு வேறொரு நெய்தற்கலிப் பாடலைக் காண்போம்.தலைவன் மடல் ஏறி வருந்துவது கண்ட தலைவியின் உறவினர்கள் தம் குடிக்குப் பழி வரும் என அஞ்சி, பாண்டியனுக்கு அவன் பகைவர் திறை கொடுத்தது போலத் தலைவனுக்குத் தலைவியை அவ்விடத்திலேயே கொடுத்தனர். (பாடல் எண் : 141)