Primary tabs
-
5.0 பாட முன்னுரை
வள்ளுவர், பொருட்பாலில், அரசியல் எனும் தலைப்பின் கீழ்,
கல்வியைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அரசியல் என்ற தலைப்பு,
அரசனைப் பற்றியும், அரசன் பின்பற்ற வேண்டிய நெறிமுறை
பற்றியும், அவனுக்குத் துணையாக அமைய வேண்டியவை
பற்றியும் பொதுவாகக் கூறுகிறது. அதில், அரசனது சிறப்பைக்
கூறும் ‘இறைமாட்சி’ என்ற அதிகாரத்திற்கு அடுத்ததாக, ‘கல்வி’
என்ற அதிகாரம் இடம் பெற்றுள்ளது. ‘கல்வி’ அரசனுக்கு உரிய
முதல் தகுதியாக வள்ளுவர் கருதி இவ்வாறு அமைத்திருக்கலாம்.
ஆனால், கல்வியைப் பற்றி வள்ளுவர் கூறும் கருத்துகள்
முழுவதும், அரசருக்கு மட்டுமல்லாமல், ஆட்சியருக்கு
மட்டுமல்லாமல், மனித குலம் முழுமைக்கும் உரியதாகவே
அமைந்துள்ளது. மேலும் கல்வியைக் கண் போல் போற்றிப்
பாதுகாத்த, தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்பையும்
வெளிப்படுத்துகிறது.