தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பகுதி 5.2-கல்வி கற்கும் வழி

  • 5:2 கல்வி கற்கும் வழி
    E

    இத்தகைய கல்வி எனும் செல்வத்தை எப்படிப் பெற வேண்டும்?
    எவ்வாறு கற்க வேண்டும்? அதற்கும் அருமையான வழி
    சொல்லுகிறார் வள்ளுவர்.


    கற்க கசடு அற கற்பவை, கற்றபின்
    நிற்க அதற்குத் தக.



    (குறள் எண்: 391)


    யார் வேண்டுமானாலும் கல்வி கற்கலாம் அதற்குத் தடை இல்லை.
    ஆனால் உள்ளார்ந்த விருப்போடு படியுங்கள். கடமைக்காக
    மட்டும் கற்கும் கல்வி மேலோட்டமானது. அது மனதில் தங்காது,
    நிலைக்காது, ஈடுபாட்டுடன் - விருப்பத்துடன் கற்கும் கல்வி
    மனதில் தங்கும். நிலைக்கும், அதை எப்படி கற்க வேண்டும்?
    எந்த வித சந்தேகமும் இல்லாமல் தெளிவாகத் தவறின்றிக் கற்க
    வேண்டும், இதைத்தான் வள்ளுவர் கசடு அற என்று
    குறிப்பிடுகிறார், அப்படி கற்றல் தான் அந்த கல்வி நம்மிடம்
    நிலைத்து நிற்கும்.


    5:2:1 கற்க வேண்டியவை

    எப்படிக் கற்க வேண்டும் என்று கூறிய
    வள்ளுவர், எவற்றைக் கற்க வேண்டும்
    என்றும் குறிப்பிடுகிறார். ‘கற்பவை’ என்று
    மிகச் சுருக்கமாகக் கூறுகிறார். வள்ளுவரின்
    சிறப்புகளில் முக்கியமானது, அவர் எந்தச்
    சார்பும் இல்லாதவர் என்பதாகும். அவரை
    எந்தக் குறுகிய
    வட்டத்திற்குள்ளும் அடக்கி

    விட முடியாது என்பதாகும். எனவே, இந்த நூல்களை,
    வேதங்களை, சாத்திரங்களைக் கற்க வேண்டும் என்று கூற அவர்
    விரும்பவில்லை; கற்க வேண்டியவை எவை என்ற முடிவைக்
    கற்பவர்களின் விருப்பத்திற்கே விட்டு விட்டார். அதனால்,
    ‘கற்பவை, கற்கக்கூடியவை’ என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்.
    இதற்கு அறிஞர்கள், பல விளக்கங்களையும், கருத்துகளையும்
    கூறுகின்றார்கள்.

    கற்க வேண்டுபவை, காலத்துக் காலம் வளருபவை. விரிவு
    அடைபவை. வள்ளுவர் காலத்தில் கற்க வேண்டியது வேறு. இன்று
    நாம் கற்க வேண்டியவை வேறு. நாளைய தலைமுறையினர் கற்க
    வேண்டியவை வேறு. கற்க வேண்டுபவை மாறுகின்றன. மனிதனுக்கு
    மனிதன் வேறுபடுகின்றன. இதற்கு எல்லையும் கிடையாது, முடிவும்
    கிடையாது. கல்வி இருக்கும் வரை, கற்கும் நிகழ்ச்சி தொடரும்.
    அது வரையிலும் Ôகற்பவை கற்கÕ என்பது பொருந்தும்.

    வள்ளுவரின் குறள் காலவரையறை கடந்து எக்காலத்துக்கும்
    பொருந்தி, வாழ்க்கை விளக்கமாக அமைவது இத்தகைய
    ‘பொதுமை’ப் பண்புகளால் தாம்.


    5:2:2 கற்ற வழி நடை பயிலுங்கள்

    மேலே சொன்னவாறு கற்றால் மட்டும் போதுமா? அதோடு நம்
    பணி முடிந்து விட்டதா? இல்லை. அதற்கு மேல் செய்ய வேண்டிய
    பணிதான் மிகவும் முக்கியமானது. கவனத்தில் கொள்ள வேண்டியது.

    நாம் கற்ற கல்வியைப் பயன்படுத்த வேண்டும். நடைமுறைப்படுத்த
    வேண்டும். அதுதான் முக்கியம். இல்லாவிட்டால் நாம் கற்ற
    கல்வியால் எந்தப் பயனும் இல்லை.


    மக்கள் நெருக்கடி மிகுந்த ஒரு சாலையில்,
    நடந்த நிகழ்ச்சி ஒன்று நினைவுக்கு
    வருகிறது. சாலையின் சந்திப்பில் (Junction),
    ஒரு பக்கம் சிவப்பு விளக்கு எரிந்து
    கொண்டிருந்தது, மிகவும் அவசரமாக,
    ஒருவர் அதைப் பொருள்படுத்தாமல்,
    கடந்து செல்லத் தொடங்கினார். உடனே


    போக்குவரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்த காவலாளர், ஓடிச்
    சென்று அவரைப்பிடித்தார். பிடித்ததும், அவர் கேட்ட முதல்
    கேள்வி. ‘ஏன் ஐயா, உம்மைப் பார்த்தால் படித்தவர் போல்
    தெரிகிறது, சிவப்பு விளக்கு எரியும் போது சாலையைக் கடக்கக்
    கூடாது என்பது கூட உமக்குத் தெரியாதா? நீர் படித்து என்ன
    ஐயா பயன்’, என்று கேட்டார். தவறு செய்தவர் தலைகுனிந்து
    நின்றார்.

    இதிலிருந்து என்ன தெரிகிறது? கற்றவர்களிடம், அவர்கள் கற்ற
    கல்வியினால் ஏற்படும் செயல்பாட்டை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
    அது இல்லை என்றால், ‘உன் கல்வியினால் என்னய்யா பயன்? நீ
    படித்தும் ஒன்று தான், நீ படிக்காததும் ஒன்று தான்’ என்று கூறி
    விடுகிறார்கள். இந்த எதிர்பார்ப்பை வள்ளுவர், ‘நீ கற்ற வழியில்
    செயல்படு, அது தான் நீ கற்ற கல்வியின் பயன்’ என்று சுட்டுகிறார்.
    அதனால்தான், பாடலின் இறுதியில், ‘நிற்க, அதற்குத் தக’ என்று
    குறிப்பிடுகிறார்.

    ஏட்டுக் கல்வியின் அறிவால் மட்டும் எந்த வித பயனும் இல்லை.
    தான் கற்ற கல்வியின் பயனான பண்பட்ட மன நெறிகளை
    நடைமுறைப்படுத்தினால் தான் அந்தக் கல்வியின் - கற்றதின்
    பயன் கிட்டும் என்கிறார். இன்று நாட்டில் உள்ள பல
    குறைகளுக்கும் அடிப்படைக் காரணம் என்ன? கற்றவைக்கு ஏற்பச்
    செயல்படாமை தானே? இதை எவ்வளவு முன் எச்சரிக்கையுடன்
    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே வள்ளுவர்
    கூறியுள்ளார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:16:24(இந்திய நேரம்)