தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பகுதி 5.1-கல்வி - ஒரு விளக்கம்

  • 5:1 கல்வி - ஒரு விளக்கம்
    E

    'உயிர்கள்     பிறப்பது     இறப்பதற்கே’
    என்பார்கள். பொருள்கள்     அழியும்.
    செல்வங்கள் அழியும். வெள்ளப்பெருக்கால்
    ஊர்கள் கூட அழியும். ஆனால் கல்வி மட்டும்
    அழியாது. அழிக்க முடியாது. கல்வி
    அழியாத செல்வம். அது நிரந்தரமானது.
    எனவே, நிரந்தரமாக, ஊறிக் கொண்டிருக்கும்

    மணற்கேணி போன்றது கல்வி என்கிறார் வள்ளுவர்.


    தொட்டனைத்து ஊறும் மணற்கேணி, மாந்தர்க்குக்
    கற்றனைத்து ஊறும் அறிவு.



    (குறள் : 396)


    மணல்கேணி, மனத்திற்கும்; நீர், கல்விக்கும்; தோண்டல், கற்றலுக்கும்
    ஒப்பாகச் சொல்லப்பட்டுள்ளது.


    5:1:1 கல்வி - அழியாத செல்வம்

    மணல்பாங்கான பகுதியில் உள்ள ஊற்றில் அல்லது கிணற்றில்
    எப்பொழுதும் தண்ணீர் இருக்கும். அதைத் தோண்டத் தோண்ட
    மேலும் தண்ணீர் வந்து கொண்டே இருக்கும். தண்ணீர்
    ஊறிக்கொண்டு இருக்கும் அதன் இயல்பை யாராவது திருட
    முடியுமா? அழிக்க முடியுமா? முடியாது. ஊறும் தன்மை
    இயற்கையானது. அதை யாரும் அழிக்க முடியாது. கல்வியின்
    தன்மையும் அப்படிப்பட்டதே. எனவே தோண்டத் தோண்ட ஊறும்
    ஊற்றுக்கு ஒப்பாகக் கல்வியைக் கூறுகிறார் வள்ளுவர். ஒருவன்
    கற்ற கல்வி அவனுக்கு எப்பொழுதும் பயன்பட்டுக் கொண்டே
    இருக்கும். ஒருவன், கல்வியால் பெற்ற அறிவு அழிக்க முடியாத
    செல்வம் என்கிறார் வள்ளுவர்.

    திருவள்ளுவர் கல்வியால் பெற்ற அறிவை யாராவது அழிக்க
    முடிந்ததா? அல்லது திருட முடிந்ததா? அப்படி அழித்திருந்தால்,
    இன்று நமக்குத் திருக்குறள் கிடைத்திருக்குமா?

    ஒரு கல்வியாளனது (Educationist) பணத்தை அல்லது
    பொருட்களை வீடு புகுந்து திருடலாம். அவன் எழுதி வெளியிட்ட
    நூல்களைக் கூட எரித்து அழிக்கலாம். ஆனால் அவன், தான் கற்ற
    கல்வியால் பதித்து வைத்திருக்கும் சிந்தனைகளை யாராலாவது
    திருட முடியுமா? அழிக்க முடியுமா? முடியாது. இல்லையா?
    வாய்ப்புக் கிடைக்கும் பொழுது எல்லாம் மீண்டும் அவர் தனது சிந்தனைகளை நூலாக வெளியிடலாம். அவர் உயிரோடு இருக்கும்
    வரையில் மட்டுமல்ல, அவர் இறந்த பின்னும் கல்வியால் அவர்
    பெற்ற அறிவு, அவரது சிந்தனைகள் அழியாது வாழும்.

    கிரேக்க அறிஞன் சாக்ரட்டசின் சிந்தனைகள் இன்றும்
    வாழ்கின்றன. அவன் இறந்து எத்தனையோ நூற்றாண்டுகள்
    ஆகிவிட்டன. அவனது சிந்தனைகளை யாராலும் அழிக்க
    முடியவில்லை. இதையே இன்னொரு குறளில், ஏனைய செல்வங்கள்
    எல்லாம் நம்மை விட்டுப் பிரிந்து செல்லும், அழியும்; ஆனால்
    கல்வியாகிய     செல்வம்     நம்மை விட்டுப்     பிரியாது.
    இன்னொருவருக்குக் கொடுத்தாலும் குறையாது, அழியாது என்று
    கூறுகிறார் வள்ளுவர்.


    கேடு இல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
    மாடு அல்ல மற்றை யவை.



    (குறள் எண்: 400)


    (கேடு இல் = அழிவு இல்லா; விழுச்செல்வம் = சிறந்த செல்வம்;
    மாடு அல்ல = சிறப்பு உடையவை அல்ல)

    கல்வி அழிக்க முடியாத ஒரு செல்வம் என்று வள்ளுவர் கூறிய
    கருத்து எவ்வளவு உண்மையானது! யதார்த்தத்தன்மை வாய்ந்தது!
    எண்ணிப் பாருங்கள்!


    5:1:2 கல்வி - பயிலப் பயில வளரும்
    செல்வம்

    முதலில் கூறிய குறள் மூலம் கல்வியைப் பற்றி இன்னும் ஒர்
    உண்மையைச் சொல்கிறார். தண்ணீர் ஊறும் கிணற்றில், அதைத்
    தோண்டத் தோண்ட மேலும் மேலும் பூமிக்கு அடியிலிருந்து
    தண்ணீர் வந்து கொண்டே இருக்கும். அதைப்போல், ஒருவன்
    கற்க, கற்க, அவனது அறிவு பெருகிக்கொண்டே இருக்கும்
    என்கிறார் வள்ளுவர். வள்ளுவரின் இக்கருத்து மனித சமுதாயம்
    என்றென்றும் ஏற்கத்தக்கது. எனவே
    இக்கருத்து மெய்யறிவின்
    பாற்பட்டது என்பர் அறிஞர்.

    பயில் முறைப் பயிற்சி
    வள்ளுவர் தம் கருத்துகளைச் சொல்லும் பொழுது கையாளும்
    நெறி முறைகளில் (Methodology) ஒன்று எடுத்துக்காட்டுகள்
    மூலம் விளக்குவது. கல்வியின் தன்மையை விளக்க விரும்பிய
    வள்ளுவர் கிணற்றில் ஊறும் தண்ணீரை உவமையாகச்
    சொல்லுகிறார். அதுவும் மணல்பாங்கான நிலத்திலுள்ள கிணறு
    என்கிறார். மணலை எளிமையாகத் தோண்ட முடியும்.
    மணல்பாங்கான நிலத்தில் ஊறும் தண்ணீரும் சுவையானது.
    தண்ணீர் எல்லா உயிரினங்களுக்கும் தேவையானது.
    தண்ணீரின்றி நாம் வாழ முடியாது.

    மணற்கேணி, கேணியில் ஊறும் நீர் - இவற்றின் சிறப்புகளாக
    மேலே குறிப்பிட்ட பண்புகளின் வழியாக, இவ்வுலக மாந்தர்
    (அவர்களின் மனம்) மற்றும் அவர் பெற வேண்டிய கல்வி
    (அறிவு) பற்றி வள்ளுவர் என்ன உணர்த்த விரும்புகிறார்?
    உங்கள் சிந்தனைக்குதிரையைத் தட்டி விடுங்கள்! (put on
    your thinking cap!
    )
    உங்கள் எண்ணங்களை எமக்கு
    அனுப்புங்கள்.     பிறருடைய     எண்ணங்கள் உங்கள்
    கருத்துகளோடு பொருந்தி வருகின்றனவா எனப் பாருங்கள்.
    எண்ணப் பகிர்வுக்கு இருக்கின்றதே E.mail
    வசதி!

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:16:20(இந்திய நேரம்)