12. மாசன மகிழ்ந்தது

 

இதன்கண், இலாவாண நகரத்தின் பக்கத்தே உள்ள இயற்கை அழகும், செயற்கை அழகும், அங்குள்ள மரவகைகளும், செடிகொடிகளும்,சயந்தி நகரமாந்நர் அம் மலைச் சாரலை   அடைதலும்அவர் இயற்றிய பாடி வீடுகளின் இயல்பும் அம்மைந்தரும் மகளிரும் அக்காட்டினூடே பலவகைக் காட்சிகளையும் கண்டு மகிழ்தலும் பிறவும் கூறப்படும்.
 
 

            ஓசை போக்கிய பின்றை ஓவா
            மாசில்சிறப்பின் வான்பூத் தன்ன
            நகரம் வறுவி தாகநாள் கொண்டு
            தகரம் கமழும் தண்வரைச் சாரல்
        5   தக்கோர் உறையும் தாபதப் பள்ளியும்
            கற்றோர் உறையும் கடவுள் தானமும்
            புக்கோர் புறப்படல் உறாஅப் பொலிவின்
            சுனையும் யாறும் இனையவை மல்கி
            மேவர அமைத்த மேதகு வனப்பின்
       10    கோலக் கோயிலொடு குரம்பை கூடிப்

 
              பலவும் மாவும் நலமா நாகமும்
            மகிழும் பிண்டியும் வரிஇதழ் அனிச்சமும்
            வேங்கையும் ஆவும் விளவும் வேயும்
            கோங்கமும் குரவும் கொடிக்குருக் கத்தியும்
       15    நறையும் நந்தியும் அறைபயில் அகிலும்
            வழையும் வாழையுங் கழைவளம் கவினிய
            திகிரியும் தில்லையும் பயில்பூம் பயினும்
            முல்லையும் பிடாவும் குல்லையும் கொன்றையும்
            குருந்தும் வெட்சியும் நரந்தையும் நறவும்
       20    நறும்பா திரியும் நாண்மலர்க் கொகுடியும்
            இறும்பமல் ஏலமும் ஏர்இல வங்கமும்
            பைங்கூ தாளமும் வெண்பூஞ் சுள்ளியும்
            கொய்துஅகை போந்தும் கைதகை காந்தளும்
            திமிசும் தேக்கும் ஞெமையும் ஆரமும்
       25   சேபா லிகையும் செங்கொடு வேரியும்
            தீவாய்த் தோன்றி திலகமும் திரிகோல்
            பகன்றையும் பலாசும் அகன்றலைப் புழகும்
            குளவியும் குறிஞ்சியும் வளவிய மௌவலும்
            சிறுசெங் குரலியும் சிறுசெண் பகமும்
       30   நறும்பொன் கொட்டமும் துறும்புபு கஞலி
            இன்னவை பிறவும் பன்மரம் பயின்று
            கொடிப்பூம் பந்தர் இடைப்பரந்து இயன்ற
            இடம்இடம் தோறும் கடனது வாகித்
            தண்டாக் காதலின் உண்டாட்டு உரைப்பேன்
 
         35   தேரும் வையமும் சிவிகையும் பண்டியும்
            ஊரும் ஊர்தியும் பிடிகையும் உயர்வரை
            மையணி வேழமும் மாவும் பண்ணி
            மடமொழி மகளிரும் மைந்தரும் ஏறிக்
            கடன்மலை பெயருங் காலம் போல
       40   ............விடு தேனிற் பூநகர் புல்லென
            நீரணி பெருமலைச் சாரல் எய்தி
 
              மாசில் வானத்து மதிவிரிந் தன்ன
            தூசக் குடிஞையும் துலாமண் டபமும்
            பல்காழ்த் திரையும் படாகையும் கொட்டிலும்
       45   ஒல்காக் கூடமும் ஒருங்குதலைப் பிணங்கி
            மன்றும் வீதியும் துன்றிவீறு எய்தி
            எவ்இடந் தோறும் அவ்இடத் தாகி
            உயர்மிசை உலகம் நீங்கி நிலமிசை
            அந்தர மருங்கின் நந்தன வனத்தொடு
       50   இந்திரன் உரிமையொடு எண்கொண்டு இறங்கின
            இன்பம் பயந்த இலாவா ணத்துஅயல்
            மன்பெரும் சோலை மலைவயின் போகா
 
              அறைவாய் முரசின் அதிர்கண் அன்ன
            நிறைவாய்த் தண்சுனை நிவந்த நீலத்து
       55   ஒண்மலர் குற்ற மகளிர் அவைநம்
            கண்மலர் அழித்த கவின போன்மென
            நீலமோடு இகன்ற நேரிழை மகளிரைக்
            கோலமொடு கலந்த குமரர் மற்றவை
            தேம்புடை விரியக் கூம்பிடம் காட்டிநும்
       60   கண்நிழல் எறிப்பக் கலக்கமொடு நடுங்கி
            ஒண்நிழல் இழந்த ஒளிய வாகித்
            தொழுவன இரக்குந் தோழிகைக் கொடீஇ
            ஒழிக உள்ளழி இவற்றொடு நீரெனக்
            கழுமிய, வெகுளியர் காணக் காட்டி
       65   மாறாத் தானை மன்னனை வழுத்தி
            ஆறாக் காதலொடு ஆடினர் ஒருசார்
 
              பூந்தண் சாரல் பொங்குகுலை எடுத்த
            காந்தள் கொழுமுகை கண்ட மகளிர்நம்
            கைவிரல் எழில்நலங் கவர்ந்தன இவைஎனக்
       70   கொய்பூங் காந்தள் கொண்ட கையினர்
            எமக்கணி உடையர்என்று எம்மொடு உறையுநீர்
            நுமக்கணி யுடையரை எதிர்ந்தனிர் ஈங்கென
            எழில்விரல் தோறும் இயைந்தணி யாகிய
            கழுமணி மோதிரம் கழித்தனர் களைந்து
       75   கவற்சி கொண்ட காமத் துணைவியர்
            இயற்கை ஓரின் இற்றென மதித்துக்
            காலக் காந்தள் கதழ்விடங் காட்டிக்
            கோலக் கொழுவிரல் ஏல்ஒளி எறிப்ப
            அரும்பென நில்லா அஞ்சின அளிய
       80   விரிந்த இவற்றொடு விடுமின் வேர்உஎன்று
            இரந்தனர் தெருட்டி இயைந்தனர் ஒருசார்
 
              தேங்கமழ் சிலம்பில் பாங்குபட நிவந்த
            வேங்கை விரிஇணர் விரும்புபு கொய்து
            புணர்வெங் காதலர் புனைஇருங் கூந்தற்கு
       85   இணரிவை.அணிமினென்று இரந்தனர் நீட்ட
            விரும்பினர் கொண்டு வீயென வுணரார்
            அரும்பிள வனமுலை ஆகத்து அருகர்ச்
            சிதர்வன கிடந்த சில்லரிச் சுணங்குஇவை
            புதல்வர்ப் பயப்பின் புலந்துகை நீங்கி
       90   மலையக மருங்கின் மரம்பொருந் தினவெனச்
            சிலையணி அழித்த சென்றேந்து புருவத்து
            அரிமலர் நெடுங்கண் அழல்எழ நோக்கித்
            தெரிவை மகளிர் திண்பார் வீசிட
 
              மாலை ஓதி மடவரல் மகளிர்க்குக்
       95   காலை கழியினும் கழியாது இதுவென
            உவந்த உள்ளமொடு நயந்துபா ராட்டி
            அன்மையை உணர்த்த வண்மையில் தாழ்ந்து
            வீழ்பூங் கொம்பின்.வேங்கை நிரந்த
            ஆய்பூங் கானத்து ஆடினர் ஒருசார்
 
        100    அரும்பெறல் காதலொடு அணிநமக் காகி
            மருங்குலும் ஆகமும் வருந்தப் போந்த
            கருங்கண் வெம்முலை அரும்பின் அழித்து
            வண்பொன் தட்டம் மலர்ந்த ஆதலின்
            நண்பிற்கு ஒத்தில நம்மோடு இவையெனக்
      105    கோங்கம் குறுகல் செல்லார் அயல
            மாம்பொழில் சோலை மகிழ்ந்துடன் ஆடும்
 
              ஒள்ளிழை மகளிர்க்கு ஒளிர்மதி அன்ன
            சுள்ளிவெண் சூழ்ச்சி சுரும்புணத் தொடுத்து
            நெறிப்பல கூந்தல் நேயந் தோன்றக்
      110    குறிப்பறிந்து அணிந்து கூடினர் ஒருசார்
 
              நாக நறுமர நவியத்தில் துணித்து
            வேக வெல்வழல் விளிய மாட்டி
            மான்நிணப் புழுக்கலொடு தேன்நெய் விதவையின்
            பன்முறை பகர்ந்து தொன்முறை பிழையார்
      115    நன்னாள் கொண்டு தன்ஐயர் பரியப்
            பொன்னேர் சிறுதினை விளைந்த புனந்தொறும்
            சாயலும் கிளவியும் தம்மொடு நிகர்த்த
            தோகையும் கிளியும் தொக்கவை அகலத்
            துறுகல் வேயிண் குறைகண் டன்ன
      120    தடந்தோள் அசையத் தட்டை புடைத்து
            முடந்தாள் பலவின் முன்றில் நின்ற
            கானவர் மகளிர் காரிகை நோக்கி
            வானவர் மகளிர் அல்லர் ஆயின்
            வளமலைச் சாரல் வரைமிசை உறையும்
      125    இளநல மகளிர் இவரென எண்ணி
            அஞ்சில் ஓதியர் அஞ்சினர் ஒருசார்
 
              எச்சார் மகுங்கினும் இன்னோர் பிறரும்
            விச்சா தரியரின் வியப்பத் தோன்றிச்
            சுனைப்பூக் குற்றும் சுள்ளி சூடியும்
      130    சினைப்பூ அணிந்நும் கொடிப்பூக் கொய்தும்
            மகிழின் வட்ட வார்மலர் தொடுத்தும்
            பவழப் பிண்டிப் பல்இணர் பரிந்தும்
            செண்ணத் தளிரில் கண்ணி கட்டியும்
            மாலை தொடுத்தும் மலைவளம் புகழ்ந்தும்
      135    கோலக் குறிஞ்சிக் குரவை ஆடியும்
            மணிமயில் பீலி மாமயில் தொழுதி
            அணிநலம் நோக்கியும் ஆடல்கண்டு உவந்தும்
            மாதர்ப் பைங்கிளி மழலை கேட்டும்
 
              மகளிர் நாப்பண் மன்னவன் போலத்
      140    துகளணி இரும்பிடி துன்னுபு சூழ
            அந்தண் மராஅத்த பைந்தளிர் வாங்கிக்
            கண்ணயல் பிறந்த கவுள்இழி கடாஅத்துத்
            தண்நறு நாற்றம் தாழ்ப்பத் தவிர்த்துப்
            பெருமையில் பிறப்பினும் பெற்றி போகாச்
      145    சிறுமை யாளர் செய்கை போல
            மூசுதல் ஓவா மிஞிற்றினம் இரிய
            வீசுதல் ஓவா விழுத்தகு தடக்கை
            இருங்களிற்று இனநிரை விரும்புபு நோக்கியும்
 
              கொய்குரல் ஏனலும் குளிர்சுனைப் பாறையும்
      150    மைவளர் சென்னி மரம்பயில் கானமும்
            மலர்ப்பூஞ் சோலையும் திளைத்தல் ஆனார்
            ஆடியும் பாடுயும் கூடியும் பிரிந்தும்
            ஊடியும் உணர்ந்தும் ஓடியும் ஒளித்தும்
            நாடியும் நடந்தும் நலம்பா ராட்டியும்
      155    மைந்தரும் மகளிரும் மணந்துவிளை யாடி
            மைந்துஉற் றனரால் வளமலை புகழ்ந்தென்.