20 . சண்பையுள் ஒடுங்கியது

 

இதன்கண், வாசவதத்தையின் பொருட்டுப் பெரிதும் துன்புற்ற உதயண குமரனுக்குத் தோழர் மெய்ம் மொழிகள் பற்பல எடுத்துக் கூறித் தேற்றுதலும், காமத்தால் உளதாகும் கேடும், யூகி, சாங்கியத்தாய், வாசவதத்தை மூவரும் அவ்விலாவாண நகரத்தின் நீங்கி அங்க நாட்டிலுள்ளதொரு மலைச்சாரலை எய்துதலும் அங்குள்ள துறவோர் இருக்கையின் அழகும், அம் மூவரும் அத்துறவோர் பள்ளியில் வதிதலும், சாங்கியத்தாய் தம்மைப் பிறர் அறியாதிருக்கும் பொருட்டு முயலும் முயற்சியும், காஞ்சனமாலையை உருமண்ணுவா  வாசவதத்தையிடம் அழைத்து வருதலும், யூகி முதலியோர் அவ்விடத்தினின்றும் புறப்பட்டுச் சென்று அவ் அவந்தியின் தலைநகரமாகிய சண்பையை எய்துதலும், அச்சண்பை நகர  மாண்பும், அதனை ஆளும் வேந்தன் சிறப்பும், யூகி முதலியோர் அந்நகரத்திலுள்ள ஒரு வணிகன் இல்லத்தில் பிறர் அறியாதபடி மறைந்து உறைதலும் பிறவுங் கூறப்படும்,
 
              துணிவுடை யாளர் துன்னினர் குழீஇ
            அணியுடை அண்ணற்கு அமைந்தமை காட்டிப்
            படுதிரைப் பௌவத்துக் கடுவளி கலக்கப்
            பொறிஅவிழ்ந்து கவிழ்ந்த பொருகலத்து உய்ந்தோர்
        5   நெறிதிரிந்து ஒரீஇ நீத்துயிர் வழங்காத்
            தீவகம் புக்குத் தாவகம் கடுப்பப்
            பெருந்துயர் உழக்கும் அருந்துபசி மூளத்
            திண்ணிலை வரைப்பில் சினைதொறும் செறிந்து
            கண்நவை உறூஉங் கனிபல கண்டவை
 
         10    நயவரும் நஞ்செனப் பெயர்தெரி வின்மையின்
            ஊழுறுத்து அக்கனி தாழ்விலர் வாங்கித்
            துன்பம் நீக்கும் தோற்றமும் அன்றி
            இன்ப நாற்றமும் இயைந்தன இவையென
            நச்சுபு தெரிந்த நாற்றமும் சுவையும்
       15    ஒப்புமை இன்மையின் உயிர்முதல் தாங்க
            அமரர் காட்டிய அமுதுநமக்கு இவையெனப்
            பசிநோய் தீர அயிறலின் கதுமெனத்
 
              தசைபோழ்ந்து கழற்றித் தபுத்திசின் ஆங்குத்
            தாமரைச் செங்கண் தகைமலி மார்ப
       20   காமத்து இயற்கையும் காணும் காலை
            இறுதியில் இன்பமொடு இனியது போல
            உறுபயன் ஈனா உடம்புமுதல் தபுத்தலின்
 
              பெறுபயம் இதுவெனப் பேணார் பெரியோர்
            வெற்றித் தானையொடு விசயம் பெருக்கிக்
       25   கொற்றம் வேண்டாய் பற்றொடு பழகிய
            ஆர்வப் புனலகத்து அழுந்துவை யாயின்
            ஊர்கடல் வரைப்பின் ஆருயிர் நடுக்குறீஇப்
            பெரும்பேது உற்று விளியுமற்ற அதனால்
            கரும்பேர் கிளவிக் கனங்குழை திறவயின்
       30   கழுமிய காதல் கைவிடல் பொருளெனக்
            காமத்துக் கடையும் காதல் குற்றமும்
            ஏமாப்பு இலவென எடுத்துரை நாட்டி
            அமைச்சத் தொழிலர் விலக்குபு காட்ட
 
              இகுப்பம் ஒடுங்கிய இயல்பினன் ஆகிய
       35   அண்ணல் நிலைமை திண்ணிதின் அறிந்து
            வண்ணக் கோதை வாசவ தத்தைக்குக்
            காதல் கணவன் ஏதம் இன்மை
            அறியக் கூறி அகல்வது பொருள்எனப்
            பொறிஅமைத்து இயற்றிய பொய்ந்நிலம் போகி
 
         40   வேண்டிய அளவில் காண்தகக் கூட்டிக்
            கரந்துநிறம் எய்தும் அரும்பெறல் யோகம்
            யாவரும் அறியாத் தன்மைத்து ஆக
            மூவரும் உண்டு வேறுநிறம் எய்தி
            அந்தண உருவொடு சந்தனச் சாரல்
       45   பெருவரை அடுக்கத்து அருமைத்து ஆகிய
            கல்சூழ் புல்அதர் மெல்லடி ஒதுங்கிப்
 
              பிரிவுதலைக் கொண்ட எரிபுரை வெந்நோய்
            தலைமை நீரின் தண்ணெனத் தெளித்து
            முலைமுதல் கொழுநன் நிலைபெற வேண்டும்
       50   உள்ள ஊர்தி ஊக்கம் பூட்டக்
            கள்ளக் காதல் தாங்இனள் ஆகி
            இமிழ்வினை விச்சையின் இடுக்கண் பட்ட
            மகிழ்மணி நாகர் மடமகள் போல
            யூகி நீதியில் பேதை பிணிப்புண்டு
       55   வேண்டுவயின் சென்றகாலை ஆண்டே
 
              தண்கோல் அல்லது வெங்கோல் புகாஅச்
            செங்கோ லாளன் சேதியம் பெருமலைத்
            தாள்முதல் தழீஇ நாள்மதுக் கமழும்
            கற்சுனை நீலமும் கணிவாய் வேங்கையும்
       60   நற்சினை நறவமும் நாகமும் நந்தியும்
            பருவம் அன்றியும் பயன்கொடுப்பு அறாஅப்
            பலவும் மாவும் குலைவளர் வாழையும்
            இருங்கனி நாவலும் இளமா துளமும்
            ஒருங்குடன் கஞலி உள்ளம் புகற்றும்
       65   மாசின் முனிவரொடு மகளிர் குழீஇயதோர்
            ஆசில் பள்ளி அறிந்துமுன் நாடி
 
              மற்றதன் அகவயின் தெற்றெனத் தெரியும்
            உருமண் ணுவாவின் பெருமுது குரவன்
            அவமில் சூழ்ச்சித் தவமுது மகனொடு
       70   கருமங் கூறிக் கண்ணுற்றுப் பிரியார்
            அணித்தும் சேய்த்தும் அன்றி அமைவுற
            மணிப்பூண் மாதரும் மனம்புரி தோழனும்
            காதல் செவிலியும் கரந்துஅவண் ஒடுங்கி
            மாதவர்த் தெரீஇ மரீஇ ஒழுகப்
 
         75   பள்ளியும் பதியும் மலையும் சேணிடத்து
            உள்ளவை உரைத்துத் தள்ளாத் தவநெறி
            அற்றம் தீர உற்றுப்பிரிந்து ஒழுகிய
            உறுவுடை முதுமகள் ஒருவயிற்று இயன்றமை
            நீப்பிடம் தோறும் யாப்புற அறிவுறீஇ
       80   நாட்ட ஒழுக்கொடு நன்னுதல் இவளை
            வேட்டோன் விட்டுக் காட்டகம் நீந்திக்
            குண்டுநீர்க் குமரித் தெண்திரை ஆடிய
            போயினன் என்னும் பொய்ம்மொழி பொத்தித்
            தீவினை யாளரைத் தெளியக் கூறி
       85   வாய்மொழி யாக வலித்தனள் வழங்கி
            மறுவின் மன்னற்கு உறுதி வேண்டித்
            தண்தழை மகளிரொடு தலைநின்று ஒழுகக்
 
              கண்டனிர் உளிரோ காவலன் மகளையென்று
            ஒண்தொடிக் காஞ்சனை உயிர்நனி நில்லாச்
       90   செல்லல் நோக்கிச் செயற்பாற்று இதுவென
            ஒல்லும் நண்பின் உருமண்ணுவா அவள்
            கொண்டனன் வந்து கோமகள் காட்டிக்
            கருமக் காரணம் அவள்வயின் பேசி
            விண்டுஅலர் கழுநீர் வென்ற கண்ணியொடு
       95   தலைப்படுத் தனனாத் தானவண் போகி
            வண்டுளர் ஐம்பால் வயங்கிழை மாதரை
            ஆற்றுவித்து ஓம்பிப் போற்றுபு தழீஇ
            நீங்கல் செல்லா நெறிமையின் ஓங்கி
 
              யாங்கினிது இருத்துமென்று அறிவினில் சூழ்ந்து
      100    பற்றார் ஆயினும் உற்றார் ஆயினும்
            ஒற்றுவர் உளர்எனின் அற்றம் தருமென
            மற்றுஅவண் ஒடுங்கார் மறைந்தனர் போகி
 
              உருமண் ணுவாவின் பெருமுது குரவன்
            அவமில் சூழ்ச்சித் தவறில் தோழன்
      105    பெரும்புனல் கங்கை பெருவளம் கொடுக்கும்
            அங்க நன்நாட்டு அணிபெற இருந்தது
            எங்கும்நிகர் இல்லது எழில்கிடங்கு அணிந்தது
            பொங்குமலர் நறுந்தார்ப் புனைமுடிப் பொன்கழல்
            விச்சா தரரும் தேவ குமரரும்
      110    அச்சம் கொள்ள ஆடுகொடி நுடங்கிச்
            சத்திக் குடத்தொடு தத்துறல் ஓம்பி
            விளங்குபு துளங்கும் வென்றித் தாகி
            அளந்துவரம்பு அறியா அரும்படை அடங்கும்
            வாயிலும் வனப்பும் மேவிவீற் றிருந்து
      115    மதிலணி தெருவிற்று ஆகி மற்றோர்க்கு
            எதிரில் போக இயல்பமை மரபொடு
            குதிரையும் களிறும் கொடுஞ்சித் தேரும்
            அடுதிறன் மள்ளரும் வடுவின்று காப்ப
            நெடுமுடி மன்னருள் மன்னன் நேரார்
      120    கடுமுரண் அழித்த காய்சின நெடுவேல்
            படுமணி யானைப் பைந்தார் வெண்குடை
            உக்கிர குலத்துள் அரசருள் அரசன்
            வில்திறல் தானை விசயவரன் என்னும்
            நல்திறன் மன்னன் நாளும் காக்கும்
      125    சண்பைப் பெருநகர்ச் சால்பொடும் விளங்கிய
 
 

            முட்டில் வாழ்க்கைச் செட்டியர் பெருமகன்
            மித்திர காமன் மிக்குயர் பெருமனை
            வத்தவன் காதலி வாசவ தத்தைஎன்று
            அத்தகவு அறிந்தோர் அவ்இடத்து இன்மையின்
      130    ஆப்புடை நண்பின் அந்த ணாட்டியும்
            நீப்பருங் காதல் நிலைமைத் தோழியும்
            ஓங்கிய பெரும்புகழ் யூகியும் உகவாக்
            காப்பொடு புறநகர் மேற்படி பிழையாப்
            பூங்குழல் மாதரொடு புகுந்தனர் ஆகி
            ஆங்குஇனிது ருந்தனர் அவ்வழி மறைந்துஎன்.