Primary tabs
இயற்கையில் அமைந்திருக்கும் பொழுதுகளைக் கூட கவிஞர் தம் பாடல்களில் இடம் பெறச் செய்துள்ளார். காலை, மாலை, இரவு என்ற மூன்றையும் பற்றிச் சிறந்த பாடல்கள் பல பாடியுள்ளார்.
கதிரவன் தோன்றுவதற்கு முன்னும், பின்னும் உள்ள காலை நேரம், உலகம் மெல்ல மெல்ல இருளிலிருந்து வெளியே வரும் நேரம். கதிரவனின் தோற்றத்தால் ஏற்படும் ஒளி தரும் காட்சி பாரதிதாசனைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது. அதை மிகச்சாதாரணமான ஓர் உவமை மூலம் விளக்குகிறார்.
(குடும்ப விளக்கு - முதல்பகுதி - ‘ஒருநாள் நிகழ்ச்சி’
வரிகள்: 5-6)
நீலம் நிறைந்த தொட்டியில், சுண்ணாம்பைக் கலந்தால் எவ்வாறு இருக்குமோ அவ்வாறு இருந்தது காலைப் பொழுது என்கிறார் பாரதிதாசன். காலையின் தோற்றத்தை விளக்க வேறு எந்த இடத்திற்கும் செல்லவில்லை. அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் ஒன்றையே உவமையாகக் காட்டுகிறார்.
தொட்டியில் இருக்கும் நீலத்தில், சுண்ணாம்பைக் கலக்கும் பொழுது, நீலத்தின் நிறம் கொஞ்சம் கொஞ்சமாக வெண்மையாக மாறிக் கொண்டிருக்கும். அதைப்போல் இருள் பரந்த இரவு முடிந்து காலைப் பொழுதில், கதிரவனின் தோற்றத்தால் - கதிரவனின் ஒளியால், இருள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி, வெளிச்சம் வரும். இதனை நம் கண் முன்னால் காண்கின்ற ஒரு நிகழ்ச்சியை, ஓர் அழகான உவமை மூலம் எடுத்துக் காட்டி விளக்குகிறார் பாரதிதாசன். கதிரவனின் காலைத் தோற்றத்தையும், அதனால் ஏற்படும் வெளிச்சத்தையும் இதைவிட எளிமையாகச் சொல்லமுடியுமா? அல்லது விளக்கத்தான் முடியுமா? ஓர் இயற்கைக் காட்சியைப் பாமரரும் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் மிகவும் துல்லியமாகக் குறிப்பிடுகிறார் கவிஞர்.
மாலைப் பொழுது இயற்கை தரும் இனிய பொழுது எனப் பல புலவர்கள் பலவாறு தம் கற்பனை வளத்திற்கேற்பப் பாடி உள்ளனர். ஆனால் பாரதிதாசன் மிகச் சுருக்கமாக,
கதிரவனை வழியனுப்பிக்
கனிந்த அந்திப்போது
(காதல் நினைவுகள்: !)
என்று சுவையாகக் குறிப்பிடுகின்றார். கதிரவன் முழுமையாக மறைந்து இன்னமும் இருள் சூழவில்லை. அந்த நிலையை மிக அழகாகக் ‘கதிரவனை வழியனுப்பி’ என்று கூறுகிறார். இன்னும் கதிரவன் முழுமையாகப் போகவில்லை என்பதை நயமாக எடுத்துரைக்கிறார்.
காலைப் பொழுதையும் மாலையையும் பற்றிப் பாடிய கவிஞர்களின் எண்ணிக்கையை விட இரவைப் பற்றிப் பாடிய கவிஞர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு.
முரண் கொண்ட மாடு, தன்னைக் கட்டுப்படுத்தும் மூக்குக் கயிற்றையும் மீறி, பக்கத்திலிருக்கும் சேற்றில் வண்டியைக் குடை சாய்த்தால் எப்படி இருக்கும்? அதைப் போல் இருக்கிறதாம் இரவு என்கிறார் பாரதிதாசன்.
மிக்க முரண்கொண்ட மாடு - தன்
மூக்குக் கயிற்றையும் மீறிப்
பக்க மிருந்திடும் சேற்றில் - ஓடிப்
பாய்ச்சிடப் பட்டதோர் வண்டிச்
சக்கரம் போலிருள் வானில் - முற்றும்
சாய்ந்தது சூரியவட்டம் !
புக்க பெருவெளியெல்லாம் - இருள்
போர்த்தது.
(இரண்டாம் தொகுதி - ‘மாவலிபுரச்செலவு’ - 4-வது பாடல்)
(புக்க = செல்லும்)
இங்குச் ‘சேறு’ என்பதை இருளுக்கு ஒப்பிடுகிறார்.
கதிரவனின் வட்ட வடிவத்தை வண்டியின் சக்கரத்துடன் ஒப்பிடுகிறார். கதிரவன் மேற்குத் திக்கில், கடலுக்குள், மறைவதை ‘முற்றிலும் சாய்ந்தது சூரிய வட்டம்’ என்று குறிப்பிடுகிறார். சக்கரம் சுழலும்போது ஒரு வகையான ஒளிவீசும். அது சேற்றினுள் மறைந்த பின் அந்த ஒளி முழுவதுமாக மறைந்துவிடும். நம் அனுபவத்திற்கு உட்பட்டவைகளையே உவமையாகச் சொல்வது, பாரதிதாசனின் தனித்தன்மை.