Primary tabs
பாரதிதாசனின் இசைப் பாடல்களில் காதல் பாடல்களும் இடம் பெற்றுள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தொழிலாளியின் காதல் எண்ணங்களை வெளிப்படுத்துவதாய் இருக்கின்றன. வண்டிக்காரன், மாடு மேய்ப்பவன், பாவோடு பெண்கள், தறித்தொழிலாளி நினைவு, உழவன் பாட்டு, உழத்தி, ஆலைத் தொழிலாளி, இரும்பாலைத் தொழிலாளி, கோடாலிக் (கோடரி) காரன், கூடைமுறம் கட்டுவோர், பூக்காரி, குறவர், தபால்காரன், சுண்ணம் இடிக்கும் பெண்கள், ஓவியக்காரன் என்று காதல் பாடல்களைப் படைத்துப் புதுமை செய்துள்ளார் பாரதிதாசன். இந்தத் தொழிலாளிகளின் தொழில் சார்ந்த எண்ணங்களுடன் காதலை வெளிப்படுத்தியுள்ள தன்மை சிறப்பாக அமைந்துள்ளதைக் காணமுடிகிறது.
களை எடுக்கின்ற உழத்திப் பெண்ணைப் பார்த்து, காதலன் பாடும் பாட்டின் கற்பனை நயத்தைப் பாருங்கள்.
களை எடுக்கின்றாள் - அதோ
கட்டழகுடையாள் சிற்றிடையாள் அதோ
களை எடுக்கின்றாள்!
வளவயல்தனில் மங்கைமாருடன்
இளங் கரும்பிடைச் செங்கரும்புபோல்
களையெடுக்கின்றாள்!கவிழ்ந்த தாமரை
முகம் திரும்புமா? - அந்தக்
கவிதை ஓவியம்
எனை விரும்புமா?அவிழ்ந்து வீழ்ந்த கருங்கூந்தலாம்
அருவி நீரில் எப்போது மூழ்கலாம்? -(களை)
செந்நெல் காப்பது
பொதுப்பணி செய்யல்! - ஆம்
என்ற நினைவினால்
என்னருந் தையல்மின்னுடல் வளைய வளையல்கள் பாட
விரைவில் செங்காந்தள் விரல்வாட(களை)
(இசையமுது, ‘உழத்தி’)
என்னும் பாடலில் குனிந்து களை எடுக்கும் பெண்ணைக் கவிழ்ந்த தாமரை என்று பாரதிதாசன் பாடியுள்ளார். மலர்ந்த தாமரை என்று இயல்பாகக் கவிஞர்கள் தாமரையைப் பாடுவார்கள். ஆனால் கவிழ்ந்த தாமரை என்று பெண்ணின் முகத்தைப் பாவேந்தர் உவமைப்படுத்தியுள்ள திறம் வியப்பைத் தருகிறது அல்லவா?
களை எடுத்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணின் கருங்கூந்தல் அவிழ்ந்து தொங்குகிறதாம். அது, பாரதிதாசனுக்கு அருவி நீரை நினைவு படுத்துகிறதாம். அத்துடன் அவர் நிறுத்தவில்லை. அந்தக் கருங்கூந்தலாகிய அருவி நீரில் எப்போது முழுகலாம் என்று ஒரு கேள்வியும் கேட்டிருக்கிறார் பாருங்கள்.
மேலே படித்த பாடலில் ஒரு காதலன் தனது காதலியைப் பார்த்துப் பாடியதை நாம் கண்டோம். அடுத்த பாடலில் ஆலைக்கு வேலைக்குப் போன காதலனை எதிர்பார்த்து இருக்கும் காதலி பாடுகிறாள் பாருங்கள்.
ஆலையின் சங்கே நீ ஊதாயோ? மணி
ஐந்தான பின்னும் பஞ்சாலையின் சங்கே ஊதாயோ?
காலை முதல் அவர் நெஞ்சம் கொதிக்கவே
வேலை செய்தாரே! என் வீட்டை மிதிக்கவே(ஆலையின்)
மேலைத் திசைகளில் வெய்யிலும் சாய்ந்ததே
வீதி பார்த்திருந்த என் கண்ணும் ஓய்ந்ததே
மேலும் அவர் சொல் ஒவ்வொன்றும் இன்பம் வாய்ந்ததே
விண்ணைப் பிளக்கும் உன் தொண்டையேன் காய்ந்ததே(ஆலையின்)
குளிக்க ஒரு நாழிகையாகிலும் கழியும்
குந்திப் பேச இரு நாழிகை ஒழியும்
விளைத்த உணர்வில் கொஞ்ச நேரம் அழியும்
வெள்ளி முளைக்கு மட்டும் காதல்தேன் பொழியும்(ஆலையின்)
பஞ்சாலைக்கு வேலைக்குப் போன தன் காதலன் வருவான் என்று மாலையில் தலைவி எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். தலைவன் இன்னும் வரவில்லை. ஆலையின் சங்கு ஊதினால்தானே தலைவன் வருவான். சங்கு ஏன் இன்னும் ஊதவில்லை என்று சிந்தித்தாள். எப்போதும் சங்கின் ஒலியானது விண்ணைப் பிளக்கும் வேகத்தில் ஒலிக்கும். அவ்வாறு விண்ணைப் பிளக்கும் அளவிற்கு ஒலித்ததால் அதன் தொண்டை வறண்டு விட்டதோ என்று அவள் நினைக்கின்றாளாம். எவ்வளவு அழகான கற்பனை?
ஆலையின் சங்கு ஓர் உயிரற்ற பொருள், மின்சாரத்தின் விசையால் ஒலிக்கும் இயல்புடையது. அது உரிய நேரம் வந்தால் ஒலிக்கும். தலைவன் சீக்கிரம் வர வேண்டும் என்று கருதியதால் அவளது மனம் சங்கு ஒலிக்கும் நேரம் கடந்து விட்டதாகக் கருதுகிறது. அதிகமாக ஒலி எழுப்பினால் மனிதனின் தொண்டை வறண்டு விடுவது போல் ஆலைச் சங்கின் தொண்டையும் வறண்டு விட்டதோ என்று நினைக்கிறாள். இவ்வாறு உயிரற்ற பொருளை உயிருடைய பொருள்போல் கற்பனை செய்ய வைத்திருப்பது காதல் மயக்கமா?
இவை போன்ற காதல் பாடல்கள் பாவேந்தரின் இசையமுது நூலில் பல உள்ளன. அவற்றை நீங்கள் இணைய நூலகத்தில் கற்கலாம்.