தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அபிராமி அந்தாதி

  • 6.2 அபிராமி அந்தாதி

    அந்தாதி இலக்கியங்களுள் சிறந்ததாகப் போற்றப்படுவது அபிராமி அந்தாதி ஆகும். அபிராம பட்டர் இந்நூலின் ஆசிரியர். திருக்கடவூரில் எழுந்தருளியுள்ள அபிராமி இந்த அந்தாதியின் பாட்டுடைத் தலைவி ஆவாள்.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் திருக்கடவூர் என்பது. இது மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று சிறப்புகளை உடையது. பாற்கடலில் தேவர்கள் அனைவரும் அமுதத்தைக் கடைந்து எடுத்து வந்து இத்தலத்தில் வைத்தனர். மீண்டும் எடுக்க முயலுகையில் அக்குடமே உருவமாகச் சிவன் தோற்றமளித்ததைக் கண்டனர். அமுதம் கிடைக்காத நிலையில் திருமாலையும் சிவனையும் வேண்டினர். திருவருள் கிடைக்கவில்லை. அம்பிகையை வணங்க மறந்த பிழை உணர்ந்து சிவபிரானையும் அபிராமியையும் பூசித்து வணங்கினர். பின் அமுதம் கிடைத்தது. ஊரில் கடம் (குடம்) அமையப் பெற்றதால் கடவூர் என்ற பெயர் வந்தது. இத்தலத்தில் உள்ள அபிராமி அம்மை மீது அளவற்ற பக்தி செலுத்தி வந்த அபிராம பட்டர் இயற்றிய நூலே அபிராமி அந்தாதி ஆகும். காப்புச் செய்யுள் ஒன்றும் நூற்பயன் செய்யுள் ஒன்றும் சேர இந்த அந்தாதி நூற்று இரண்டு செய்யுட்களை உடையது.

    6.2.1 நூலாசிரியர்

    அபிராம பட்டர் சோழநாட்டுத் திருக்கடவூரில் பிறந்தவர், அந்தணக் குலத்தவர், சோதிடத்தை நன்கு பயின்றவர், பரம்பரையாகச் சிறந்த பக்தி நெறியுடைய குடும்பத்தில் பிறந்து வாழ்ந்தவர். தமிழ், வடமொழி ஆகிய இரு மொழிப் புலமையும் உடையவர். அம்பிகையை வணங்கித் திருவருள் இன்பத்தில் திளைத்துப் பித்தரைப்போல் சமயவெறி கொண்டு உலாவினார். இவருடைய பக்தி நெறியை அறியாத சிலர் இவரை அந்தண நெறிக்கு அப்பாற்பட்ட செயல்களைச் செய்கின்றார் என்று இழித்துப் பேசினார்கள். அபிராம பட்டர் அதற்கெல்லாம் செவி சாய்த்தார் இல்லை.

    • மன்னரும் பட்டரும்

    அந்நாளில் தஞ்சையில் அரசாண்டவர் மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோசி. காவிரிப் பூம்பட்டினத்திற்குச் சென்று புகார் முகத்தில் (காவிரியாறு கடலில் கலக்கும் இடம்) குளித்துவிட்டு மீண்டவர், திருக்கடவூரில் தங்கினார்.

    வழக்கம்போல் அங்குத் தங்கிய மன்னர் அபிராமியைத் தொழுது வெளியேறும்போது சந்நிதியில் பட்டரைக் கண்டார். யோகநிலையினை எய்தியவராகத் தோன்றிய அன்னாரைக் கண்டபின் அருகே இருந்தவர்களை அழைத்து இவர் யாவர் என வினவினார்.

    அருகே வந்தோர் மன்னவருடைய கேள்விக்கு, இந்த மனிதர் பித்துப் பிடித்தவர் போன்றுள்ளார், அந்தணர்க்குரிய முறையைக் கடந்து ஒரு தேவதையை வழிபட்டுக் கொண்டுள்ளார் என்றனர். மன்னர் அவரோடு பேச வேண்டும் என்று விரும்பினார். பிரதமை நாளாகிய அன்று, ''அமாவாசை இன்று உண்டா? எவ்வளவு நாழிகை இருக்கிறது?'' என்று பட்டரை நோக்கி மன்னர் கேட்டார். பட்டரின் உள்ளத்தில் முழுமதியாக, அன்னையின் திருமுகம் ஒளிவீசிக்கொண்டிருந்தது. இத் தரிசனத்தைக் கண்டு திளைத்தபடி இருந்த பட்டர் இன்று பௌர்ணமி அல்லவா? என்றார்.

    அருகில் இருந்தவர் அனைவரும் பிரமித்தனர். மன்னரிடமும் இத்தகைய செருக்கோடு தம்மையறியாமல் பதில் சொன்னாரே இவர் என்று எண்ணித் தாம் கூறியது உண்மையாகி விட்டது என்று மகிழ்ந்தனர். மன்னர் இரண்டாம் சரபோசியும் குழுமியிருந்தவர் கூறிய வார்த்தைகள் உண்மையென்றே கருதிச் சென்றுவிட்டார். மன்னர் அங்ஙனம் கருதிச் சென்றபின் சுய உணர்வு பெற்ற பட்டர், மன்னனிடம் முறை தவறி நடந்து கொண்டதற்கு உளம் வருந்தினார். எல்லாம் அம்பிகையின் திருவிளையாடலே என எண்ணி இவ்வந்தாதியைப் பாடத் தொடங்கினார்.

    • மன்னனும் கனவும்

    மன்னன் சரபோசி, பட்டரைப் பற்றிச் சிரத்தை கொள்ளாது சென்றாலும், பட்டருடைய மாட்சிமை மிகுந்த தோற்றம் அவர் உள்ளத்தே பதிந்து கிடந்தது. மன்னன் படுத்துத் துயில் கொள்ளும்போது ஒரு கனவு கண்டார்.

    முழுநிலவு உதயமானது போலவும், தேவி அபிராமியம்மை தான் அணிந்திருந்த திருத்தோட்டைக் கழற்றி வீசி அருள, அது (அந்நாளில்) அமாவாசை இருட்டில் சுடர் விட்டுத் தண்ணிலவு பொழிந்து சந்திரன் போல விளங்கவும், அபிராம பட்டர் அவ்வமயம் அருகேயிருந்து முழுமதி வீசி அருளுவதைப் போலவும் கண்டார். தாம் கண்டது கனவாகிலும்கூட, அம்பிகையின் தரிசனத்தை ஒருவாறு பெற்றமையால் மகிழ்ச்சி மேலிட விழித்தெழுந்தார். அபிராம பட்டரின் உண்மைச் சிறப்பையுணர்ந்து, அவர் இல்லிற்குச் சென்று மன்னித்தருள வேண்டினார்.

    • மன்னனின் கொடை

    பட்டருக்கு விளைநிலங்கள் பலவற்றை இரண்டாம் சரபோசி மன்னர் தானமாகக் கொடுத்தார். பாசபந்தத்திற்கு அப்பாற்பட்ட பட்டர் இணங்காவிடினும் மீண்டும் வற்புறுத்தி நிலங்களை அவருக்கு வழங்கினார். அம்பிகையின் திருவருளைப் பெற்ற அபிராம பட்டர் நூறு பாடல்களைப் பாடி அந்தாதியை நிறைவு செய்தார்.

    கள்ளவாரணப் பிள்ளையார் பதிகம், அபிராமியம்மைப் பதிகம்; அமுதகடேசர் பதிகம் ஆகியவற்றையும் இவர் பாடினார்.

    • பட்டர் நிகழ்த்திய அற்புதம்

    அபிராமி பட்டரைப் பற்றிய இவ்வரலாற்றை வேறுவிதமாகவும் கூறுவர். மன்னன் சரபோசி கேட்ட வினாவிற்கு அபிராமபட்டர் நிதானம் தவறி இன்று பௌர்ணமி திதி என்று கூறினார். அதைக் கேட்டுச் சினமடைந்த மன்னன், 'நீர் போய்வரலாம்' என்று அனுப்பிவிட்டான்.

    பின்னர்ப் பட்டர் தாம் கூறியது தவறு என்று எண்ணி வருந்தி, அபிராமி வல்லியே இதனின்று என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணி அவள் எழுந்தருளியுள்ள கோயிலுக்குச் சென்று, அரிகண்டம் பாடத் தொடங்கினார். அரிகண்டம் என்றால் என்ன? நூறு கயிறுகளைக் கொண்டு உறி ஒன்று கட்டப்படும். அதன் கீழே தீக்குழி ஒன்று அமைத்து எரி ஊட்டப்படும். அந்த உறியின் மேல் இருந்து தனது தெய்வத்தைக் குறித்து வேண்டிப்பாடுவது மரபு. பாடும்போது அத்தெய்வத்தின் அருள் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு பாடலாகப் பாடி முடிக்க வேண்டும். அருள் கிடைக்காவிட்டால் ஒரு பாடல் பாடி முடித்ததும் ஒரு கயிற்றை வெட்டிவிடுவர். இவ்வாறு எல்லாக் கயிறுகளும் வெட்டப்பட்டால் புலவர் தீக்குழியில் விழுந்து உயிர் துறப்பார். அதற்கும் முன்பாகத் தெய்வம் அருள் செய்வது மரபு. பட்டர் இவ்வாறாக உறி கட்டி 'உதிக்கின்ற' எனத் தொடங்கும் பாடலை முதலாக வைத்துப் பாடத் தொடங்கினார். இவ்வாறு எழுபத்து எட்டுப் பாடல்கள் பாடி முடித்ததும்; எழுபத்து எட்டுக் கயிறுகள் அறுக்கப்பட்டன, அடுத்து 'விழிக்கே அருள் உண்டாம் அபிராம வல்லிக்கு' (79) என்று பாடத் தொடங்கும் போது அம்பிகை எழுந்தருளித் தனது திருத்தோடு ஒன்றை வானமண்டலத்தில் கழற்றி வீசியருள, அது சந்திரனைப்போல் ஒளி வீசியது. அம்பிகை பட்டரை நோக்கி ''நீ கவலைப்பட வேண்டாம், நீ கூறிய வார்த்தையை மெய்யாக்கி விட்டோம்'' என்று கூறி மறைந்தருளினாள்.

    திருத்தோடு வானத்தில் எழுந்தருள, மன்னன் இரண்டாம் சரபோசியும் பிறரும் 'இன்று அமாவாசையை அடுத்த நாளாகிய பிரதமை அல்லவா? இன்று முழுநிலவு உதயமாயிற்றே என்று ஆச்சரியம் அடைந்தார்கள். அடியவராகிய அபிராமபட்டரே இந்த அற்புதத்தை நிகழ்த்திவிட்டார் என்று எண்ணினர். பின்னர் மன்னரும் மற்றவரும் பட்டரை வணங்கினர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 10:36:46(இந்திய நேரம்)