Primary tabs
-
5.3 இடைக்காலத்தில் துணைவினைகள்
இடைக்காலத்தில் மாட்டு, ஒழி, வை, ஆக்கு, கூடு போன்ற புதிய புதிய துணைவினைகள் வழக்கில் வரலாயின. சங்க காலத்தில் வழங்கியனவாகக் கூறப்பட்ட துணைவினைகள் பலவும் இடைக்காலத்தில் வழங்கின. இடைக்காலத்தில் புதிய துணைவினைகளின் ஆட்சியைக் கீழ்க்கண்ட சான்றுகளால் அறியலாம்.
சான்று :மாட்டு
நம்மை மறந்தாரை நாமறக்க மாட்டேமால்
(சிலம்பு, 7:32-3)(மறக்க மாட்டேம் = மறக்க மாட்டோம் ;ஆல் = அசை)
ஒழி
. . . .அவன்முன் அயர்ந்து ஒழிவாய் அலை
(மணிமேகலை, 21:112)
(அயர்ந்து - மறந்து ;அயர்ந்து ஒழிவாய் = மறந்து ஒழிவாய்).
வை
ஆறைம் பாட்டினுள் அறியவைத்தனன் என்
(மணிமேகலை, பதிகம்.95)
(அறிய வைத்தனன் = அறியச் செய்தான்)
ஆக்கு
அந்தரந் திரியவும் ஆக்குமிவ் வருந்திறன்
(மணிமேகலை, 10;80)
(திரியவும் ஆக்கும் = திரியச் செய்யும்)
கூடு
குடங்கையின் நொண்டு கொள்ளவும் கூடும்
(சிலம்பு, 10;83)(குடங்கையின் = வளைந்த கையால் ; நொண்டு = முகந்து கொள்ளவும் கூடும் = உட்கொள்ளவும் தகும்).