Primary tabs
5.0 பாட முன்னுரை
இருபதாம் நூற்றாண்டின் உரைநடை, இலக்கியத்தின் ஒரு பிரிவாக மதிக்கப்படும் அளவிற்கு வளம் பெற்று இருந்தது. இவ்வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணமாக அமைந்தவர்கள் மறைமலை அடிகளாரும், திரு.வி.கல்யாணசுந்தரனாரும் ஆவார்கள். இளமையிலேயே தமிழ்மொழி கற்று, சங்கப் புலவர் போல் பாடும் ஆற்றல் பெற்ற மறைமலை அடிகள் ஆங்கில உரைநடைக்கு இணையாகத் தமிழ் உரைநடை அமைய வேண்டும் என்ற பேரார்வம் கொண்டவர். அதன் பயனாய், சங்கநூல் ஆய்வுகளையும், சமய நூல் ஆராய்ச்சிகளையும், மொழி பெயர்ப்பு நூல்களையும், நாவல்களையும், கட்டுரைகளையும், வரலாற்று அறிவியல் கருத்துகளையும் உரைநடையில் எழுதித் தந்தார். தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கிய பெருமை இவருக்கு உண்டு.