தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சேதுப்பிள்ளையின் வாழ்வும் பணியும்

  • 1.1 சேதுப்பிள்ளையின் வாழ்வும் பணியும்

    அந்நாட்களில் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் பொது மேடைகளில் பேசும்போது ஆங்கிலத்தில் பேசுவதே பெருமை என்று கருதுவர். ஆனால் வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கிய சேதுப்பிள்ளை மேடை தோறும் தமிழில் முழங்கினார். எனவே, அவரது வாழ்வும் பணியும் குறித்து சில செய்திகளை அறிந்து கொள்வது தமிழ் மாணவர்களுக்குத் தேவையென்றே கருதலாம்.

    இரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் 1896ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 2ஆம் நாள் பிறந்தார். பெற்றோர்; பிறவிப் பெருமான் பிள்ளை - சொர்ணம்மாள் ஆவர். நெல்லை மாவட்டம் என்று அழைக்கப்படும்

    திருநெல்வேலி மாவட்டத்தில் இராசவல்லிபுரம் என்பது இவர் பிறந்த ஊர் ஆகும். இரா.பி. சேதுப்பிள்ளையின் தலைப்பெழுத்துக்களாக அமைந்த ‘இரா’ - என்பது இராசவல்லி புரத்தையும் ‘பி’ என்பது ‘பிறவிப் பெருமான் பிள்ளை’ அவர்களையும் குறிப்பன.


    சேதுப்பிள்ளை

    இரா.பி. சேதுப்பிள்ளை இளமையில் தமிழ் நீதி நூல்களைக் கற்றார். பாளையங் கோட்டையில் சேவியர் உயர்நிலைப் பள்ளியிலும், நெல்லை இந்துக் கல்லூரியிலும் பயின்றார். பின்னர் சென்னையிலுள்ள பச்சையப்பன் கல்லூரியில் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார். தாம் படித்த பச்சையப்பன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர், சென்னை - சட்டக் கல்லூரியில் படித்துச் சட்டத்தில் பட்டம் பெற்றார்.

    சேதுப்பிள்ளை 1923ஆம் ஆண்டில் திருநெல்வேலியில் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டு பணியாற்றத் தொடங்கினார். வழக்கறிஞராக வாழ்க்கை நடத்தினாலும் வளர்தமிழில் வற்றாத பற்றுக் கொண்டிருந்தார். சேதுப்பிள்ளையின் செந்தமிழ்த் திறம் அறிந்த அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அவரைத் தமிழ் அறிஞராக ஏற்றுக் கொண்டது. 1936இல் சென்னைப் பல்கலைக் கழகம் சேதுப்பிள்ளையைத் தமிழ்ப் பேராசிரியராக அமர்த்தியது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராய் சேதுப்பிள்ளை வீற்றிருந்த 25 ஆண்டுக் காலம் தமிழுக்குத் தகைமை சேர்ந்த காலம் எனலாம். சேதுப்பிள்ளை தம் எழுத்தாலும் பேச்சாலும் தமிழுக்குப் பெருமையும் தமிழ் உரைநடைக்குச் சிறப்பையும் சேர்த்தார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 30-07-2018 16:46:42(இந்திய நேரம்)