Primary tabs
-
1.3 சங்க இலக்கியம் - பத்துப்பாட்டு
பத்துப்பாட்டில் ஆற்றுப்படை நூல்களிலும் முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி ஆகிய நூல்களிலும் திருமாலைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அவற்றைப் பார்க்கலாமா?
திரு ஆவினன்குடி பற்றிச் சொல்லும்போது புலவர் நக்கீரர் திருமாலைப் ‘புள் அணி நீள் கொடிச் செல்வன்’ (அடி.151) என்றும்; காத்தற் கடவுள் என்றும் சுட்டுகின்றார்.
சிறிய யாழை வைத்திருக்கும் பாணனை ஆற்றுப்படுத்தும் சிறுபாணாற்றுப்படையில்,
கா எரியூட்டிய கவர்கணைத் தூணிப்
பூ விரி கச்சைப் புகழோன் தன்முன்
பணி வரை மார்பன், பயந்த நுண்பொருட்
பனுவலின் வழாஅப் பல்வேறு அடிசில்(239 -242)
பற்றிப் பேசும்போது வீமன் மடை (சமையல்) நூலில் குறிப்பிட்டபடியே ஒய்மாநாட்டு நல்லியக்கோடன் அரண்மனையில் பல்வேறு வகை உணவுகள் சமைத்தனன் என்ற குறிப்பு உள்ளது.
அர்ச்சுனன் காண்டவ வனத்தைத் தீயிட்டுக் கொளுத்திய செய்தியும் கூறப்படுகின்றது.
பெரும்பாணாற்றுப்படையில் திருமாலைப் பற்றி ஆங்காங்குச் செய்திகள் உள்ளன.
இரு நிலம் கடந்த திருமறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை( 29-30)(திருமறு மார்பு = திருமகள் பொருந்திய மார்பு, முந்நீர் = கடல்)
என ஈரடியால் மூவுலகும் அளந்த திருமாலைக் காட்டுகின்றார்.
. . . . . . . . . . . .நீடு குலைக்
காந்தள் அம்சிலம்பில் களிறு படிந்தாங்கு
பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன்(அடி.371-373)(காந்தள் = மலர், சிலம்பு = மலை)
மலையில் படிந்த யானைபோல, பாம்பணையில் பள்ளி கொண்ட திருமால் என விளக்கி, திருவெஃகாவில் திருமால் வழிபாடு இருந்ததைக் காட்டுகின்றார்.
கலித்தொகையில் பொதுவனின் ஏறு தழுவிய வீரத்தையும் வெற்றியையும் காட்டப் பாரதப் போர்க்களம் உவமையாக வந்துள்ளது. புறநானூற்றில் மன்னனின் வெற்றியையும் கொடைச் சிறப்பையும் காட்டும் பொழுது கௌரவர் பற்றிய குறிப்பும், போர்க்களம் பற்றிய குறிப்பும் உள்ளது.
பெரும்பாணாற்றுப்படையில்,
ஈர் ஐம்பதின்மரும் பொருது களத்து அவிய
பேர் அமர்கடந்த கொடுஞ்சி நெடுந்தேர்
ஆராச் செருவின் ஐவர் போல(415 - 417)(ஈர்ஐம்பதின்மர் = நூற்றுவர், களம் = போர்க்களம்)
எனப் பாரதப்போர் நிகழ்வும், வெற்றியும் பற்றிப் பாடுகின்றார் உருத்திரங் கண்ணனார். எனவே சேரநாட்டிலும் தொண்டை நாட்டிலும் தோன்றிய இலக்கியங்கள் பாரதப்போர் பற்றிய குறிப்பை மன்னன் பெற்ற வெற்றியைப் பாடும்போது பதிவு செய்துள்ளன.
நீல்நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவற் பயந்த பல் இதழ்த்
தாமரைப் பொகுட்டின் காண் வரத்தோன்றி(403-404)(நெடியோன் = திருமால், நான்முகன் = பிரமன், பொகுடு = (தாமரை) மலர்)
என்னும் அடிகள் திருமாலின் கொப்பூழ் - அதில் இருந்து தோன்றிய தாமரை மலரில் பிரமன் தோன்றினான் என்று சுட்டுகிறது.
முல்லைப்பாட்டின் தொடக்கத்தில் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வணிகனார் மகன் நப்பூதனார், திருமால் சக்கரப்படையும் சங்கும் கைகளில் உடையவன் என்பதை,
நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல(1-3)(நேமி = சக்கரம், வலம்புரி = சங்கு, மாதாங்கு = திருமகளைத் தாங்கியிருக்கிற, மாஅல் = திருமால்)
என்றும், மாவலியிடம் மூன்றடி மண்கேட்டுப் பின் நெடியோனாய் உலகம் அளந்தவன் என்றும் திருமால் பற்றிய செய்திகளை மூன்று அடிகளில் பெய்து வைத்துள்ளார். ஆக, திருமால் தோற்றப் பொலிவு வெளிப்படையாகவும், அவதாரச் சிறப்புக் குறிப்பாகவும் பெறப்படுகின்றது.
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடிய புலவர் மாங்குடி மருதனார், மறவர்கள் திருமாலுக்குரிய ஓண நாளில் தேறல்(கள்) உண்டு மகிழ்ந்து திரிந்தனர். இதை,
கணம்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்
மாயோன் மேய ஓண நல்நாள்
(590-591)(மாயோன் = கண்ணன், ஓண நல்நாள் = கண்ணன் பிறந்த நாள்)
எனப் பாடியுள்ளார்.
ஆக, திருமாலுக்குரிய திருவோண நாளை மதுரை மாநகரில் சங்ககாலத்தில் சிறப்பாக மக்கள் கொண்டாடினர் என்பதை அறிகின்றோம்.
சங்க இலக்கியத்தில்,
•
அவதாரம் பற்றிய செய்திகள் குறிப்பாக மட்டும் உள்ளன.
•
இராமன், வராகம் (கேழல்) ஆகிய அவதாரங்கள் மட்டும் பெயரோடு உள்ளன.
•
திருமால் பற்றிய செய்திகள் பரிபாடலிலும் கலித்தொகையிலும் அதிகமாக உள்ளன.