தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P202242.htm-தொண்டரடிப் பொடியாழ்வார்

  • 4.2 தொண்டரடிப் பொடியாழ்வார்

    சோழநாட்டில் திருமண்டங்குடியில் மார்கழி மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்தவர்.

    இவர் அருளிச் செய்த திவ்வியப் பிரபந்தங்கள் இரண்டு. அவை:

    1. திருமாலை - 45 பாசுரங்கள்

    2. திருப்பள்ளி எழுச்சி - 10 பாசுரங்கள்

    இவர் இயற்பெயர் விப்ரநாராயணர்.


    4.2.1 வழிபாடு

    பச்சைமா மலைபோல் மேனிப்
         பவளவாய்க் கமலச் செங்கண்
    அச்சுதா! அமர ரேறே
         ஆயர்தம் கொழுந்தே! என்னும்

    இச்சுவை தவிர யான்போய்
         இந்திர லோக மாளும்
    அச்சுவை பெறினும் வேண்டேன்
         அரங்கமா நகரு ளானே!

    (873)

    வேதம் மனிதனுக்கு ஆயுள் 100 ஆண்டுகள் என்கின்றது. அதில் பாதி உறக்கத்திலும் மீதி பிள்ளைப் பருவம், முதுமை, பிணி முதலியனவற்றிலும் கழிகின்றது. ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மாநகருளானே (874) எனப் பெருமாளின் நாமம் சொல்லுவதில் பெரும் பேறு அடைந்ததாகக் காட்டுகின்றார் ஆழ்வார்.

    • அவனையே சரணடைதல்

    ஊர் இல்லை; உரிமையாகக் காணி இல்லை; உறவு இல்லை; உன்னைத் தவிர எனக்கு யாரும் இல்லை. எனவே துன்பம் களைவதும் நீ தான் (900) எனக் கதறியழுது அவனையே அடைக்கலம் என எண்ணுகிறார். முழுமையாகத் தன்னை இறைவனிடம் ஒப்படைப்பது சரணாகதி ஆகும். வைணவத்தின் உயிர்க்கொள்கையன்றோ அது! எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் இறைவனை வழிபட்டு அவனையே சரண் அடைந்தால் வீடுபேறு கிட்டும்; உய்தி பெறலாம். அவனை நம்பி அவனைத் தவிர வேறு துணையில்லை என்று நம்மை ஒப்படைத்து விட்டால் உய்தி பெறலாம் எனக் காட்டும் பாசுரம் (901) வைணவ சமயத்தின் சாரத்தை விளக்குகிறது.

    தாவி அன்று உலகம் அளந்து மாவலி தலையில் திருவடி வைத்தவனே! உன்னைத் தவிர யாரையும் சேவிக்க (வணங்க) மாட்டேன்; ஆவியே! அமுதே! என் ஆருயிர் போன்றவனே! (906) எனச் சிக்கெனச் செங்கண்மாலைப் பிடித்துக் கொள்கின்றார் தொண்டரடிப் பொடி ஆழ்வார்.

    4.2.2 திருப்பள்ளி எழுச்சி

    இவர் அருளிய ‘திருப்பள்ளி எழுச்சி’யில் திருவரங்கத்தில் எழுந்தருளிய பெருமானைப் போற்றுகின்றார்; இராமாவதாரப் பெருமையைப் பேசுகின்றார்; இயற்கையழகில் ஈடுபட்டு வசந்த காலத்தின் பொலிவைக் காட்சிப்படுத்துகின்றார்;

    வழிபாடு செய்வதற்குத் தேவர்களும், முனிவர்களும், காமதேனுவும் கந்தருவர்களும் நாரதரும் புகுந்துள்ளனர்; வானவர் வாயுறை வழங்கக் கூடியுள்ளனர். கீதங்கள் பாடுகின்றனர். நீ எழுந்தருள்க என்று வேண்டுகிறார்.


    மாதவர் வானவர் சாரண ரியக்கர்
         சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
    ஆதலி லவர்க்குநா ளோலக்க மருள
         அரங்கத்தம் மா! பள்ளி யெழுதரு ளாயே
    !

    (925: 3-4)

    (நாள் ஓலக்கம் = காட்சி கொடுத்தல்)

    என அறிதுயில் கொண்டிருக்கும் அரங்கனைத் துயில் எழப் பாடும் ஆழ்வார், நம்மையும் அவனுக்கு ஆட்படத் தூண்டுகின்றார்.

    திவ்வியப் பிரபந்தத்தில் "மடல்" என்று கூறும்போது திருமங்கை ஆழ்வார் நினைவுக்கு வருவது போல் திருப்பள்ளி எழுச்சி என்றால் தொண்டரடிப் பொடி ஆழ்வார் நினைவுக்கு வருகின்றார்.

    காதலால் நெஞ்சம் அன்பு
         கலந்திலேன்; அதுதன் னாலே

    ஏதிலேன் அரங்கர்க்கு; எல்லே!
         என்செய்வான் தோன்றி னேனே?

    (897)


    எங்ஙனம் மறந்து வாழ்கேன்?

         ஏழையேன் ஏழை யேனே!

    (894.4)

    கரும்பமர் சோலை சூழ்ந்த
         அரங்கமா கோயில் கொண்ட

    கரும்பினைக் கண்டு கொண்டேன்
         கண்ணிணை களிக்கு மாறே!

    (888:3-4)

    (கண் இணை = இரண்டு கண்களாலும், களிக்குமாறு = மகிழுமாறு)

    இவ்வாறு தம் நிலையைச் சொல்லி அரங்கனிடம் வருந்துகின்றார் ஆழ்வார்.

    4.2.3 இராமகாதை - (அணிலும் அணையும்)

    இராமன் இலங்கைக்குச் செல்லக் கடலில் வானரசேனைகள் அணை போடக் கல்லைத் தூக்கிப் போடுகின்றன. அணில் கூட்டம் கடலில் உள்ளே சென்று தங்கள் உடலை ஈரமாக்கிப் பின் அருகில் உள்ள மணலில் புரண்டு அந்த மண்ணைக் கொண்டு போய் அணைகட்ட உதறுகின்றவாம். காட்சி இதோ:

    குரங்குகள் மலையை நூக்கக்
         குளித்துத்தாம் புரண்டிட் டோடி

    தரங்க நீ ரடைக்க லுற்ற
         சலமிலா அணிலும் போலேன்

    (898:1-2)

    (நூக்கு = தள்ளு, சலம் இலா = குற்றம் இல்லாத)

    சின்னஞ்சிறிய அணிலாகிய அஃறிணைப் பொருள் உணரும் போது, ஆறறிவு உடைய மனிதனாகிய நான் பொறுப்பற்றுத் திரிந்தேனே எனத் தம்நிலைக்கு வருந்தும் ஆழ்வார், இராமபிரானின் அன்பைப் பெற்ற அணிலைச் சலமிலா அணில் என்று புகழ்கின்றார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:28:36(இந்திய நேரம்)