தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3.2 திருக்குறள் போற்றும் அறவாழ்வு

  • 3.2 திருக்குறள் போற்றும் அறவாழ்வு

    c03120ad.gif (1750 bytes)E


    தமிழரின் அறவாழ்வைக் காட்டும் நூல்களில் திருக்குறளின்
    பங்கு மிகவும் உயரியது. திருக்குறள் ஒரு சமூகத்தளத்தில் நின்று
    பாடப்பட்டது எனினும், உலகனைத்திற்கும் பொதுவான தன்மைகள்
    அந்நூலில் மிகுதியாயுள்ளன. கடுமையான குறிக்கோள்களை
    நடைமுறைக்கு ஒவ்வாத நிலையிலிருந்து பேசாமல், வாழ்க்கையை
    உயர்ந்ததாகவும், இனியதாகவும்     ஆக்கிக் கொள்வதற்குப்
    பயன்படும் ஒரு பண்பாட்டு வழிகாட்டியாகத் திருக்குறள்
    விளங்குகின்றது. திருக்குறள் காட்டும் அறநெறிக் கோட்பாடுகள்
    பிறிதொரு பாடத்தொகுப்பில் ('வள்ளுவரின் வாழ்வியல் தத்துவம்')
    விரிவாகக் கூறப்பெற்றுள்ளன. இப்பாடத்தில் ஒழுக்கம், கள்
    உண்ணாமை, ஊன் உண்ணாமை, வரைவின் மகளிர் - இவை
    பற்றிய கருத்துகளை மட்டும் காண்போம்.

    3.2.1 திருவள்ளுவர் கூறும் கள் உண்ணாமை

    சங்க காலச் சமூகம் கள் குடிப்பதைத் தவறென்று
    குறிக்கவில்லை. விருந்தோம்புவதில் கள் ஒரு தகுதியான
    இடத்தைப் பெற்றிருந்தது. ஆனால் திருவள்ளுவர் கள் குடித்தல்
    தீய பழக்கமென்பதை அறிவுறுத்தத்     தயங்கவில்லை. கள்
    குடிப்பதால் வரும் கேடுகளைத் திருவள்ளுவர் 'கள் உண்ணாமை'
    என்ற அதிகாரத்தில் கீழ்க்கண்ட வகைகளில் கூறுகின்றார்.

    • கள் குடிப்பவரைக் கண்டு பகைவர்
      அஞ்சமாட்டார்.

    • கள் குடிப்பவர் புகழை இழந்துவிடுவர்.
      கள்     குடிப்பவர்     சான்றோரால்
      மதிக்கப்படமாட்டார்.

    • கள் குடிப்பவரைத் தாயும் வெறுப்பாள்.
      கள் குடிப்பவரை நாணம் என்னும்
      உணர்ச்சி நீங்கிவிடும்.

    Kudikaaran(Drunkard)
    கள் மயக்கம்

    • கள் குடித்தல் அறியாமையின் விளைவாகும்.

    • கள் குடித்தலும் இறப்பும் வேறுபட்டவை அல்ல.

    • கள் குடிப்பவரைக் கண்டு பிறர் நகைப்பர்.

    • கள் குடிப்பதனால் பிறர் அறியாமல் இருந்த குற்றங்கள்
      எல்லாம் வெளிப்படும்.

    • கள் உண்பவனைத் திருத்துதல் இயலாது.

    • கள் உண்ணும் பழக்கத்திற்கு அடிமையாகிய ஒருவன், சுய
      நினைவில் இருக்கும் போது, கள் உண்டு மயங்கிய
      ஒருவனைக் கண்டால் திருந்தக் கூடும்.

    ஒரு மனிதனைப் பண்பாட்டு உயர்நிலையிலிருந்து கீழே
    தள்ளிவிடும் இக்கொடிய பழக்கத்தைத் திருவள்ளுவரே
    முதன்முதலில் இந்த அளவுக்குக் கண்டித்துள்ளார்.

    3.2.2 ஒழுக்கம் விழுப்பம் தரும்

    நல்ல நெறியில் வாழ்வது என்பது உடலுக்கும்
    மனத்திற்கும் நல்லது; சமூக அமைதிக்கும்
    இனியது. இன்று ஒழுக்கமின்மையே 'எய்ட்ஸ்'
    நோயை உருவாக்கியுள்ளது. இரண்டாயிரம்
    ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர்ஒழுக்கம்
    உயிரினும் ஓம்பப்படும் என்று கூறியுள்ளார்.

    சங்க காலத்தில் பெரிதும் கடியப்படாத

    Ozukkaminmai(Immoral)
    பரத்தைமையினையும் வள்ளுவர் கண்டிக்கின்றார். பொருள்
    கொடுத்து பெண் ஒருத்தியைத் தழுவுவது பிணத்தைத்
    தழுவுவதைப் போன்றது என்கிறார்.

    சங்ககாலப் பண்பாடு பரத்தைமையைக் கண்டித்து மொழியவில்லை.
    ஆணின் ஒழுங்கைச் சங்கச் சமூகம் பெரிதும் வற்புறுத்தவில்லை.
    'பரத்தை' என்ற பெண்பாற் சொல் மட்டுமே சங்க இலக்கியத்தில்
    உண்டு. அதற்கு நிகராக ஆண்பாலுக்கும் பொருந்தப் 'பரத்தன்'
    என்ற சொல்லைத் திருவள்ளுவரே ஆளக் காண்கிறோம்.
    விலைமாதரின் தோளைச் சேர்வோர் கீழ்மக்கள் என்றும்,
    அவ்வுறவு நரகத்தை ஒத்தது என்றும் வள்ளுவர் கூறுகின்றார்:

    வரைவிலா மாணிழையார் மென்தோள்

    புரையிலாப்
    பூரியர்கள் ஆழும் அளறு.    (குறள்; 919)

    Tamil Audio

    ஒழுக்க வரையறை இல்லாத பெண்களின் தோள்களைச் சேர்தல்
    இழிந்த மக்களுக்கு உரிய செயலாகும்; அச்செயல் சேற்றில்
    விழுந்து புரள்வது போலக் கீழானதாகும் என்பது மேற்சொன்ன
    குறளின் பொருளாகும்.

    3.2.3 ஊன் உண்ணாமை

    திருவள்ளுவர் அருள் உணர்வின் அடிப்படையில் புலால்
    உணவையும் மறுக்குமாறு அறிவுறுத்துகின்றார். சங்க காலத்தில்
    கபிலர், ஒளவையார் போன்ற பெரும் புலவர்களும் ஊன்
    உணவின் பெருமை பேசக் காண்கின்றோம். ஆனால்
    திருவள்ளுவர்,

    தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்

    உண்பான்
    எங்ஙனம் ஆளும் அருள்.     (குறள்; 251)

    Tamil Audio

    என்கின்றார். தன் உடம்பைப் பெருக்க
    வைத்துக்கொள்ள வேறொன்றின் ஊனை
    உண்பவன் எங்ஙனம் அருள் உணர்வைக்
    காட்ட முடியும் எனக் கேட்கிறார். சமண
    பௌத்த சமயங்களும் புலால் உண்ணுதலைக்
    கண்டித்திருக்கின்றன.     தமிழகத்தில்
    அதைக்கண்டிக்கும்     முதல்     குரல்
    திருவள்ளுவருடையதாக இருந்திருக்கிறது.

    Pulaal Unnaamai(Vegetarian)
    புலால் மறுப்பு

    தமிழர் அருள் உணர்வு மிக்கவர். ஒரு பூங்கொடி, ஒரு மயில்
    பறவை என அஃறிணை உயிர்களும் துயருறுதல் கூடாது என
    நினைத்த சமூகத்தில் ஊன் உணவைச் சரியானதென்று கருத
    முடியாத நிலை தோன்றியதில் வியப்பில்லை. வைதிக சமயம்
    வேள்வியில் உயிர்க்கொலை     செய்வதை வழக்கமாகக்
    கொண்டிருந்தது.

    பசுவைப் புனிதமாகக் கருதுவதாகக் கூறும் வைதிக சமயம்
    முற்காலத்தில் வேள்வியின் பொருட்டுக் கொலைப்படுத்தப்
    பசுவைக் கட்டி வைத்திருந்ததனை மணிமேகலை குறிப்பிடுகின்றது.
    ஆயிரம் வேள்விகள் கூடப் பெரிதில்லை; ஓர் உயிரைக்
    கொல்லாத நோன்பே பெரியது என்கிறார் திருவள்ளுவர்.
    புண்ணை யாராவது உண்பார்களா என அவ்வுணவில் ஓர்
    அருவருப்பை ஏற்படுத்துகிறார்.     திருவள்ளுவர் கண்ட
    இப்பண்பாடே அருளாளர்களின் சமயமாக வளர்ந்து இராமலிங்க
    வள்ளலாரின் உயிரிரக்கம் எனப்படும் சீவகாருணிய அறமாக
    ஓங்கியது. தமிழர்களில் பலர் சைவ உணவினராகவும், புலால்
    உண்பவர்களில் பலர் மாதத்தில் சில நாட்களேனும் நோன்பு
    மேற்கொள்வோராகவும் அமைவது இப்பண்பாட்டின் வளர்ச்சியால்
    தான் என அறியலாம்.

    3.2.4 வாழ்க்கையில் இருநிலைகள்

    தமிழர் பண்பாட்டில் மிகக் குறிப்பிடத்தக்க இரண்டு நிலைகள்
    இல்லறமும் துறவறமும் ஆகும். பிரம்மசரியம், சந்நியாசம்,
    கிரகஸ்தம், வானப் பிரஸ்தம் என்ற நான்கு நிலைகளை வடமொழி
    கூறுகின்றது. வடமொழி இதிகாசங்களில் இடம்பெறும் முனிவர்கள்
    காடுகளில் வாழ்ந்தாலும் மனைவி மக்களோடு வாழ்ந்தனர்.
    அரசியல் துறையிலும் அவர்களுக்குப் பங்கு இருந்தது. மேனகை
    போன்ற பெண்களிடம் அவர்கள் மனத்தைப் பறிகொடுத்ததும்
    உண்டு. துருவாசர், விசுவாமித்திரர் போன்றோர் அடங்காச்சினம்
    கொண்டவர்களாகவும் இருந்திருக்கின்றனர். அம்முனிவர்கள்
    நீங்காத சாபங்களை இடுவோராகவும் இருந்துள்ளனர். தமிழர்
    பண்பாடு கண்ட இல்லறம் துறவறம் இவற்றினின்றும்
    வேறானவை. இல்லறம் எதற்கு என்ற வினாவிற்குச் சங்க
    இலக்கியமான குறிஞ்சிப் பாட்டு விளக்கம் கூறுவதைக்
    கேளுங்கள்!வீடு முழுவதும் நிறைந்திருக்கும் தானியத்தை அடுத்த
    விளைச்சல் வந்து சேருமுன் செலவழிக்க வேண்டும். விருந்து
    செய்யவும் விழாக் கொண்டாடவும் வேண்டும். பொருளாதார
    உலகில் 'பணம்' வந்துவிட்ட பிறகே, விளைச்சல் பொருள்
    பணமாக மாற்றப்பட்ட பிறகே இந்த விருந்திடும் உள்ளம்
    சுருங்கியிருக்கிறது. என்று விருந்து செய்தலை இடைவிடாத
    கடமையாகத் திருவள்ளுவர் கூறுகின்றார். எனவே இல்லறத்தின்
    தலையாய கடன் விருந்தோம்பலாகும்.

  • இல்லறம் எதற்கு?
  • இல்லறம் எதற்கு என்ற வினாவிற்குச் சங்க இலக்கியமான
    குறிஞ்சிப் பாட்டு விளக்கம் கூறுவதைக் கேளுங்கள்!

    "பலரும் உண்ணும்படி அகலமாகக் கதவு
    திறந்து கிடக்கும் வாசலையுடைய பெரிய
    வீட்டில், சோற்றை வருகின்றவர்களுக்கெல்லாம்
    இல்லையென்னாமல் இட வேண்டும். அதனால்
    வீடு பொலிவு பெற வேண்டும். விருந்தினர்
    உண்டது போக மிஞ்சியிருக்கும் உணவை
    மனைவியாகிய நீ இட நான் உண்ண வேண்டும்.
    அவ்வுயர்ந்த இல்லறம் நம்மைக் கரையேற்றும்"
    என்று தலைவன் தன் காதலியிடம்
    கூறுகின்றான்.

    Virundhombal(Hospitality)
    விருந்து
    உபசரித்தல்

    ஒருவன் திருமணம் செய்து கொள்வதே விருந்தோம்பல்
    என்னும் கடமையைச் செய்ய என்று கூறும் பண்பாடு
    தமிழருடையதாக இருந்திருக்கின்றது.
    வளோண் சமூகத்தின்
    அடிப்படைப் பண்பாடு இதுதான்.

    வீடு முழுவதும் நிறைந்திருக்கும் தானியத்தை அடுத்த விளைச்சல்
    வந்து சேருமுன் செலவழிக்க வேண்டும். விருந்து செய்யவும்
    விழாக் கொண்டாடவும் வேண்டும். பொருளாதார உலகில் 'பணம்'
    வந்துவிட்ட பிறகே, விளைச்சல் பொருள் பணமாக மாற்றப்பட்ட
    பிறகே இந்த விருந்திடும் உள்ளம் சுருங்கியிருக்கிறது.

    செல்விருந்து ஓம்பி வருவிருந்து

    பார்த்திருப்பான்
    நல்விருந்து வானத் தவர்க்கு    (குறள்: 86)

    Tamil Audio

    என்று விருந்து செய்தலை இடைவிடாத கடமையாகத்
    திருவள்ளுவர் கூறுகின்றார். எனவே இல்லறத்தின் தலையாய
    கடன் விருந்தோம்பலாகும்.

  • எது துறவறம் ?


  • மனைவி, மக்கள், சுற்றத்தார் என நெருங்கிய உறவு வட்டத்தில்
    அன்பு காட்டி வாழ்ந்த ஒருவன் இல்லறத்தின் தேவைகளை
    நிறைவு செய்த நிலையில், தன்னை அடுத்த அயலார்க்கும்,
    ஊரார்க்கும், பிறர்க்கும், பிற பிற உயிர்களுக்கும் நல்லன ஆற்றும்
    வகையில் அருள் உணர்ச்சி பெற வேண்டும். இதுவே துறவு.துறவு
    என்பது பற்று நீக்கி வாழ்வதன்று; பற்றின் விரிவு. துறவு நிலை
    அடையும் ஒருவன் தன் வீட்டிலுள்ளவர்களுக்காக வாழ்ந்து
    கொண்டிருந்த நிலை மாறி எல்லா உயிர்க்கும் அன்பு
    செய்வோராக மாறுகிறான். இதுவே துறவறம் எனப்பட்டது. அருள்
    என்பது அன்பின் குழந்தை என்கிறார் திருவள்ளுவர். எனவே
    திருவள்ளுவர் கூறும் துறவறம் நாட்டில் ஒவ்வொருவர்க்கும்
    உரியது என அறியலாம்.

    3.2.5 சில நம்பிக்கைகள்

    தமிழர் பண்பாட்டில், நல்வினை, தீவினை, ஊழ், மறுபிறப்பு
    ஆகியவற்றுக்குப் பேரிடமுண்டு. வினைகளின் பயன் தொடர்ந்து
    அடுத்தடுத்த பிறப்புகளைத் தரும் எனத் தமிழர் நம்பினர்.
    திருவள்ளுவரும் இக்கருத்துக்களைக் கொண்டிருந்தார்.

    ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
    சூழினும் தான்முந் துறும்
         (குறள்: 371)

    என்று ஊழின் வலிமையைத் திருவள்ளுவர் கூறுகின்றார்.
    எனினும் ஊழையும் விலக்க முடியும் என்பதே வள்ளுவரின்
    புரட்சி நோக்கமாகும்.

    ஆள்வினையோடு தொடர்ந்து முயல்பவர் ஊழின்
    தாக்குதலை வென்றுவிட முடியும் என்கிறார்

    வள்ளுவர்.
    விதி வலியது மாற்ற முடியாதது என்று கூறி அழியும்
    குருட்டு நம்பிக்கை கொண்ட சமூகங்களைப் போல
    அல்லாமல் முயற்சியின் வலிமையை வற்புறுத்திய
    சமூகமாகத் தமிழ்ச் சமூகம் காட்சி தருகின்றது.

    3.2.6 வாழ்க்கைக் கடமைகள்

    பொருள் ஈட்டுதல், குடும்பத்தைப் பாதுகாத்தல், பிள்ளைகளை
    வளர்த்தல், சமூகத் தொண்டு செய்தல் போன்ற பல கடமைகள்
    மனிதர்களுக்கு உள்ளன. தனி மனிதனாயினும் அவனும்
    சமூகத்தில் ஓர் உறுப்பினன். அவ்வகையில் வீட்டுக்கும்
    நாட்டுக்கும் ஆற்றவேண்டிய கடமைகளைத் தமிழ் அறநூல்கள்
    எடுத்துரைக்கின்றன..

  • பொருள் ஈட்டுதல்
  • வாழ்க்கைக்குப் பொருள் இன்றியமையாதது என்பதைத் தமிழினம்
    உணர்ந்திருந்தது. பொருள் உடையவரே அறத்தைச் செய்யும்
    இன்பத்தைத் துய்க்கவும் முடியும் என்பதைத் திருவள்ளுவர்
    வலியுறுத்துகின்றார். இரண்டு யானைகள் போரிடும் போது
    அக்காட்சியை மலை மேலிருந்து பார்ப்பதைப் போலப்
    பாதுகாப்புடையது பொருள் உடையவன் நிலை என்கிறார். அன்பு
    பெற்றெடுத்த குழந்தை அருள். அது பொருள் என்னும் செவிலித்
    தாயால் வளர்க்கப்படும் என்று கூறுகின்றார்.

    இல்லாரை எல்லாரும் எள்ளுவர்

    செல்வரை
    எல்லாரும் செய்வர் சிறப்பு (குறள்: 752)

    Audio

    என்பது உலக நடைமுறையை உணர்ந்து கூறும் குறளாகும்.
    பொருளை முயற்சியால் அறவழிகளில் தேடி நற்செயல்களுக்காக
    அதனைச் செலவிட வேண்டுமென்பது தமிழர் வாழ்க்கை
    நோக்கமாகும். பழியஞ்சிப் பிறரோடு பகுத்துண்டு, ஒப்புரவும்
    ஈகையும் கொண்டு பண்போடு வாழ்வோர் சான்றாண்மை
    உடையவர் ஆவர். இத்தகையோர் வையத்தில் வாழ்வாங்கு
    வாழ்பவர்கள் ஆவர். இவர்கள் மறைந்த பின்னும் தெய்வமென்று
    போற்றப்படுவர் என வள்ளுவர் கூறுகின்றார்.

  • பலர்க்கும் உரிய கடமைகள்
  • வாழ்க்கையில் ஒவ்வொருவர்க்கும் கடமை இருக்கிறது. தந்தை,
    தன் மகனைக் கற்றவனாகவும் அவையில் முன்நிற்பவனாகவும்
    ஆக்க வேண்டும். மகன், 'இவனுடைய தந்தை நோன்பு நோற்று
    இவனைப் பெற்றிருக்கின்றான்' என்று கூறுமாறு சிறந்து விளங்க
    வேண்டும். மனைவி, தற்காத்துத் தற்கொண்டானைப் பேணி,
    புகழை நீங்காமல் காத்து நற்பண்புகளில் சோர்வற்றவள் ஆதல்
    வேண்டும். அரசர், தன்கீழ் வாழும் குடிமக்களை உயிரெனக்
    கருதிக் காத்துக் காட்சிக்கு எளியனாகவும் கடுஞ்சொல்லன்
    அல்லனாகவும் விளங்க வேண்டும். அமைச்சர், வேந்தனுக்கு
    உறுதுணையாய்ச் சொல்வன்மை, வினைத்தூய்மை உடையவராதல்
    வேண்டும். உழவர், விளைநிலத்தை நாள்தோறும் சென்று கண்டு,
    அதனைக் காவல் செய்து பயிர்களுக்குச் செய்யத்தகுவன செய்தல்
    வேண்டும். ஆசிரியன், மெய்ப்பொருளை எல்லாரும் அறிந்து
    கொள்ள உரைப்பவனாக ஆதல் வேண்டும். மாணவன் , செல்வர்
    முன் வறியவர் போல ஆசிரியர் முன் தாழ்ந்து நின்று கற்றல்
    வேண்டும். கணவன், தென் புலத்தார் தெய்வம் விருந்து
    சுற்றத்தார் தான் எனப்படும் ஐவர்க்கும் உரியன செய்ய
    வேண்டும். வணிகர், வாணிகத்தை நடுவுநிலைமை தவறாமல்
    செய்ய வேண்டும். சான்றோர், அன்பு நாண் ஒப்புரவு
    கண்ணோட்டம் வாய்மை ஆகிய ஐந்து பண்புகளைக்
    கொள்ளவேண்டும். இவ்வாறு வாழ்க்கையில் ஒவ்வொருவர்க்கும்
    உரிய கடமையை வற்புறுத்தும் தமிழரின் அறநூல் சாதி, மதம்
    ஆகியவற்றைப் போற்றவில்லை.

    3.2.7 மனத்தூய்மையே அறம்

    தமிழ் அறநூல்கள் புறத்தூய்மையைவிட அகத்தூய்மையையே
    வற்புறுத்துகின்றன. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறி
    மனத்தில் மாசு இன்மையையே அறம் என்று கூறுகின்றது, தமிழ்
    அறம். சடங்குகள், ஆசாரங்கள், கழுவாய்கள் ஆகியவற்றுக்குத்
    தமிழர் வாழ்வில்     பேரிடமில்லை.     துறவி என்பவன்
    மொட்டையடித்துக் கொள்வதா, சடைமுடி கொள்வதா என்பன
    போன்ற வினாக்களுக்கு இங்கு இடமில்லை. புறப் புனைவுகள்,
    வேடங்கள் ஆகியவற்றைத் தமிழர் போற்றவில்லை. மனத்தின்கண்
    தூய்மை, எவ்வாறு செயல்படுகின்றார் என்பவற்றைப் பொறுத்தே
    ஒருவர் சமுதாயத்தில் எத்தகையவர் என்பதை முடிவு செய்தனர்.
    உருவு கண்டு போற்றுதலும் தூற்றுதலும் தமிழர்க்குப் பொருந்தாச்
    செயல்களாகும்.

    பயிற்சிக் குறிப்பு - I

    தன் மதிப்பீடு : வினாக்கள்

    1. கீழ்க்கணக்கு நூல்களில் எத்தனை நூல்கள்
      அறநூல்கள்?

    2. கள் குடிப்பவனைக் காணும் தாயின் நிலை யாது?

    3. பரத்தன் என்ற சொல்லை முதலில் ஆள்பவர்
      யார்?

    4. புலால் உண்ணுதலைக் குறித்துத் திருவள்ளுவர்
      கூறுவது யாது?

    5. இல்லறத்தின் நோக்கமாகக் குறிஞ்சிப்பாட்டுக்
      கூறுவதை எடுத்துரைக்க.

    6. தமிழர் பண்பாட்டில்     பேரிடம் பெறும்
      நம்பிக்கைகள் யாவை?

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 19:42:07(இந்திய நேரம்)