தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20225l1-5.1 இராமாநுசர்

  • 5.1 இராமாநுசர்
    சமய வாழ்வில் பேரொளிப் பிழம்பாய்த் திகழ்ந்தவர்
    இராமாநுசர்.

    மனிதகுல வரலாற்றில் வியப்பூட்டும் ஒரு தத்துவ
    மேதையாகவும் சமூகப்புரட்சியாளராகவும் மனிதப்பண்புகளுக்கு
    ஒரு களஞ்சியமாகவும் அவர் வாழ்ந்தார். இளையாழ்வார்
    என்னும் இயற்பெயர் கொண்டவரை, எம்பெருமானார்,
    யதிராசர், உடையவர், சடகோபன் பொன்னடி,


    இராமாநுசர்

    கோயிலண்ணன் எனப்பல பெயர்களையிட்டு வைணவ உலகம்
    கொண்டாடுகின்றது. எனினும் சமய, தத்துவ உலகில் அவரைக்குறித்து வழங்கும் ஒருபெயர் - ஒப்பற்ற பெயர்
    இராமாநுசர்
    என்பதே. அவரைப் புகழ்ந்து அந்தாதியமைப்பில் துதிநூல்
    செய்த திருவரங்கத்தமுதனாரும்
    பாடல்தோறும் இராமாநுசர் என்னும்
    இந்த ஒரு பெயரையே எடுத்தாண்டார்.
    இராமாநுச நூற்றந்தாதி
    என்பது அந்த
    நூலின் பெயர்.

    சமய தத்துவ உலகில் இராமாநுசர் செய்த அருஞ்சாதனைகள்
    பலவாகும். பலரும் தத்தம் நோக்கில் கொண்டாடத்தக்க
    குணவியல்புகள் கொண்டதாக அவர் வாழ்க்கை அமைந்திருந்தது.
    சமயவாதிகள் மட்டுமன்றிச் சமுதாயச் சிந்தனையாளர்கள்,
    சீர்திருத்தவாதிகள், மெய்விளக்க அறிஞர்கள்,
    வரலாற்றாசிரியர்கள், கவிஞர்கள் எனப் பல்வேறு தரப்பினரும்
    இராமாநுசர் பற்றி எழுதியுள்ள நூல்களும் புகழுரைகளும் இதற்கு
    எடுத்துக்காட்டு. இராமாநுசர் வரவும் கொடையும் தந்த
    விளைவுகள் இவை.

    கடவுள் மறுப்புக்கொள்கையுடையவர்களும் இராமாநுசரை
    வியந்து நோக்கியதையும் - போற்றியதையும் இங்குக்
    குறிப்பிட்டாக வேண்டும்.

    முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்
    இத்தமிழ்நாடு தன் இருந்தவப் பயனாய்
    இராமா னுசனை ஈன்ற தன்றோ?

    என்னும் பாவேந்தர் பாரதிதாசனாரின் பாராட்டுரை இவ்வகையில்
    நினைத்தற்குரியது.

    பல அரிய கருத்துகளைத் தம் நூல்களில் வெளியிட்டுள்ளார்.
    அவற்றுள் கீழ்க்குறிப்பிடும் கருத்துகள் தனித்தன்மை உடையன.

    “உலகில் எல்லாப்பொருள்களும் என்னைப் பொறுத்தவரை
    சமம். உயர்வு தாழ்வு கிடையாது. ஜாதியில் உயர்ந்தோர்,
    தாழ்ந்தோர், அறிவோர், எளியோர் என்று நான் வேறுபாடு
    பாராட்டுவதில்லை”.

    “அறிவு அன்பாக மலர்ந்து ஸ்ரீநிவாசனை வழிபடட்டும்.
    அவனுக்கு உலகத்தை ஆக்குவதும் காப்பதும் நீக்கலும் ஓர்
    இடையீடு இல்லாத விளையாட்டு. அடக்கத்துடன் தன்னை
    வழிபடுகின்ற அனைவரையும் அவன் புரப்பது நிச்சயம்”.

    “சித், அசித் இரண்டும் ஈசுவரனைப் பற்றித்தான்
    இயங்குகின்றன”.

    “கண்ணால் ஞாயிற்றைப் பார்க்கிறோம். கண்ணும் அவனே;
    ஞாயிறும் அவனே; இந்தத் தொடர்பும் அவனே”.

    “திருமகளுடன் இணைந்து மாசற்ற ஆனந்தமயமாக
    இருப்பவனும், சித், அசித் ஆகிய பொருள்கள் அனைத்தையும்
    தன் சரீரமாகக் கொண்டவனுமான திருமாலை வணங்குகிறேன்”.
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:33:31(இந்திய நேரம்)