அருள்மிகு கூழம்பந்தல் ஜகந்நாதீஸ்வரர் திருக்கோயில்
காஞ்சிபுரத்திலிருந்து 18கி.மீ. தொலைவில் வந்தவாசி செல்லும் வழியில் உள்ள கூழம்பந்தல் என்னும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. கங்கை கொண்ட சோழன் என்னும் பட்டப்பெயர் கொண்ட முதலாம் இராஜேந்திர சோழனின் ஆன்மீகக் குருவான ஈசான சிவபண்டிதரால் “கங்கை கொண்ட சோழீஸ்வரம்“ என்னும் இத்திருக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் அமைந்துள்ள ஊர் கங்கை கொண்ட சோழபுரம் என்றும், இறைவன் பெயர் கங்கை கொண்ட சோழீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறது. தாங்குதளம் முதல் சிகரம் வரை முழுவதும் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ள இக்கற்றளி மூன்று தளங்களை உடைய விமானத்தைக் கொண்டுள்ளது. சதுர வடிவக் கருவறையில் இறைவன் இலிங்க வடிவில் காட்சியளிக்கிறார்.
- பார்வை 868