முகப்பு

3.1 படம்வழிப் படைப்பாற்றல்

படம்வழிப் படைப்பாற்றல்

படம் ஒன்று பத்தாயிரம் சொற்களுக்குச் சமம் என்றொரு பழமொழி உண்டு. எவ்வளவுதான் சொற்களால் விளக்கம் சொன்னாலும் ஒரு படத்தைப் பார்த்துக் குழந்தை புரிந்துகொள்வதைப் போலப் புரிய வைக்க முடியாது. அவ்வகையில் மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வளர்ப்பதற்குப் படங்களைப் பயன்படுத்துவது நல்லதொரு தொடக்கமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

பொதுவாகக் குழந்தைகள் படங்களைப் பார்ப்பதில் விருப்பம் உடையவர்கள். குறிப்பாகக் கண்கவரும் வண்ணப் படங்களாயின் குழந்தைகள் அவற்றை ஆர்வத்துடன் பார்ப்பர். கருத்துப் பொருளைப் காட்சிப் பொருளாகக் காட்ட உதவுபவை படங்களாகும். இவை குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கக்கூடியவை. இதன்மூலம் குழந்தைகளின் உற்றுநோக்கும் திறனை அதிகரிக்கச் செய்து, அவர்களின் சிந்தனையைத் தூண்டி படைப்பாற்றல் திறனை வளர்க்கலாம். கற்பித்தலில்,

கருத்துப்படங்கள் (Concept Charts)

வரைபடங்கள் (Graphs)

சுவரெட்டிகள் (Posters)

கேலிச்சித்திரங்கள் (Cartoons)

கேலிச் சித்திரத் தொடர்கள் (Comics)

நிலப்படங்கள் (Maps)

போன்ற பல்வேறு படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை முறையாகப் பயன்படுத்தினால் மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வளர்க்கலாம்.

அன்றாடம் நடைபெறும் சமூக நிகழ்வுகள் மீதான எள்ளலும் நகைச்சுவையும் நிறைந்த திறனாய்வுக் கருத்தின் வரைகோட்டு ஓவியமே கருத்துப்படம் ஆகும். பல சொற்கள் வெளிப்படுத்துவதை ஒரு கருத்துப்படம் சில கோடுகளின்வழி எளிதில் உணர்த்திவிடுகின்றது. புரிந்துகொள்ள இயலாத கருத்துகளையோ, செய்திகளையோ எளிதாகப் படங்களின் மூலம் புரிய வைப்பது இதன் தன்மையாகும். ஆங்கிலத்தில் ‘கார்ட்டூன்’ (cartoon) என்று அழைக்கப்படும் இது தமிழில் கருத்துப்படம், விகடசித்திரம், வேடிக்கை சித்திரம், கேலிச்சித்திரம், விளக்கப்படம், கூடார்த்த படம் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது. இதனைப் பாரதியார் ‘விகடசித்திரம்’ என்று குறிப்பிடுகிறார். தமிழில் முதன்முதலில் கருத்துப்படத்தை வெளியிட்டது பாரதி நடத்திய ‘இந்தியா’(1907) இதழே ஆகும்.

வரைபடங்கள் என்பவை நிலப்பகுதிகள், அரசியல் எல்லைகள், மக்கள் தொகை, இயற்கை வளங்கள், சாலைகள், தட்பவெப்ப நிலைகள், பொருளாதார நடவடிக்கைகள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்துபவையாக அமையும்.

சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் வகையில் செய்தி ஒன்றை உருவாக்கிச் சுவர்களில் ஒட்டப்படுவதால் சுவரொட்டி என்று அழைக்கப்படுகிறது. இது பொது மக்களின் கவனத்தை ஈர்த்து செய்தியொன்றைத் தெரிவிப்பனவாகவும் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதாகவும் அமைந்திருக்கும்.

இயல்பான மனிதனின் தோற்றத்தை மிகைப்படுத்திக் கேலியும் கிண்டலுமாக வரைபடத்தின் மூலம் வெளிக்காட்டுவது கேலிச்சித்திரமாகும். பொதுவாகக் கேலிச் சித்திரங்கள் பார்த்தவுடன் சிரிப்பை வரவழைக்கக் கூடிய வகையில் அமைந்திருக்கும். கூடுதலாக அதன் விமர்சனப் பாங்கு தனித்துவமானதாக இருக்கும். அதிலும் அரசியல் கேலிச்சித்திரங்களுக்கு உலகெங்கும் பெரிய வரவேற்பு இருக்கிறது. “கேலிச்சித்திரங்கள் மூன்று வகையில் பயன்படுத்தப்படுகின்றன.

  1. ஒரு நபரையோ அல்லது செயலையோ நையாண்டி செய்வது
  2. ஒரு நபரையோ அல்லது செயலையோ புகழ்வது
  3. மக்களின் உணர்ச்சியைத் தூண்டுவது

கேலிச்சித்திரங்களானது படிப்போரிடம் எள்ளல் நடையைக் கண்முன்னால் காட்டும் படங்களாகச் சுவாரசியமாக அமைக்கப் பெறுகிறது என்பதைக் கண்டோம். அவ்வகையான படங்களுடன் உரையாடல்கள் இணைக்கப்பட்டுத் தொடர்களாகவும் வெளிவருகின்றன. இதனை ஆங்கிலத்தில் ‘காமிக்ஸ்’ (Comics) என்பர். ஓவியங்களையும் சொற்களையும் ஒரு முறைப்படி ஒழுங்குசெய்து ஒரு கதையை / ஒரு நிகழ்வை நாடகப்படுத்துவதே காமிக்ஸ் என்று கூறுவர்.

நிலப்படம் (map) என்பது புவி அல்லது வேறு கோள்களின் மேற்பரப்பில் உள்ள புவியியல், நிலவியல், புவி அரசியல் போன்றவை தொடர்புள்ள அம்சங்களை அளவுவிகிதத்துக்கு (scale) அமையப் பதிலிட்டுக் காட்டுவதற்கான ஒரு வரைபடம் ஆகும். பொதுவாக இது ஒரு மட்டமான மேற்பரப்பில், வரையப்படுகின்றது. இதனைக் குறிக்க தேசப்படம், வரைபடம் போன்ற சொற்களும் வழக்கில் உள்ளன. உலகக் கோள மாதிரிகளில் நிலப்படம் ஒரு கோள மேற்பரப்பில் வரையப்படுகின்றது.

படங்களின் மூலம் மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வளர்க்க கீழ்க்காணும் முறைகளில் செயல்பாடுகளை வழங்கலாம்.

தொடக்கநிலையில் படங்களைக் கொண்டு,

• பெயர்ச்சொற்களைக் கண்டறிதல்

• பெயர்ச்சொற்களுக்கு ஏற்ற வினைச் சொற்களை எழுதுதல்

• உரிய வருணனைச் சொற்களை உருவாக்குதல்

• வருணனைத் தொடர்களை உருவாக்குதல்

• எளிய தொடர்களை உருவாக்குதல்

• படத்துக்கு ஏற்ற தலைப்பிடுதல்

• படத்தின் கருப்பொருளைக் கூறுதல் / எழுதுதல்

ஆகிய பயிற்சிகளை அளிக்கலாம். தங்களிடமும் படைப்பாற்றல் திறன் உள்ளது என்ற எண்ணம் உருவாகும் வகையில் இச்செயல்பாடுகள் அமைய வேண்டும்.எடுத்துக்காட்டு

பெயர்ச்சொற்களைக் கண்டறிதல்
பச்சைக்கிளி பெண்
பெயர்ச்சொற்களுக்கு ஏற்ற வினைச் சொற்களை எழுதுதல்
சீதா புறாக்களுக்கு உணவளித்தாள்.
வருணணைத் தொடர்களை உருவாக்குதல்
அழகிய ரோஜா! சிவந்த ரோஜா!
மெல்லிய இதழ்களை . . .
மேனியாய்க் கொண்ட ரோஜா!
காம்பிலே முள்ளினைக்
காவலாய்க் கொண்ட ரோஜா!
எளிய தொடர்களை உருவாக்குதல்
கயல்விழி : மலர்விழி! உனக்குத்
தமிழரின் ஆடை என்றால் என்ன
நினைவுக்கு வரும்?
மலர்விழி : எனக்கு
படத்துக்கு ஏற்ற தலைப்பிடுதல்
சுத்தம் சோறு போடும்
படத்தின் கருப்பொருளைக் கூறுதல்/ எழுதுதல்
குடும்பம்
நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்
சிறிய கதைகள் எழுதுதல்
தாரணியும் அகிலனும் நண்பர்கள். இருவரும்
மாலை நேரத்தில் பூங்காவிற்கு விளையாடச்
செல்வது வழக்கம். அன்று தாரணியின் கையில்
ஒரு புத்தகத்தைக் கண்டான் அகிலன். அவளிடம்
அதைப் பற்றி வினவினான். அதற்குத் தாரணி, ‘இது
என் தாத்தா எனக்குப் பரிசாகக் கொடுத்தார்.
ஆர்வமூட்டும் பல கதைகள் உள்ளன. வா சேர்ந்து
படிப்போம்’ என்றாள். கதை கேட்பதில் மிகவும்
ஆர்வம் கொண்ட அகிலன், தாரணியைப் படிக்கச்
சொல்லிக் கேட்கத் தொடங்கினான்.