தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- வரலாற்றிற்கு முந்தைய தமிழகம்

  • 3.1 வரலாற்றிற்கு முந்தைய தமிழகம்

    தொல்லுயிர்கள் வளர்ச்சியுற்றுப் பெருகிய நிலம் இந்தியாதான் என ஆய்வாளர் கூறுவர். தென் இந்தியா, கங்கை நதி பாயும் நிலப்பரப்புக்கும் இமய மலைக்கும் மண்ணியல் அடிப்படையில் வேறுபட்டது. இன்றுள்ள இந்தியப் பெருங்கடல் அன்று பெரு நிலப்பரப்பாக ஆப்பிரிக்கா வரை நீண்டு இருந்தது. பின்னர்க் கடல் நீரால் மூழ்கடிக்கப்பட்டது. எஞ்சிய பகுதியே இன்றைய தென் இந்தியாவாகும். இதன் பாறைகள் மிகவும் பழைமையானவை. இவை உயிர்கள் தோன்றும் முன்பு உலகில் இருந்த கருங்கல் படிவப்பாறை வகையினைச் சேர்ந்தவையாகும். சிந்து கங்கைச் சமவெளி பல ஆயிரக்கணக்கான சதுரக்கல் அளவு பரந்து விரிந்தது. இது இமயமலை உண்டாகும் முன்பு கடலாக இருந்து, பின் கடல் பகுதி மறைந்து, மலை ஆறுகள் கொணர்ந்த வண்டல் மண்ணினால் சமவெளியானது என்பர் ஆராய்ச்சியாளர்.

    இவ்வாராய்ச்சியின் பயனாகத் தமிழக வரலாறு தொன்மையான வரலாறு என்றும், கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய முதுபெரும் வரலாறு என்றும் கூறலாம்.

    இத்தகைய வரலாறு கொண்ட தமிழகத்தின் இயற்கை அமைப்புகளைக் காண்போம். விந்தியமலைத் தொடரும், சாத்பூரா மலைத் தொடரும் நருமதை, தப்தி ஆறுகளும், தண்ட காரணியக் காடுகளும் வட இந்தியா, தென் இந்தியா என்று இந்தியாவை இரு பிரிவாகப் பிரிக்கின்றன. வட இந்தியாவில் பல்வேறு அந்நியப் படையெடுப்புகள் நிகழ்ந்தன. ஆதலால் அங்கு வாழும் மக்களின் மொழி, கலை, பண்பாடு முதலியவற்றில் மாறுதல்கள் பல ஏற்பட்டன. ஆனால் தமிழகத்தே இவ்வகை மாற்றங்கள் ஏதும் நிகழாமல் தமிழர்களின் தனித்தன்மை இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:19:47(இந்திய நேரம்)