Primary tabs
-
4.0 பாட முன்னுரை
தொல்காப்பியர் எழுத்ததிகாரத்தில் ஒலியனியலைப் பற்றியும், சொல்லதிகாரத்தில் உருபனியலைப் பற்றியும் விளக்கமாகக் கூறியுள்ளார். கடந்த இரு பாடங்களில் இவற்றை விரிவாகப் பார்த்தோம். ஒலியனியலுக்கும் உருபனியலுக்கும் தனித்தனி அதிகாரங்களை வைத்த தொல்காப்பியர், தொடரியலுக்கு எனத் தனி அதிகாரம் வைக்கவில்லை. சொல்லதிகாரத்திலேயே உருபனியலோடு, தொடரியலைப் பற்றியும் விளக்குகின்றார். தொடரில் வரும் எழுவாய், பயனிலை ஆகிய இரண்டனுக்கும் இடையே உள்ள இயைபினை (Concord) விளக்கிக் காட்டுகிறார். (இயைபு = தொடர்பு, பொருத்தம்) தொடரில் சொற்களின் வரன்முறை (Word Order) பொருள் உணர்வு பற்றியதால் அதைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். தொடரில் பொருள் மயக்கம் கூடாது என்பதை வலியுறுத்திக் கூறுகிறார். பொருள் மயக்கம் இன்றித் தொடர்ப் பொருளைத் தெளிவாகக் கூறுவதற்கான நெறிமுறைகளைக் குறிப்பிடுகிறார். மேலும் அவர் காலத் தமிழில் வழங்கிய பல்வேறு தொடர் வகைகளையும் ஆங்காங்கே குறிப்பிட்டு விளக்கிச் செல்கிறார். இவ்வாறு தொல்காப்பியர் சொல்லதிகாரத்தில் பல்வேறு நிலைகளில் கூறியுள்ள தொடரியல் கருத்துகளின் வழி நின்று, தொல்காப்பியர் காலத் தமிழின் தொடரியல் இப்பாடத்தில் விளக்கப்படுகிறது.