Primary tabs
-
இலாவணி
தஞ்சை மராட்டியர் ஆட்சிக்காலத்தில் மராட்டிய மாநிலத்திலிருந்து
தமிழகம் வந்த கலைவடிவம் இலாவணி ஆகும். இலாவணி என்றால்
நடுதல் என்ற பொருள். மராட்டியத்தில் நாற்று நடும்போது
காமச்சுவை ததும்பப் பாடப்படும் பாடல்களை இலாவணி என்று
அழைப்பதுண்டு. அதுவே தமிழ்ப்பெயராகவும் நிலைத்துவிட்டது.
தமிழகத்தில் காமன் கோயில் வழிபாட்டோடு தொடர்புடையதாக
இலாவணி நிகழ்த்தப்படுகிறது. மன்மதன் எரிந்தான் என ஒரு கட்சியினரும், மன்மதன் எரியவில்லை என ஒரு கட்சியினரும் வாதிடுவதாக இலாவணிப்பாடல் அமைந்திருக்கும். டேப் என்ற
தோலிசைக் கருவியினை இசைத்துக்கொண்டு ஒரு பிரிவினர் தங்களது
வாதத்தினைப் பாடலாகப்பாட, அடுத்த பிரிவினர் அதற்குப்
பாடலிலேயே பதில் கூறுவதாக இலாவணி நிகழ்ச்சி அமையும்.
இவ்வாறு வினாவிடைப் பாணியில் இலாவணி நிகழ்ச்சி விடியவிடியத்
தொடர்ந்து கொண்டே இருக்கும்.
திருச்சி, தஞ்சை மாவட்டப் பகுதிகளிலேயே இலாவணி நிகழ்த்திக்
காட்டப்படுகின்றது. மன்மதன் கதை மட்டுமே இலாவணியில்
இடம்பெறுவது குறிப்பிடத்தக்கதாகும். இக்கலை இன்றைய நிலையில்
மறைந்துகொண்டு வருகின்றது.