Primary tabs
-
1.6 தொகுப்புரை
தாம் ஒரு தமிழன் என்பதில் பெருமை கொண்ட பாரதியார், தமிழ் மொழி மீது மிகுந்த பற்றுக் கொண்டவர். தமிழ் மொழியின் பெருமையையும், வளத்தையும் குறிப்பிடுகிறார். ஆங்கில ஆட்சிக்காலத்தில், ஆங்கிலத்தின் செல்வாக்கால், தமிழ் இரண்டாம்தர நிலைக்குத் தள்ளப்பட்டதை உணர்ந்தார். எனவே எங்கும் எதிலும் தமிழ் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். தாய்மொழியின் வாயிலாகவே கல்வி கொடுக்க வேண்டும் என்று வேண்டினார்.
தமிழர் பண்பாட்டுச் சிறப்பினைக் குறிப்பிடும்போது, தமிழர்கள் கடல் கடந்து சென்றாலும் எத்தகைய உறுதியான நம்பிக்கையையும், கடமை உணர்வினையும் கொண்டிருக்கின்றனர் என்பதைச் சுட்டுகின்றார். தமிழர்களின் வழிபாட்டின் மூலம் வெளிப்படும் பண்பாட்டுப் பெருமையையும் எடுத்துரைக்கின்றார்.
தமிழ் இனம் எத்தகைய தொன்மை வாய்ந்தது என்பதனையும், தமிழர்கள் வீரத்தையும் காதலையும் எவ்வாறு போற்றிப் பாதுகாத்தனர் என்பதனையும் பாரதியார் கூறுகிறார்.
தமிழ்நாட்டில் இயற்கையாக அமைந்த ஆறுகள் பலவும் எவ்வாறு நீர் வளத்தை வழங்குகின்றன என்றும் குறிப்பிடுகிறார். வள்ளுவன் போன்ற அறவோர்களாலும் தமிழ்நாடு பெற்ற கல்வி வளத்தைக் கூறுகிறார். தமிழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்து, தமிழ்நாட்டை எவ்வாறு வளப்படுத்தினர் என்பதையும் சுட்டுகிறார்.
விடுதலை பெற்று வாழும் பெண்கள் தங்கள் கணவர்க்குத் துணையாக இருந்து, செய்ய வேண்டிய கடமைகளையும் செய்து, ஓர் எடுத்துக்காட்டான வாழ்க்கையை வாழவேண்டும், பழம் பெருமைகளையே பேசி மகிழ்ந்து, நாட்களை வீணாக்காமல், தம் அறிவு ஆற்றலால் வெளிநாட்டார் வணங்கி வாழ்த்தும்படி தமிழர்கள் வாழவேண்டும் என்று வேண்டுகிறார் பாரதியார்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
3.பல தீவுகள் மீது படையெடுத்துச் சென்ற தமிழ் மன்னர்கள் எந்த எந்தக் கொடிகளை அங்குப் பொறித்தனர்?