தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3-3:4-உலகநோக்கில் விடுதலைச் சிந்தனை

  • 3.4 உலகநோக்கில் விடுதலைச் சிந்தனை

    பாரதி கூறியிருப்பது போல நன்மையும் அறிவும் எங்கிருந்தாலும் அவற்றைத் தழுவி வாழ்வதில் குறையொன்றுமில்லை; மாறாக வளம்பல சேர்க்கும்.

    .................. நன்மையும் அறிவும்
    எத்திசைத் தெனினும் யாவரேகாட்டினும்
    மற்றவை தழுவி வாழ்வீராயின்
    அச்சமொன்றில்லை...........

    (தமிழச்சாதி- அடிகள் 119-122)

    தம் கோட்பாட்டிற்கு இணங்கவே பாரதியும் பிறநாட்டு நல்லறிஞர் நூல்கள் பலவற்றைக் கற்றார். தெளிவடைந்தார். தேனீயைப் போல் திரட்டித் தம்வயமாக்கிக் கொண்டார். சீன, ஜப்பானியக் கவிதைகள் மொழிபெயர்ப்பு, அமெரிக்கக் கவி வால்ட் விட்மனின் படைப்புகள், ஷேக்ஸ்பியர் (Shakespeare), டென்னிசன் (Tennyson), வோர்ட்ஸ் வொர்த் (Wordsworth), பைரன், கீட்ஸ், ஷெல்லி என்ற அனைத்து அறிஞர்களின் படைப்புகளைச் சுவைத்தார். வெறும் இலக்கிய இன்பத்திற்காக அன்று; அவற்றுள் இழையோடிய, மானுட விழுமியங்களால், அவற்றுள் பின்னிப் படர்ந்த மானிட நலன் காக்கும் உணர்வு எழுச்சிகளால், கவரப்பட்டு (சமூக அக்கறையோடும் மக்கள் மீது கொண்ட அளவிட இயலாத அன்பினாலும்) அவற்றையெல்லாம் உள்வாங்கிக் கொண்டார். மேற்குறிப்பிட்ட உலக அறிஞர்களின் வாயிலாக, விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் எனும் முப்பெரும் கோட்பாடுகளில் பாரதியார் ஈடுபாடு கொண்டார்.

    3.4.1 விடுதலை - விளக்கம்

    விடுதலை என்பது யாது? பாரதியே கூறுகிறார். அதை முதலில் பார்க்கலாமா? ‘மனித உயிர்களுக்கு இருவித நிலைமை தான் உண்டு. எதுவும் தன் விருப்பப்படி செய்து, அதனால் ஏற்படக் கூடிய இன்ப துன்பங்களுக்குத்தான் பொறுப்பாளியாக இருப்பது ஒரு நிலைமை. அதுதான் சுதந்திரம்’. (பாரதியார் கட்டுரைகள் பக்:99)

    பாரதியே ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் (Herbert Spencer) சொல்லுவதை மேற்கோளாகக் காட்டுகிறார். ‘பிறருக்குத் தீங்கில்லாமல் அவனவன் தன் இஷ்டமானதெல்லாம் செய்யலாம் என்பதே விடுதலை’ அதாவது பிறருக்குக் காயம் படாமலும், பிறரை அடிக்காமலும் வைய்யாமலும், கொல்லாமலும் அவர்களுடைய உழைப்பின் பயனைத் திருடாமலும் மற்றபடி ஏறக்குறைய நான் எது பிரியமானாலும் செய்யலாம் என்ற நிலையில் இருந்தால் மாத்திரமே என்னை விடுதலையுள்ள மனிதனாகக் கணக்கிடத் தகும்’.

    பாரதியின் பரந்த நோக்கு

    தமிழ்நாட்டைச் சார்ந்த பாரதி, தமிழ்நாட்டில் உள்ள தேசியத் தலைவர்களாகிய வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்றோரையும் புகழ்ந்து பாடியுள்ளார். தமிழ்நாட்டின் எல்லையைக் கடந்து இந்திய தேசிய அளவிலான, பாலகங்காதரதிலகர், சத்ரபதி சிவாஜி, மகாத்மா காந்தி போன்ற சிறந்த தலைவர்களையும் சிறப்பித்துக் கூறியுள்ளார். அவற்றிற்கும் மேலாக, உலகளாவிய நிலையில் அவரது பார்வை செல்கிறது. உலகநாடுகளிலுள்ள தலைவர்களைப் பற்றியும், உலகில் உள்ள நாடுகளில் ஏற்பட்ட விடுதலை இயக்கங்கள் பற்றியும் புகழ்ந்து கூறுகிறார்.

    3.4.2 இத்தாலியின் விடுதலை

    ஒரு சமயம் பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்து விளங்கிய இத்தாலி நாடு அந்நியர் படையெடுப்பால் சீர்குலைந்தது. இத்தாலிய நாடு சிசிலி, ரோம், வெனிஸ், நேபில்ஸ் எனத் துண்டு துண்டாகப் பிரிந்தது. ஒற்றுமையிழந்து தளர்ந்து போனது. மக்களும் தன்னம்பிக்கை இழந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பா முழுவதும் தேசிய உணர்வு பெருகவேண்டிய அரசியல் அவசியம் நேர்ந்தது. நெப்போலியன் படையெடுப்பு, ஒற்றுமையாக இருந்தால்தான், இத்தாலி உரிமைகளைப் பெறமுடியும் என்ற விழிப்புணர்வைத் தூண்டியது. இத்தாலி நாட்டின் இந்நிலையைக் கண்ட மாஜினி (Mazzini) என்ற மக்கள் தலைவன் இத்தாலி நாட்டின் பெருமையை மீண்டும் நிலைநாட்ட மக்களுக்குத் தொடர்ந்து உற்சாக மூட்டினான். தேசமே பெரிது என்ற எண்ணத்தை மக்கள் உள்ளத்தில் ஆழமாக விதைத்தான். வாலிபர் சபை ஒன்றை உருவாக்கி நாட்டின் ஒருமைப்பாட்டை வற்புறுத்தினான். ஆஸ்திரிய, பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான குடியரசு இயக்கத்தினையும் வளர்க்க உறுதி கொண்டான். மாஜினியின் எழுச்சி பெறும் உரையால் -தொடர்ந்து அவன் மேற்கொண்ட முயற்சியால் மீண்டும் மீண்டும் பல படையெடுப்புகளை இத்தாலி மக்கள் எதிர்கொண்டனர். பஞ்சத்தையும் பசியையும் பொருட்படுத்தாமல் தேசமே பெரிதெனப் போராடினர். இத்தாலி மக்களின் இந்தப் பண்பு பாரதியைப் பெரிதும் கவர்ந்தது. இந்திய நாடும் அடிமைப்பட்டு ஒற்றுமை குலைந்து நின்ற நிலையில் அவர்களைப் போல் நம் மக்களும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட வேண்டுமென்று ஏங்கினார். அதன் வெளிப்பாடே மாஜினியின் பிரதிக்ஞை என்ற பாடலாகப் பிறந்தது.  
     

    மெலிவுடன் இந்நாள் யாங்கள் வீழ்ந்திருக்கும்
         வீழ்ச்சியின் உணர்ச்சி மீதாணை
    பொலிவுறு புதல்வர் தூக்கினில் இறந்தும்
         புன்சிறைக் களத்திடை யழிந்தும்
    . . . . .  . . . . . .

    (மாஜினியின் சபதப் பிரதிக்கினை: 5 )

    (பொலிவுறு = எழுச்சியுறு, புன்சிறை = இழிந்த சிறை)

     

    இந்த அடிகளில் மாஜினி தன் நாட்டுத் தலைவர்களையும் மக்களையும் பற்றிக் கூறுவது நம் நாட்டின் விடுதலைக்காகப் போராடித் தூக்குமேடை ஏறிய இளைஞர்களையும்; மக்கள் பட்ட துயரங்களையும்; சிறையில் தள்ளப்பட்டுக் கொடுமைகளை அனுபவித்த பெருந்தலைவர்களையும் பற்றிப் பாரதியை எண்ணிப் பார்க்க வைக்கிறது. அது மட்டுமன்றி அவர்கள் பிறந்த நாட்டினின்றும் வேற்று நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்ட கொடுமையையும் நினைத்துப் பார்க்கிறார். அவர்களின் பிரிவைத் தாங்காது அருமை நாட்டின் தாய்மார்கள் விட்டகண்ணீரும் அவர் மனத்தில் தோன்றுகிறது. மாஜினியின் அந்த வார்த்தைகள் எத்துணை யதார்த்தமாய் பாரதியைத் தாக்கியிருக்கும்?

    நீங்களே அந்த பாடல் அடிகளைப் படித்து அதன் தன்மையை எண்ணிப் பாருங்கள்!  
     

    வேற்றுநாடுகளில் அவர்துரத் துண்டும்
         மெய்குலைந்து இறந்துமே படுதல்
    ஆற்றகி லாராய் எம்அரு நாட்டின்
         அன்னைமார் அழுங்கணீ ராணை

    (மாஜினியின் சபதப் பிரதிக்கினை: 6)

    (துரத்துண்டும் = துரத்தப்பட்டும், மெய்குலைந்து = உடல்தளர்ந்து, ஆற்றகிலாராய் = தாங்க முடியாதவராய், அழுங்கணீர் = அழுகின்ற கண்ணீர்)

    இத்தாலியின் நிலையையே ஒத்திருந்தது பாரதநாட்டின் நிலையும். மாஜினியின் சபதத்தைக் கூறுவதின் வாயிலாக நம் மக்களுக்கு விழிப்பூட்ட நினைக்கிறார் பாரதி. அடிமை எங்கிருந்தால்தான் என்ன? அடிமை, அடிமைதானே?

    ஏகாதிபத்தியத்தின் கொடுமையில் சிக்கிய தேசங்களின் நிலைமை ஒன்று போல இருப்பதை உணர்ந்து, விடுதலையும் உயர்வும் பெற ‘இணக்கம் ஒன்றுதான்’ மார்க்கமென்று பாரதி அறிவிக்கிறார்.  

    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு

    (வந்தே மாதரம், 4)  

    என்பதில் மாஜினியின் குரலும் பாரதியின் குரலும் இணைந்து ஒலிக்கவில்லையா?

    3.4.3 பெல்ஜியத்திற்கு வாழ்த்து

    பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை பிரான்ஸ், ஸ்பெயின், ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் பிடியில் சிக்கி அவதிப்பட்ட நாடு பெல்ஜியம். ஏகாதிபத்தியக் கொடுமையை எதிர்த்துத் தொடர்ச்சியாக அது நடத்திய போர்களை நினைத்துப் பார்த்து வியப்படைகிறார் பாரதி. பல்லாயிரம் பேர் நாடு கடத்தலுக்கும், தூக்குமேடைக்கும் பலியானபோதும் அஞ்சாமல் தன்மானம் காக்கப் போராடிய பெல்ஜிய மக்களின் தீரம் அவர் உள்ளத்தை வெகுவாக ஈர்த்தது. கோழைத்தனத்தாலும் அறியாமையாலும் பெல்ஜியம் வீழ்ந்துபடவில்லை; அறத்தினால் - வண்மையினால் - மானத்தால் - வீரத்தால் - துணிவால் வீழ்ந்தது. ஆயினும் அதை வீழ்ச்சியாக பாரதி மனம் ஏற்கவில்லை. வெற்றி என்பதுதான் என்ன? கொடுமைகள் வலிமையுடையாரால் வெற்றியடையும் போது அதை வெற்றியாகவா கருத முடியும்? (இங்கு ஒன்றை நினைவுபடுத்திக் கொள்ளலாமா? அசோக சக்கரவர்த்தி கலிங்கத்தில் பெற்றது வெற்றியா? இல்லை, இனி போரே செய்வதில்லையென அவர் முடிவு செய்தது வெற்றியா? உலகத்தை வெற்றிகொண்டு நடைபோட்ட அலெக்சாண்டர் புருஷோத்தமனை வெற்றிகொண்டதை வெற்றி எனலாமா? இல்லை, தன் நாட்டைப் பலிகொடுக்க விரும்பாத புருஷோத்தமன் அலெக்சாண்டரை எதிர்த்துப் போராடி,  தோல்வி கண்டது வெற்றியா? சிந்தித்துப் பாருங்கள்.) பெல்ஜியம் என்ற சிறிய நாடு ஸ்பானியப் பேரரசை எதிர்த்தது எத்துணைச் சிறப்பு வாய்ந்தது!

    அஞ்சி, அஞ்சி அடிமையாகாமல் மீண்டும் மீண்டும் போர் செய்து, வீரத்தால் மேம்பட்டு நின்ற பெல்ஜியம் பாரதியின் உள்ளத்தை ஈர்த்ததில் வியப்பில்லை.  

    வீரத்தால் வீழ்ந்து விட்டாய்
    மேல்வரை உருளும் காலை
    ஓரத்தே ஒதுங்கித் தன்னை
    ஒளித்திட மனமொவ் வாமல்
    பாரத்தை எளிதாகக் கொண்டாய்
    பாம்பினைப் புழுவே என்றாய்
    நேரத்தே பகைவன் தன்னை
    நில்லென முனைந்து நின்றாய்

    (பெல்ஜியத்திற்கு வாழ்த்து, 4)
     

    (வரை = மலை, முனைந்து = எதிர்த்து)

    அஞ்சி ஒதுங்குவது ராஜதந்திரம் என்று கருதாமல் எதிர்த்துப் போராடிய பெல்ஜியத்தின் வீரமே வீரம்!  

    பிணிவளர் செருக்கினோடும் பெரும்பகை எதிர்த்தபோது
    பணிவது கருத மாட்டாய்
    பதுங்குதல் பயனென்று எண்ணாய்

    (பெல்ஜியத்திற்கு வாழ்த்து, 5)

    (பிணி = துன்பம், செருக்கினோடு = அகந்தையோடு, பதுங்குதல் = பின்வாங்குதல்)

    என்ற அடிகளை நினைக்கும் போது பெல்ஜியத்தின் தார்மீகக் கோபமும், போர்க்குணமும், ஏகாதிபத்திய எதிர்ப்பில் இழப்புகளுக்காக வருந்தாமல் ஈடுபட்ட தீரமும் தெளிவாக விளங்குகின்றன. இந்திய மக்களும் இப்படி இருக்க வேண்டுமென விரும்புகிறார் பாரதி. இப்படியில்லையே என ஏங்குகிறார்.

    3.4.4 உருஷ்யப் புரட்சி

    உலகத்தின் பல நாடுகளில் நிகழ்ந்த பல நிகழ்ச்சிகளைப் பாரதி கவனத்தோடு நோக்கியிருக்கிறார். ஆயினும் ருஷ்ய நாட்டின் புரட்சி அதிகமாகவே அவர் கவனத்தை ஈர்த்துள்ளது. சோவியத் புரட்சியை யுகப்புரட்சி என்கின்றார். ஏகாதிபத்தியத்தின் கையில் சிக்குண்டு வருந்திய உலக நாடுகள் அனைத்திற்கும் நம்பிக்கை தரும் நன்மருந்தாகியது அந்தப் புரட்சி.

    சோவியத் அக்டோபர் புரட்சியைப் பற்றி எழுதும்போது அதன் பொருளாதார அரசியல் முக்கியத்துவத்தைப் பற்றிச் சிந்திக்கிறார்.

    ஜார் மன்னர்களின் கொடுங்கோன்மை வீழ்ந்தது என்று மகிழும் போது இந்திய நிலையை ஒப்பிட்டுப் பார்க்கிறது அவர் உள்ளம். இங்கும் அந்தக் கொடுங்கோன்மை வீழுங்காலம் வருமென நம்பிக்கை கொள்கிறார்.

     

    இரணியன் போல் அரசாண்டான் கொடுங்கோலன்
         ஜாரெனும்பே ரிசைந்த பாவி

    (புதிய ருஷியா, 2)
     

    (பேரிசைந்த = பெயர்கொண்ட)

    பாவி என்ற சொல் பாரதியின் சீற்றத்தையும் வெறுப்பையும் காட்டுகின்றதல்லவா?

     

    இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம்
         இவ்வா றாங்கே
    செம்மை யெலாம் பாழாகிக் கொடுமையே அறமாகித்
         தீர்ந்த போதில்...............

    (புதிய ருஷியா, 4)
     

    (செம்மை = நன்மை)

    புரட்சி தோன்றுகிறது. பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்! எத்தனை நாட்கள் கொடுமையைத் தாங்க முடியும்? எதற்கும் ஓர் எல்லையுண்டல்லவா? அல்லலுற்று ஆற்றாது அழுத கண்ணீர் கொடுங்கோலாட்சியை வீழ்த்தியது. குமுறிய மனங்களின் வெளிப்பாடு புரட்சியாக வெடித்தது. கொடுங்கோன்மை வீழ்ந்ததை எண்ணி மகிழ்கிறார் பாரதி. மகிழ்ச்சித் துள்ளலாக வருகிற அந்த வார்த்தைகளைப் பாருங்கள்! என்ன மகிழ்ச்சி கொடுங்கோல் சாய்ந்ததில்!

     

    சமயமுள படிக் கெல்லாம் பொய்கூறி
         அறங்கொன்று சதிகள் செய்த
    சுமடர் சட சடவென்று சரிந்திட்டார்
         புயல் காற்றுச் சூறை தன்னில்
    திமுதிமுவென மரம் விழுந்து காடெல்லாம்
         விறகான செய்தி போலே

    (புதிய ருஷியா, பாடல். 6)
     

    (சுமடர் = இழிந்தோர், சூற = சுழல் (சுழல்காற்று)

    உவமை எத்தனை இயல்பாக வந்து விழுகிறது. புயற்காற்றில் பெருமரம் வீழ்ந்தால் எப்படியிருக்கும்? விழும்போது ஏற்படும் சத்தம். கற்பனை செய்யும்போதே காட்சி கண்ணில் விரிகிறதல்லவா?

    கிளையோடும் கொம்புகளோடும் இலைகளோடும் மரம் வேரோடு முறிந்து விழுவதுபோலக் கொடுங்கோன்மையும் வீழ்ந்தது.

    இந்தப் புரட்சி உலகுக்கே ஒரு செய்தியைப் பிரகடனப்படுத்தியது. அது என்ன? குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு மேன்மையுற குடிமைநீதி உருஷ்யாவில் எழுந்ததுபோல் எங்கும் எழவேண்டும் என்ற செய்திதான். இந்தியாவிலும் அக்குடியாட்சி மலரவேண்டும் என்று பாரதி விரும்புகிறார். மலரும் என்று நம்புகிறார்.

     

    சோஷலிசக் கோட்பாடு

    உலகுக்கு அவமானம் தரக்கூடிய இந்தப் பொருளாதார ஏற்றத் தாழ்வைத் தகர்த்து சோஷலிசத்தை உருவாக்கியதற்காக உருஷ்யாவை அவர் பாராட்டுகிறார். ஆரம்பத்தில் பலரால் வெறுக்கப்பட்ட இக்கோட்பாட்டின் உயர்வை நன்கு புரிந்து கொண்டு பலநாடுகளும் பின்பற்றும் விதத்தில் லெனின் (Lenin) அவர்களும் பிறரும் செயல்படுவதைப் பாரதி நன்கு பாராட்டுகிறார். பொதுவுடைமைக் கொள்கையானது ஜெர்மனி, ஆஸ்திரேலியா, துருக்கி ஆகிய இடங்களில் வலிமை பெறுவதையும் விட ஆசியாவில் மிகப்பெரிய பகுதியான ஸைபீரியாவிலும் இந்த முறை வந்துவிட்டது எனக் கூறியும் மகிழ்கிறார்.

    பிரான்ஸ், இங்கிலாந்து முதலிய வல்லரசுகள் இக்கோட்பாட்டை விரும்பாமல் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறாகப் பிரச்சாரம் செய்ததைப் பாரதியார் அம்பலப்படுத்துகிறார்.

    உருஷ்யாவின் சமுதாய, அரசியல், பொருளாதார மாற்றங்களை ஏற்றுக் கொண்ட பாரதியார், அங்கு நடந்த அக்டோபர் புரட்சியின்போது சிந்தப்பட்ட ரத்தத்துளிகளுக்காக வருந்துகிறார். ஒருகாலத்தில் தீவிரவாதியாக இருந்த பாரதி பொதுவுடைமை நெறியைப் பாராட்டிய போதும் அந்நெறியைப் பரப்ப ஆயுதமேந்தக்கூடாது என்று எண்ணினார்.

    பிஜித்தீவின் கரும்புத் தோட்டத்தில் துன்பப்படும் பெண்களின் நிலையை எண்ணி வருந்துகிறார். நம் நாட்டுப் பெண்களுக்கு மட்டுமன்றி அங்குள்ள பிறநாட்டு மக்கள் அனைவர்க்காகவும் வருந்துகிறார்.

    3.4.5 பெண்விடுதலை

    பாரதியின் பல்வேறு விடுதலைச் சிந்தனைகளை நீங்கள் வேறு ஒரு பாடத்தில் படிக்கப் போகிறீர்கள். அதில் விரிவாகப் பெண் விடுதலைச் சிந்தனைகளையும் படிக்கவிருக்கிறீர்கள். அதனால் பெண் விடுதலை பற்றிய சில கருத்துகளை மட்டும் இங்குக் காண்பது பொருத்தமாக இருக்கும்.

    பெண் விடுதலை

    பெண்ணுக்கு விடுதலை வேண்டும். பெண்ணுக்கு விடுதலை இல்லையென்றால் பின் இங்கே வாழ்வில்லை; வளமில்லை. அதனால் பெண்ணை அடிமையென்று எண்ணாதே என்கிறார். மேலும் "ஆணுக்கு ஆண் அடிமைப்பட்டிருக்கும் அநியாயத்தைக் காட்டிலும் ஆணுக்குப் பெண் அடிமைப்பட்டிருக்கும் அநியாயம் மிகப் பெரிது" என்பார்.

    பெண்ணடிமை தீர....

    ‘நம் பெண்கள் அடிமைகள்; அதில் சந்தேகமில்லை’ என்று மேலும் கூறுவார். பெண்ணடிமை தீர, பாரதி கூறும் தீர்வு; ‘அடிமைப்பட்டு வாழமாட்டோம்; சமத்துவமாக நடத்தினாலன்றி உங்களுடன் சேர்ந்திருக்க விரும்போம்’ என்று வெளிப்படையாகத் தெளிவாகச் சொல்லவேண்டும் என்று மேலும் விரித்துப் பேசுவார்.


    வையம் தழைக்கும் வழி

    வையம் தழைக்கும்வழி நாட்டின் வளர்ச்சி, சமூக வளர்ச்சி, மனித மேம்பாடு ஆகியவை ஆண், பெண் வளர்ச்சியை ஒட்டியே அமையும். பெண்கள் அறியாமையில் மூழ்கி அடிமைகளாய் இருக்கும்போது ஆண்கள் சுதந்திரம் பெறுவது என்பது இயலாதவொன்று. பெண்கள் அறிவு பெறவேண்டும். ஆணும் பெண்ணும் நிகராகக் கொண்டு அறிவில் ஓங்கும்போதே விடுதலையைப் பெறமுடியும். வையம் தழைக்க வழி பிறக்கவும் முடியும்.
     

    சில பெண்விடுதலைப் போர்கள்

    தென்னாப்பிரிக்காவில் நடந்த பெண் விடுதலைப்போர், துருக்கியில் நடந்த பெண் விடுதலைப் போர், ஐரோப்பாவில் மகளிர் சுதந்திரமாக இருத்தல் ஆகியவற்றை எடுத்துக் கூறி,

    தமிழ்நாட்டு மக்கள் மட்டும் தமது மனுஷ்யப் பதவியை ருசுப்படுத்த வழி செய்யாது இருப்பது ஏன்?

    (பாரதியின் கட்டுரைகள்.பக்.150)

    என்று வினவி, சியூசூன் என்ற சீனத்துப் பெண்ணுரிமைக் கவிஞரின் பாடலைத் தமிழில் பெயர்த்துத் தந்து ஊக்கமூட்டுகிறார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:37:55(இந்திய நேரம்)