Primary tabs
-
இருள் மூடிக்கிடந்த இந்திய நாட்டுக்கு ஒரு விடியலாக இருந்தது பாரதி காட்டிய பாதை. அப்பாதையில் நடைபயின்ற பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை முதலியவர்கள் குறிப்பிடத்தக்கவர் ஆவர்.
ஒன்றிலிருந்து ஒன்று தோன்றுவது உண்மை. பாரதியாரில் இருந்து உருவானவர் பாரதிதாசன். பாரதி, தம்மை வந்து வணங்கிய பாரதிதாசனை ‘எழுக நீ புலவன்’ என்று வாழ்த்தினாராம். தமக்குப் பாதை காட்டியவர் பாரதி என்பதை,
சுப்பிரமணிய பாரதி தோன்றியென்
பாட்டுக்குப் புதுமுறை புதுநடை காட்டினார்(புரட்சிக் கவிஞர் பாவேந்தனார் : வாழ்த்து)
என்று பாரதிதாசன் குறிப்பிட்டிருக்கிறார்.
சக்தி வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் பாரதி. முற்போக்கான கருத்துகள் பல கூறினாலும், தம் தேவைகளை நிறைவேற்றப் பராசக்தியிடம் வேண்டி நிற்கும் பழமை வாதியாகவே விளங்குகிறார். பாரதியிடம் கொண்ட பற்றால் பாரதிதாசனும் முதன்முதலில் "எங்கெங்கு காணினும் சக்தியடா" என்று பாடியிருக்கின்றார். பாரதி, பாரதிதாசன் இவர்களைப் போல் கவிமணியும் தம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அழகம்மையைப் போற்றிப் பாடியிருக்கிறார்.
பாரதியைச் சிறந்த தேசிய கவிஞராக உலகுக்கு அறிமுகப்படுத்தியதே தேசியப் பாடல்கள்தாம். அவை பிற கவிஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கின.
பாரதிதாசன் தேசியப் பாடல்கள் பாடியிருப்பினும் அதை விட மிகுதியாக மக்களாட்சி, அதன் இயல்பு இவை பற்றியே பாடியுள்ளார். பாரதிதாசன் வாழ்ந்த காலத்தில் இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டது. சுதந்திரம் பெறுவதற்கு முன்பு சுதந்திரம் அடைந்து விட்டதாகக் கற்பனை செய்து பாரதி பாடியது போல் பாரதிதாசனும் கி.பி.1950-இல் இந்தியா குடியரசு நாடு என்று அறிவிப்பதற்கு முன்பே இந்தியாவில் மக்களாட்சி மலர வேண்டும் என்று விரும்பிக் கவிதைகள் இயற்றியிருக்கிறார். அதன் அடிப்படையில் தான் அவருடைய படைப்புகளான கடல் மேல் குமிழிகள், வீரத்தாய், புரட்சிக்கவி, பாண்டியன் பரிசு முதலியவை விளங்குகின்றன.
கீழே இடம் பெறும்
நாட்டினிலே குடியரசு நாட்டி விட்டோம்
இந்நாள் நல்லபல சட்டங்கள் அமைத்திடுதல் வேண்டும்(கடல் குமிழிகள், அடி-409, 410)
என்ற பாடல் மக்களாட்சியின் தேவையை, சிறப்பை உணர்த்துகிறதல்லவா?
மேலும்,
எல்லார்க்கும் தேசம் எல்லார்க்கும் உடைமை எலாம் எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே
(வீரத்தாய்- அடி 256,257)
என்னும் பாடலடிகள் நாட்டில் ஏற்றத் தாழ்வின்றி அனைவரும் சமம், என்ற பொதுவுடைமைக் கருத்தை அவர் வலியுறுத்துவதைக் காட்டுகின்றன.
இமயம் முதல் குமரிவரை அலையடித்துப் பொங்கியது போன்ற தேசிய விடுதலைப் போராட்டம் பற்றிக் கவிமணி மிகுதியான பாடல்கள் பாடவில்லை. இதற்கான காரணம் உண்டு. கவிமணி வாழ்ந்த குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்குட்பட்டது. இங்குப் பண்டைச் சேர மரபின் சந்ததியினர் ஆட்சி செய்தினர். அவர்கள் வெள்ளையருக்குத் திறை செலுத்தி வந்த போதிலும் வெள்ளையரின் நேரடியான ஆதிக்கம் திருவிதாங்கூரில் இல்லை. மன்னர்கள் குடிமக்கள் நலனில் அக்கறை கொண்டு வாழ்ந்தனர். ஆகவே, இந்தியாவின் பிற பகுதிகளில் ஏற்பட்ட அளவுக்கு விடுதலைப் போராட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஏற்படவில்லை. எனவே, கவிமணி, தேசியப் பாடல்கள் மிகுதியாகப் பாடவில்லை போலும்.
இருப்பினும் வ. உ. சிதம்பரம் பிள்ளை சிறை சென்றதை,
- ஐயன்
சிதம்பரம் அன்று சிறை
சென்றிலனேல், இன்று
சுதந்திரம் காண்பாயோ
சொல்(வ.உ.சிதம்பரம் பிள்ளை - 2)
என்று உளமாரப் பாராட்டியிருக்கிறார்.
நாமக்கல் கவிஞரும் பாரதியைப் போன்று விடுதலைப் பாடல்கள் பாடியதற்குக் ‘காந்தி அஞ்சலி’ என்ற தலைப்பில் உள்ள பாடல்களே தக்க சான்று.
காந்தியென்ற சாந்தமூர்த்தி
தேர்ந்துகாட்டும் செந்நெறி
மாந்தருக்குள் தீமை குன்ற
வாய்ந்த தெய்வ மார்க்கமே(காந்தி அஞ்சலி)
இப்பாடலில் காந்தியின் அரசியல் நெறியைப் பாராட்டுகிறார் நாமக்கல் கவிஞர். இது போலவே பாரதி பாடிய ஏனைய பாடுபொருள்களான தேசியத் தலைவர்கள், சமுதாய முன்னேற்றம், இயற்கை முதலிய பாடுபொருள்களையும், அவருடைய எளிய நடையையும், பழகு தமிழில் அமைந்த சொற்களையும், யாப்பு வகையையும் அடியொற்றிப் பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் போன்ற புலவர்கள் பாடியிருக்கின்றனர். அவற்றில் சில பாடல்களைப் பார்க்க ஆவலாக உள்ளதல்லவா?
ஏழைச் சிறுமியர் நிலை
சமூகத்தில் புரையோடிச் செல்லரித்து வந்த மூட வழக்கங்களை, குருட்டு நம்பிக்கைகளை வேரறுக்கப் பாரதியாரையும், பாரதிதாசனையும் போல் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையும் கவிதை இயற்றிருக்கிறார்.
நாட்டில் நிலவும் வறுமை, பட்டினி, பசி கண்டு நெஞ்சம் கரைந்தவர் பாரதி. கவிமணியும் அவரைப் போல் ஏழைகளின் அவல நிலையையும் ஏக்கங்களையும்,
அன்னப்பால் காணாத ஏழைகட்கு - நல்ல
ஆவின்பால் எங்கே கிடைக்கும் அம்மாகாப்பி காப்பியென்று கத்துவீரே - அதைக்
கண்ணிலே கண்டதும் இல்லை யம்மா!(ஏழைச் சிறுமியர் மனப்புழுக்கம் - 8,11)
என்ற பாடல்களில் சின்னக் குழந்தைகளே தம் வாயால் தங்கள் அவல நிலையைக் கூறுவதாகச் சித்தரித்துள்ளார்.
குழந்தையின் குதூகலம்
பாரதி குழந்தைகளுக்காகப் பாடியது போன்று கவிமணி குழந்தைச் செல்வம் என்னும் நூலைக் குழந்தைகளுக்கே உரிமையாக்கி வைத்தார். குழந்தையைக் குதூகலப்படுத்தும் பாடல் ஒன்றைப் பாருங்கள்.
சிங்கார மான வண்டி
சீமையிலே செய்த வண்டி
மாடில்லை குதிரையில்லை
மாயமதாய்ப் பறந்திடும் பார்
அக்காளும் தங்கையும் போல்
அவைபோகும் அழகைப் பார்(மலரும் மாலையும், சைக்கிள், 2,4,8)
இந்தப் பாடல் பாரதியாரின் பாட்டை எதிரொலிப்பது போல் உள்ளது அல்லவா?
படிப்பும் உழைப்பும் தேவை
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கல்வி, உழைப்பு ஆகியவற்றின் தேவையை,
படிப்புத் தேவை - அதோடு
உழைப்பும் தேவை - முன்னேற
படிப்புத் தேவை...
வீரத் தலைவன் நெப்போ லியனும்
வீடு கட்டும் தொழிலாளி
ரஷ்யா தேசத் தலைவன் மார்சல்ஸ்டாலின்
செருப்புத் தைக்கும் தொழிலாளி
விண்ணொளி கதிர் விவரம் கண்ட
சர்.சி.வி. ராமனும் தொழிலாளி(பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் கவிதைகள்)
என்று வரலாற்றுப் புகழ் பெற்ற மேதைகளைச் சான்று காட்டிச் சிறப்பாகப் பாடியிருக்கிறார். பாடல்கள் எளிமையாக இருக்கின்றன அல்லவா?
இவ்வாறு பாரதியார் உருவாக்கிய புதுயுகத்தில் பல கவிஞர்கள் பாடல்கள் இயற்றியுள்ளனர். இன்றும் அவரைப் பின்பற்றிக் கவிதைகள் இயற்றும் அளவு பாரதியின் செல்வாக்கு நிலைத்து நிற்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. பாரதியின் அடியொற்றிப் பாடிய ஒரு குழுவும், பாரதிக்குத் தாசனாக விளங்கிய பாரதிதாசனை அடியொற்றிப் பாடுகிற ஒரு குழுவுமாகக் கவிஞர்களைக் கூறும் மரபும் இன்றும் நின்று நிலவுகிறது.