தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

5-5:4-வடிவம்

  • 5.4. வடிவம்

    ஒரு கவிதையின் பாடுபொருளுக்கு, பாடலின் கருத்துக்கு ஏற்ற புற அமைப்பு அல்லது உருவம் வடிவம் எனப்படும். பொதுவாக இது பாடலின் யாப்பு நிலையைக் குறிக்கும்.

    தமிழ்க் கவிதை வரலாற்றில் புதிய கவிதை வகைகளைப் படைத்தவர் பாரதி. காலமாறுதலுக்கேற்ப, புதிய இலக்கிய வகைகள் தோன்றுதல் இயல்பு.

     

    இந்த மாற்றங்கள் நான்கு வகைப்படும். அவை,

    1.
    பழைய வடிவமும் பழைய பாடுபொருளும்
    2.
    பழைய வடிவமும் புதுப் பாடுபொருளும்
    3.
    புது வடிவமும் பழைய பாடுபொருளும்
    4.
    புது வடிவமும் புதுப் பாடுபொருளும்

    என்பனவாகும்.
     

    5,4.1 பழைய வடிவமும் பழைய பாடுபொருளும்

    பாரதியார் பழைய தமிழ் இலக்கியங்களை வழுவறக் கற்றுத் தேர்ந்தவர். முன்னோர் கூறியதைப் பொன்போல் போற்றி அந்த இலக்கியங்களில் உள்ள பாடுபொருள், வடிவம் (யாப்பு) முதலியவற்றைப் பின்பற்றிப் பாடல்கள் பல பாடியிருக்கிறார்.

    பரிசில் வேண்டிப் பாடப்படும் சீட்டுக்கவியும், ஓலைத் தூக்கும் பாரதியார் பாடியிருக்கிறார். மாணிக்க வாசகரின் நீத்தல் விண்ணப்பம், போற்றித் திரு அகவல் போன்று மகாசக்திக்கு விண்ணப்பம், போற்றி அகவல் ஆகிய பாடல்கள் இயற்றியிருக்கிறார். அருணகிரிநாதரின் திருப்புகழ் என்னும் நூலின் செல்வாக்கால் பாரதியார் மகாகாளியின் புகழ், சிவசக்தி புகழ், சக்தி திருப்புகழ் முதலிய பாடல்கள் புனைந்துள்ளார். ஒருவர் இறந்த உடன் அவரை நினைத்து மனம் வருந்திப் பாடும் இரங்கற்பாவான கையறுநிலைப் பாடல், இன்னது செய்யாவிடில் இன்னன் ஆகுக என்னும் பாடுபொருள் கொண்ட வஞ்சினம் முதலிய பாடல்களும் பாடியிருக்கிறார். சிந்துக்குத் தந்தை என்று பாராட்டும் வகையில் ‘சிந்து’ யாப்பில் பல பாடல்கள் பாடியிருப்பதைக் காணலாம்.

    ஒரே யாப்பில் அமைந்த 10 பாடல்கள் கொண்டது ஒரு பா ஒரு பஃது ஆகும். பாரதி, வெண்பா யாப்பில் பாடிய ‘இளசை ஒருபா ஒரு பஃது’ என்னும் பாடலின் வடிவமும் கருப்பொருளும் பழையதே ஆகும்.
     

    5.4.2 பழைய வடிவமும் புதுப் பாடுபொருளும்

    பழைய வடிவத்தில் புதுப் பாடுபொருளையும் பாரதியார் கையாண்டிருக்கிறார். பாமரரும் பாடலின் பொருள் புரிந்து கொள்ளும் அளவு இவருடைய பாடல்கள் எளிமையானவை. மேலும், பாரதியார் தம் பாடல்களை இசையுடன் பாடியதாலும் அவர் பாடல்கள் அனைவரையும் சென்றடைந்தன என்று கொள்ளலாம்.

    பாரதியின் காலத்திற்கு முன்புள்ள பாடல்கள் கடின நடையில் விளங்கின. அந்தப் பாடல்களில் இரண்டைப் பாருங்கள்.
     

     

      தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
      துத்தித் துதைதி துதைந்தத்தா தூதுதி

    (தனிப்பாடல் திரட்டு - 313)

    இந்தப் பாடல் ‘த’கர எழுத்துகளை மட்டுமே கொண்ட தகர வருக்கப்பாடல்.

    இந்தப் பாடலைப் பிரிக்கும் முறை

    (தத்தி - சுற்றிச் சென்று, தாது - பூவின் மகரந்தம், (தேன், பூவிதழ், மலர்), ஊதுதி - ஊதுகின்றாய். (அருந்துகின்றாய்), தத்துதி - பாய்ந்து செல்கின்றாய். துத்தி - 'து' 'தி' என, துதைதி - ஒலித்து, துதைந்து - நெருங்கி, அணுகி)

    இதன் பொருள்: வண்டே, நீ சுற்றிச் சென்று மகரந்தத்தை ஊதுகின்றாய் மகரந்தத்தை ஊதிய பின்னர்ப் பாய்ந்து செல்கின்றாய். 'து' 'தி' என ஒலித்து மலர்களை அணுகுகின்றாய்.
     

    சண்ட வெந்தழல்ப சித்த ழன்றுலகு
        தன்னை யுண்ணஎழு தன்மைபோல்
    கண்ட மொன்பதும் எரிந்தி டத்தெறு
        கடுங்கொ ழும்பொறிகள் சிந்தின
    கொண்ட லிற்புகை பரந்து சுற்றின
        கொடுஞ்சு டர்ப்படு கொழுந்துபோய்
    அண்ட முற்றன பரந்த தந்தர
        மதற்கும் அப்புறம் எழுந்ததே

    (அரிச்சந்திர புராணம் - 557)

    பாடலைப் பிரிக்கும் முறை.

    வெந்தழல் பசித்து அழன்று உலகு தன்னை
    கடும் கொழும் பொறி
    பரந்தது அந்தரம் அதற்கும் அப்புறம்

    மேற்கூறிய சொற்களை இவ்வாறு பிரித்துப் படித்தால் மட்டுமே பொருள் விளங்குகிறது. இங்ஙனம் பிரிப்பதற்கு யாப்பு இலக்கணம் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் எளிய சொற்களை இயல்பாக இணைத்துக் காட்டுகிற முறையையே எளிய நடை அல்லது புதிய நடை என்கிறோம். இந்த நடையைத் தான் பாரதி பின்பற்றினார்.

    பாரதியின் எளிய நடையிலமைந்த பாடலைப் பாருங்கள்.

     

    தேடியுனைச் சரண் அடைந்தேன் தேச முத்துமாரி!
    கேடதனை நீக்கிடுவாய், கேட்ட வரம் தருவாய்
    சக்தியென்று நேரமெல்லாந் தமிழ்க் கவிதை பாடி,
    பக்தியுடன் போற்றி நின்றால் பயமனைத்தும் தீரும்

    (தேசமுத்துமாரி - 1,4)

    இந்தப் பாடல் யார் காதில் விழுந்தாலும் அவர்கள் அதைப் பாடும் அளவு மக்கள் பேசும் மொழியில் எளிமையாக உள்ளது. இப்போது முன்பு கூறிய பாடல்களுக்கும் பாரதியார் பாடலுக்கும் உள்ள வேறுபாடு புரிகிறதல்லவா? இதுவே பாரதியின் சிறப்புக்கும் வெற்றிக்கும் காரணம்.

    பாரதி தாம் சொல்ல வந்த செய்தி மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதில் மிகவும் கவனம் செலுத்தியிருக்கிறார். அவர் சொல்ல வந்த செய்தி : இன்று நாளை என்று நாட்களைத் தள்ளி போடாமல் இன்றே செய்க! இப்போதே செய்க! என்று சொல்லும் அளவிற்கு இன்றியமையாதவை. அவை நாட்டு விடுதலை, சமுதாய முன்னேற்றம் முதலியனவாகும்.

    ஆகவே, மக்கள் மொழியில் மிக எளிமையாகப் பாடியதால் அவர் எண்ணம் நிறைவேறியது.

    பாட்டின் பொருளுக்கும் வடிவிற்கும் இயைபு உண்டு. உணர்த்தப்படும் பொருளும் அதை உணர்த்தும் வடிவமும் பிரிக்க முடியாதன. கவிதை வடிவ வகையில், தமக்கு முன்னவர்களான இளங்கோவை, கம்பரை, வள்ளுவரை வழிகாட்டியாகக் கொள்கிறார். ஆயினும் தம் புரட்சி நோக்கில் அமைந்த புதுமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

    பாரதியாரின் கவிதைகள் தேசிய கீதங்கள் 60, தோத்திரப் பாடல்கள்-62, ஞானப் பாடல்கள் 30, முப்பெரும் பாடல்கள்-3, சுயசரிதை-8, பிற பாடல்கள் -5, நீதி நூல்கள் - 3, பல்வகைப் பாடல்கள் - 66 வசன கவிதைகள் - 7, பாரதி அறுபத்தாறு என 237 தலைப்புகளில் பாடல்கள் காணப்படுகின்றன. (பாரதியார் கவிதைகள், பூங்கொடி பதிப்பகம், சென்னை, 2001) இவற்றில் வெண்பா, ஆசிரியப்பா போன்ற பாவகைகளும் ஆசிரிய விருத்தம், கலித்துறை, வஞ்சித்துறை ஆகிய பா இனங்களும் கண்ணி, சிந்து, தாழிசை முதலிய இசைப்பாடல் வகைகளும் பயின்று வருகின்றன. இதைப் பற்றி, பாக்களும் பாவினங்களும் (D03121-3124) என்ற பாடத்தில் விரிவாகக் காணலாம்.

    பொருளைச் சிறப்பித்துக் கூறப் பாரதி பல்வகைப் பழைய வடிவங்களைக் கையாண்டு அவற்றுள் புதுப்பாடுபொருளைப் புகுத்தியிருக்கிறார்.

    நான்மணிமாலை

    பாரதியின் விநாயகர் நான்மணி மாலை என்னும் பாடல் அந்தாதி அமைப்பில் (அந்தாதி என்பது இலக்கிய வகைகளில் ஒன்று. ஒரு பாடலின் இறுதி எழுத்து, அசை, சீர், அடி இவற்றில் ஏதேனும் ஒன்று அடுத்த பாடலில் முதலில் வருமாறு பாடுவது அந்தாதி. அந்தம் = முடிவு, ஆதி = தொடக்கம்)  40 பாடல்களில் அமைந்துள்ளது. இதற்கு முன்னோடியான நூல் பட்டினத்தாரின் ‘கோயில் நான்மணிமாலை’ எனக் கொள்ளலாம். கோயில் நான்மணிமாலை சிவபெருமானின் சிறப்புகளைக் கூறும் நிலையில் காணப்படுகிறது. ஆனால் விநாயகர் நான்மணிமாலை வெளிப்படையாக விநாயகர் பெயரில் அமைந்திருந்தாலும் அதன் பாடுபொருள் கவிஞரின் நூறாண்டுவாழ்வு வேண்டல் (7,20) பல சமய இறைவரைக் குறிப்பிடல் (8), தம் தொழிலைக் கூறல் (25), நாட்டைத் துயரின்றி அமைக்கும் நோக்கம் கூறுதல் (28) விடுதலைக்கு இசையாத மனத்தைக் கடிதல் (36) முதலிய பாடுபொருள்களைக் கொண்டதாய், கோயில் நான்மணி மணிமாலையின் பாடுபொருளில் இருந்து வேறுபட்டு விளங்குகிறது.

    ஆத்திசூடி

    மனிதரை நன்னெறிப் படுத்துவதற்கான ஓரடி நீதிக் கருத்துகளை ஒளவையார் ஆத்திசூடியில் கூறியிருக்கிறார். இதனால் பெரிதும் கவரப்பட்ட பாரதியார் தம் காலத்திற்குத் தேவையான கருத்துகளை ஒளவையார் போன்று புனைந்திருக்கிறார். சில பாடல்களில் ஒளவையாரைப் பின்பற்றியும் சில பாடல்களில் புதுமையைப் புகுத்தியும் கவிதைகளை இயற்றியிருக்கிறார். இது, அவர் வாழ்ந்த கால உணர்வின் எழுச்சியால் ஏற்பட்ட வேறுபாடாகும். பாரதியாரைப் பின்பற்றி, பாரதிதாசன் ஆத்திசூடி பாடியிருக்கிறார். அவருடைய எண்ணப்போக்கு வேறானது. மூன்று ஆத்திசூடிகளும் பொருளில் வேறுபடுகின்றன. ஏனெனில் ஒவ்வொன்றும் அந்தந்தக் காலச்சூழலைக் காட்டும் கண்ணாடியாக விளங்குகின்றன.

    ஒளவையார் தம்முடைய இறைவாழ்த்துப் பாடலில் சிவபெருமானை வணங்குகிறார். ஆனால் சமயப் பொது நோக்குக் கொண்ட பாரதியார், எல்லாக் கடவுளர் தம் ஆசியையும் வேண்டிப் பாடுகிறார். இது பல பெயர்களில் வழங்கப்படும் பரம்பொருள் ஒன்று என்ற அவருடைய மனத்தைப் பிரதிபலிக்கிறது. கடவுள் நம்பிக்கை இல்லாத பாரதிதாசன் எந்தக் கடவுளையும் வாழ்த்திப் பாடவில்லை.

    ஒளவையார் ‘ஆறுவது சினம்’ (2) என்று சினத்தை அடக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். ஆனால் பாரதியார் ‘ரௌத்திரம் பழகு’ (96) என்று சினம் கொள்ளத் தெரியவேண்டும் என்கிறார். ஒளவையார் போர்த்தொழில் புரியேல் (88) என்கிறார். பாரதியார் போர்த்தொழில் பழகு (74) என்று போர்முனையில் போரிட நாட்டு மக்களை ஊக்குவிக்கிறார். அரசியல் போரில் இந்தியா இறங்கி விட்டது. அதிலிருந்து விலகி நிற்பதில் பயன் இல்லை, விலகி நிற்க இயலாது. நாட்டு விடுதலைப் போரில் வீரமுடன் போராட வேண்டும். எனவே போர்க் கொடியை உயர்த்துமாறு பாரதியார் நாட்டு மக்களை வேண்டுவது அக்காலச் சூழலுக்குத் தேவை அல்லவா?
     

    ஆறுவது சினம் x ரௌத்திரம் பழகு போர்த்தொழில்புரியேல் x போர்த்தொழில்பழகு

     

    பழ மரபை நன்குணர்ந்த பாரதியார், அதனைக் கண்ணை மூடிக் கொண்டு பாராட்டுவதில்லை. பயன் உள்ளதாக இருக்குமாயின் பழைய மரபை மதித்தல் வேண்டும் அல்லது அவற்றைக் கைவிடத் தயங்கக் கூடாது என்பது அவர் எண்ணம்.

    பாரதியார் தாசனாக விளங்கிய பாரதிதாசன் உலகியல் கண்ணோட்டத்தில் உலகைப் பார்க்கிறார். அவர் இவ்வுலக வாழ்வில் மக்களுக்கு மகிழ்ச்சியான செயல் செய்தால் போதுமானது என்று எண்ணுகிறார்.

    குள்ள நினைவு தீர் 17 (தாழ்ந்த எண்ணங்களை நீக்கி விடுக) என்றும் கைம்மை அகற்று 21 (விதவை நிலையை நீக்கு) என்றும் பாடுகிறார் பாரதிதாசன். பாரதியாரிடம் இருந்த சமய உணர்ச்சியோ உயர்ந்த அறக்கருத்துகளோ பாரதிதாசன் கொண்டிருக்கவில்லை. அவருடைய கொள்கைகள் எல்லாம் உலகியல் வாழ்விற்குத் தேவையானதைக் குறிப்பிடுவதேயாகும். ஏனெனில் அவருடைய பாடல்களில் சமுதாய முன்னேற்றமே மையமாக இருந்தது.

    திருப்பள்ளி எழுச்சி

    பாரதியார் பாடிய பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி என்ற பாடல் எண்சீர் ஆசிரிய விருத்தத்தால் ஆனது. இது மாணிக்க வாசகர் சிவபெருமானைப் பள்ளி எழுந்தருளுமாறு பாடிய திருப்பள்ளி எழுச்சி என்னும் இலக்கிய வகை போன்றது. பாரதியார்,
     

     

    நின்னெழில் விழியருள் காண்பதற்கு எங்கள்
         நெஞ்சகத்து ஆவலை நீஅறி யாயோ?
    இன்னமும் துயிலுதி யேல்இது நன்றோ?
         இன்னுயி ரேபள்ளி எழுந்தரு ளாயே!

    (பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி - 14)
     

    என்று பாரத மாதாவைத் துயில் உணர்த்துகிறார். இப்பாடல் பாரதியின் சுதந்திர வேட்கையைக் காட்டுகிறது.

    பாரத நாட்டின் அனைத்து மாநில மக்களும் சுதந்திரத்திற்காகப் போராடும் நிலையை,
     

    விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி
         வேண்டிய வாறுஉனைப் பாடுதும் காணாய்

    (பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி - 5)
     

    (விதம் = வகை)

    என்றும்,

    பொங்கியது எங்கும் சுதந்திர நாதம்

    (பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி - 2)

    என்றும் விளக்குகின்றார்.

    காவியம்

    மகாபாரதக் கதையின் ஒரு பகுதியை எடுத்துப் புதுப்பொலிவு கொடுத்துப் பாஞ்சாலி சபதம் என்ற காவியத்தை இயற்றியிருக்கிறார் பாரதி. அது, காவியக் கதையைக் கருவாகக் கொண்டு இருந்தாலும் இந்திய நாட்டின் அரசியல் பின்னணி அதில் அடங்கி உள்ளது. ‘பாஞ்சாலி’யை, பாரத அன்னையாக உருவகித்துள்ளார். அவள் விடுதலை பெற வேண்டும் என்ற நோக்கில் அமைந்திருக்கிறது பாஞ்சாலி சபதம். மேலும் விரிவாக வேண்டுமெனில் பார்க்க. (Co114) : பாரதியாரின் முப்பெரும் பாடல்கள்.

    இவை தவிரக் கும்மி, கோணங்கி முதலிய நாட்டுப்புறப் பாடல் அமைப்பிலும் பாரதியார் பாடல்கள் இயற்றியிருக்கிறார்.

     

    5.4.3 புது வடிவமும் பழைய பாடுபொருளும்

    தமிழ்க் கவிதை உலகில் புதுமை படைத்தவர் பாரதி. தாம் புதுமைப் படைப்பாளர் என்பதை,
     

    சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது,
         சொல்புதிது, சோதி மிக்க
    நவகவிதை எந்நாளும் அழியாத
         மகா கவிதை யென்று நன்கு

    (ஓலைத்தூக்கு - 3)

    என்ற பாடலில் புதிய சுவையுடன் புதிய பொருள் கொண்ட எந்நாளும் அழியாத கவிதையைத் தாம் பாடப் போவதாகப் பாரதி குறிப்பிடுகிறார். பாரதியார், சொற்களைவிடப் பாடல் உணர்த்தும் பொருளையே பெரிதாகக் கருதியதை அவருடைய பாடல்கள் காட்டுகின்றன.

    பாரதியார் தமிழில் கவிப்புலமை பெற்றிருந்தது போலவே இசையிலும் புலமை பெற்று விளங்கியிருக்கிறார்.

    இவருடைய பாடல்கள் சிலவற்றில் ராகம், பல்லவி, தாளம் என்பதற்கு இவர் அத்துணையாக மதிப்பளிக்கவில்லை. தம் பாடல்களுக்கு இவர் குறித்துள்ள ராகம் அப்பாடலின் கருத்து எந்த ராகத்தில் பாடினால் நன்றாக வெளிப்படும் என்று எண்ணிக் குறிக்கப்பட்டதாகும். இவ்வாறு ராகம் குறித்த முறை கருத்துத் தழுவிய புதிய முறையாகும் என்பார் வசந்தா இராமநாதன். (கவியுலகக் கதிரவன் பாரதி, பக். 31)

    சுயசரிதை

    ஒருவர் தம் சொந்த அனுபவங்களை உணர்ச்சிப் பெருக்குடன் விவரித்துச் சொல்வது சுயசரிதையாகும். தமிழிலே பலர் சுயசரிதையை எழுதியிருக்கின்றனர். அவர்கள் தம் சுய சரிதையை வெளியிட மேற்கொண்ட வடிவம் உரைநடையாகும். ஆனால் பாரதியோ தம் சுயசரிதையைக் கவிதை வடிவில் தந்திருக்கிறார். சுயசரிதையைக் கவிதை வடிவில் பாடிய முதல் கவிஞர் பாரதி தான் என்பார் சிலம்புச் செல்வர் மா. பொ. சிவஞானம் (பாரதியாரின் பாதையிலே, பக்: 75) இது ஆசிரியப்பாவின் இனமான ஆசிரிய விருத்தத்தால் ஆனது: ஒவ்வொரு அடியிலும் எட்டுச் சீர்கள் உள்ளன. 49 பாடல்களைக் கொண்டது.

    பெரும்பான்மையான சுயசரிதைகளில் எழுதுபவரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளே காணப்படும். ஆனால் பாரதியாரின் சுயசரிதையின் மூலம் அந்நியர் ஆட்சியின் விளைவால் தனிமனிதனுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு, சமுதாய நிலை முதலியனவற்றை அறிந்து கொள்ள முடிகிறது. பார்க்க (C0111: பாரதியாரின் வாழ்க்கைச் சித்திரம்) சுயசரிதையில், கனவு, முன்னுரை, பிள்ளைக்காதல், ஆங்கிலப் பயிற்சி, மணம், தந்தை வறுமை எய்திடல், பொருள் பெருமை, முடிவுரை ஆகிய தலைப்புகளின் கீழ் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. பாரதியாரின் தந்தை ஒரு பருத்தி அரவை ஆலை தொடங்கினார். ஆங்கிலேயருடன் போட்டியிட முடியாமல் அவர் தோல்வி அடைந்து பணத்தை இழந்த நிலையை,
     

    ஈங்கு இதற்கிடை எந்தை பெருந்துயர்
    எய்தி நின்றனன் தீய வறுமையால்
    ஓங்கி நின்ற பெருஞ்செல்வம் யாவையும்
    ஊணர் செய்த சதியில் இழந்தனன்

    (சுயசரிதை -39)

    (ஊணர் = ஆங்கிலேயர்)

    என்று விளக்குகிறார். ஆங்கிலேயரின் ஆதிக்கம் நாட்டை மட்டுமன்றித் தனி நபரையும் பாதித்ததைக் காட்டுகிறது.

    தாய்மொழி மறந்து ஆங்கில மொழி நாட்டு மொழியாகி அதைக் கற்க வேண்டி வந்த நிலையை நினைத்து,
     

    நெல்லையூர் சென்றவ் வூணர் கலைத்திறன்
         நேரு மாறென எந்தை பணித்தனன்

    (சுயசரிதை - 21)
     

    என்று வருந்துகிறார் பாரதி.

    பாலருந்தும் பருவத்துக் குழந்தைகளை மணம் செய்து கொடுக்கும் கொடுமையைச் சாடுகிறார் (சுயசரிதை. 34)

    அவருடைய தந்தை போனபின் அவர் குடும்பத்தில் வறுமை சூழ்ந்தது. அப்போது பொருளின் தேவையை உணர்ந்த பாரதி ‘பொருளி லார்க்கிலை இவ்வுலகு’ (43) என்ற வள்ளுவர் கூற்றை நினைவு கூர்கிறார்.

    இங்ஙனம் பாரதியின் சுயசரிதை அவருடைய வாழ்க்கைப் பின்னணியை மட்டுமன்றி, அக்காலச் சமுதாயத்தைப் பற்றியும் விளக்குகிறது.

     

    5.4.4 புது வடிவமும் புதுப்பாடுபொருளும்

    வசன கவிதை

    தமிழ்க் கவிதை உலகில் புரட்சிகரமான முறையில் ‘வசன கவிதை’ என்னும் ஒரு புதிய கவிதை வடிவத்தைப் பாரதியார் அறிமுகம் செய்கின்றார். இது உரைநடையுமல்லாமல் செய்யுள் நடையுமல்லாமல் ஆங்கில வசன கவிதையை (blank verse) ஒட்டியது. இதற்கு மூலமாகவும் தூண்டுதலாகவும் அமைந்தது அமெரிக்கக் கவிஞரான வால்ட் விட்மனின் புல்லின் இதழ்கள் (Leaves of grass) என்ற கவிதையாகும். வசன கவிதை சந்தயாப்பு எதுவும் இல்லாமல் உரைநடைச் சொற்களை அடுக்கி அமைத்த வடிவமாகக் காணப்படுகிறது. இது இக்காலத்துப் புதுக் கவிதையின் அமைப்பில் உள்ளது. புதுக்கவிதைக்கு வித்திட்டவர் பாரதி எனக் கொள்ளலாம்.

    வசன கவிதையில் காட்சி, சக்தி, காற்று, கடல், ஜகத் சித்திரம், விடுதலை, தந்தையும் மகனும் கடவுளும் என்ற தலைப்புகள் பாடுபொருள்களாக விளங்குகின்றன. கடல், காற்று முதலியவை பற்றிக் காப்பிய இலக்கியங்கள் கூறினாலும் அவற்றின் சக்தி முதலியவை பற்றி பாரதி போல் வேறு யாரும் பாடியதில்லை. மேலும், அவர் தத்துவக் கருத்துகளையும் ஆங்காங்கே கூறிச் செல்கிறார். பாரதியார், காட்சி என்ற தலைப்பில் இன்பம், ஞாயிறு என்னும் இரு பிரிவுகளைக் கூறி, உலகமும் உலகில் உள்ள அனைத்தும் இன்பம் பயப்பது என்று காட்டுகிறார். அதற்குச் சான்றாக,
     

    உணர்வே, நீ வாழ்க, நீ ஒன்று, நீ ஒளி
    நீ ஒன்று, நீ பல
    நீ நட்பு நீ பகை
    நன்றும், தீதும் நீ
    நீ அமுதம், நீ சுவை, நீ நன்று,  நீ இன்பம்

    (வசன கவிதை, காட்சி, இன்பம்: 7)
     

    என்னும் பாடல் விளங்குகிறது. ஞாயிறு உலகிற்கு ஒளியும் வெம்மையும் மட்டுமன்றி மழையும் பொழிவதைக் காட்டுகிறார் பாரதி.

    தமிழ் இலக்கியங்களில் ஞாயிறு பற்றிய செய்திகள் பல கோணங்களில் கூறப்பட்டுள்ளன. உயிர் வாழ ஞாயிற்றின் ஒளி தேவை. பாரதி ஞாயிறு பற்றிக் கூறுவதைக் கேளுங்கள்.

    ஞாயிறு,

     

     

    நீ ஒளி, நீ சுடர்,  நீ விளக்கம்,  நீ காட்சி
    மின்னல், இரத்தினம், கனல், தீக்கொழுந்து
    இவையெல்லாம் நினது நிகழ்ச்சி,
    நீ சுடுகின்றாய், வாழ்க; நீ காட்டுகின்றாய் வாழ்க
    உயிர் தருகின்றாய் உடல் தருகின்றாய்!
    நீர் தருகின்றாய், காற்றை வீசுகின்றாய், வாழ்க
    !

    (வசன கவிதை, ஞாயிறு-2)
     

    என்றெல்லாம் ஞாயிற்றின் குணங்களை எளிமையாகக் குறிப்பிடுகிறார்.

    கடலைப் பற்றிப் பாடும் போது பாரதி அதன் அளப்பரிய ஆற்றலைக் காட்டுகிறார். முதல் அடியில்,

    கடலே காற்றைப் பரப்புகின்றது. காற்று இல்லையேல் உலகில் உயிர்கள் வாழ இயலாது. அந்தக் காற்றை இயக்கும் மிகப் பெரிய ஆற்றல் கடலுக்கு உண்டு. கடலில் இல்லாத ஆற்றலே இல்லை. எனவே, பாரதி அதை, ‘உயிர்க்கடலில் இருந்து எங்களுக்கு நிறைய உயிர் மழை கொண்டு வா’ என்று காற்றைக் கேட்கிறார்.

    கடலில் உள்ள அலைகள் கரைப்பகுதியை நோக்கி வரும்போது அவை திரட்டிக் கொண்டு வருகிற சக்தி, அளவிடற்கரியது. அது நுகரப்படாத திறன் (untapped potential) ஆகும். அத்தகைய திறன் இருப்பதால்தான் அது காற்றை இயக்குகிறது போலும்!

    கடல் நீரின் மேற்பரப்பில் படுகிற கதிர் வீச்சால் கடல்நீர் கொதிப்படைகிறது. சூரிய வெப்பத்தைக் கடல் பரப்புச் சேமித்து வைக்கிறது. கொதிப்படைந்த கடல் நீர், நீராவியாக மாறி உலகைக் காக்கும் மழையாகப் பொழிந்து அனைத்து உயிர்களையும் வாழ வைப்பதால் ‘உயிர் மழை’ என்று அழைக்கிறார் பாரதி.

    ஞாயிறு, சக்தி, காற்று, கடல் முதலியவை ஆற்றல் உள்ளவை. ஆற்றல் உள்ள அனைத்தும் உயிருடையவை என்பது பாரதியின் எண்ணம். ஆகவே ஞாயிறு, சக்தி முதலியவற்றிற்கு உயிர் உண்டு.

    ஜகத் சித்திரம் என்னும் தலைப்பில் உள்ள வசன கவிதையில் உலகில் உள்ள வானம், மலை, குயில், கிளி முதலியன இன்பமாக இருக்க மனம் மட்டும் துன்பமாக இருப்பதைக் கூறிக் கலங்குகிறார். அதை மாற்ற விரும்பி அவர் பறவைகளை அழைப்பது, எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டும் என்று அவர் விரும்பியதைக் காட்டுகிறது. ஸர்வ நாராயண ஸித்தாந்தத்தின் முடிவு எல்லாம் ஒன்றுக்கொன்று சமம் என்பதை எடுத்துரைக்கிறார். உலகில் தற்கொலை செய்வது பெரிய குற்றம் என்பதையும் கூறிச் செல்கிறார் பாரதி.

    இவ்வாறு வசன கவிதையில் பாரதி புதுமையைப் புகுத்தியிருப்பதை நீங்கள் காணலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:38:58(இந்திய நேரம்)