தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Purananooru-3.0-பாட முன்னுரை

  • 3.0 பாட முன்னுரை

    இனிய மாணவர்களே! புறநானூற்றுப் பாடல்களைக் குறித்த மூன்றாம் பாடம் இது. முன் இரண்டு பாடங்களை இப்போது நினைவு கூர்ந்து பாருங்கள். குறிப்பாகப் புறநானூற்றைக் குறித்துப் பொதுவாக முதற்பாட முன்னுரையில் கூறியனவற்றை எண்ணிப் பாருங்கள். அந்த நினைவுகளோடு இந்தப் பாடத்தைத் தொடர்ந்து படியுங்கள்.

    புறநானூறு பழந்தமிழர்களின் வீரம் பற்றிப் பேசும் பாடல்களைக் கொண்டது என்று பேசப் பெறுகின்றது. வீரத்தோடு பழந்தமிழ் வேந்தர்கள், குறுநில மன்னர்கள், சீறூர்த் தலைவர்கள் ஆகியோரின் கொடை பற்றியும் இப்பாடல்கள் பேசுகின்றன. அரச மரபினரிடம் அவர்கள் செய்யாதவற்றைக் கூறிப் புகழ்ந்து பாடும் நோக்கம் அக்காலப் புலவர்க்கு இல்லை. செய்யாதவற்றைக் கூறிப் புகழ்வதற்கு என் சிறிய நாக்கு அறியாது என்பது புறநானூற்றுப் புலவர் ஒருவர் மொழி (148). அரசர்கள் தவறு செய்த போது புலவர்கள் அவர்களுக்கு அறிவுறுத்தவும், இடித்துரைக்கவும் தயங்கவில்லை.

    புறநானூறு வாழ்விற்கு உதவும் பேருண்மைகளை உணர்த்தும் பல பாடல்களைக் கொண்டது. நல்லது செய்ய முடியாவிட்டாலும் தீயது செய்யாதிருங்கள் (195); மகிழ்ச்சியும் துன்பமும் நிறைந்தது இவ்வுலகம். இங்கு நல்ல செயல்களை அறிந்து செய்க (194); புகழென்றால் உயிரைக் கொடுக்கக் கூடிய, பழியென்றால் உலகத்தையே தந்தாலும் ஏற்றுக் கொள்ளாத சான்றோர் வாழ்வதாலேயே இவ்வுலகம் நிலை பெற்றிருக்கிறது (182); பொருளும் இன்பமும் அறத்தின் வழியே செல்லுதற்குரியன (31); நிலம் எத்தகையதாயினும், அங்கு வாழ்வோர் நல்லவராயின் நிலமும் நல்லதே (187); கல்வி என்ற தகுதியால் கீழான குடியிற் பிறந்த ஒருவனும் உயர்வாக எண்ணப் பெறுவான் (183) என்பன போன்ற வாழ்விற்காகும் உயர்ந்த கருத்துகளைப் புறநானூறு கூறுகின்றது.

    புறநானூற்றுக் காலத்தில் மகளிரின் வீரம் போற்றத்தக்கதாகவும் வியக்கத்தக்கதாகவும் இருந்தது. தம் குடியினரின் உயிர் இழப்பைப் பொருட்படுத்தாது தம் நாட்டைக் காப்பாற்ற அவர்கள் கொண்டிருந்த முயற்சியும் ஊக்கமும் பழந்தமிழ்ப் பெண்களின் மற மாண்பை எடுத்துரைக்கும்.

    மேற்கூறிய மூன்று வகைக்கும் உரிய பாடல்களைப் பற்றி இப்பாடத்தில் விரிவுறக் காணலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:40:22(இந்திய நேரம்)