தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Purananooru-4.2-சேரல் இரும்பொறை (229ஆம் பாட்டு)

  • 4.2 சேரல் இரும்பொறை (229ஆம் பாட்டு)

    229ஆம் புறப்பாட்டு ஆடியல் அழற்குட்டத்து எனத் தொடங்குவது. இருபத்தேழு அடிகளை உடையது. இதனை மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற சேர அரசனைக் குறித்துக் கூடலூர் கிழார் என்ற புலவர் பாடியுள்ளார்.

    பாட்டின் சூழல்

    மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பவன் சேர வேந்தன். இவன் கண்கள் சிறிதானவை. எனவே இவன் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை எனப்பட்டான். புலவர் கூடலூர் கிழார் ஒருநாள் இரவில் வானிலிருந்து ஒரு மீன் விழுவதைக் கண்டார். “அரசனுக்கு ஏதும் நோயுறாமல் இருக்க வேண்டுமே” என்று அஞ்சினார். அரசன் இன்ன நாளில் இறந்துபடக் கூடுமென்றும் கருதினார். அவர் கருதியவாறே நிகழ்ந்தது. அரசன் இறந்துவிட்ட சூழலில் இப்பாட்டைப் புலவர் பாடினார்.

    4.2.1 பாட்டின் கருத்து

    கூடலூர் கிழார் பாடியுள்ள இப்பாட்டு பல வானியல் குறிப்புகளை உட்கொண்டது. வானியல் அறிவு மிக்க அப்புலவரைப் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் எனப் போற்றினர். அவர் பாடிய பாட்டின் கருத்து வருமாறு:

    “மேஷ ராசியின் கார்த்திகை நட்சத்திரம்; அது கார்த்திகையின் முதல் பாதம். அந்த நாளின் பாதி இரவில் இருள் செறிந்த நேரம். வளைந்த பனைமரம் போன்ற வடிவை உடைய அனுஷ நட்சத்திரத்தின் தொகுதியில் முதலாவது தொடங்கிக் குளம் போன்ற வடிவை உடைய புனர்பூசத்தின் கடைசி வரை விளங்குவது பங்குனி மாதம். இந்தப் பங்குனியில் முதற்பதினைந்து நாளில் உச்சமாகிய உத்தர நட்சத்திரம் மேலிருந்து சாய்ந்தது. அதற்கு எதிரே அதன் எட்டாம் நட்சத்திரமாகிய மூலம் எழுந்தது. உத்தர நட்சத்திரத்திற்கு முற்பட எட்டாவதாக அமைந்த மிருக சீரிடம் தன் இடத்திலிருந்து கீழே இறங்கிற்று. அந்நிலையில் நட்சத்திரம் ஒன்று காற்றால் அலைந்து நல்ல திசையாகிய கிழக்கும் வடக்கும் போகாமல் தீய திசையாகிய தெற்கும் மேற்குமாகிய ஒரு திசையில் விழுந்தது. அதனைப் பார்த்து யாமும், பிறரும் பல்வேறு இரவலர்களும் ‘பறை போலும் இசையோடு ஒலிக்கும் அருவிகளை உடைய மலைநாட்டுக்கு வேந்தனாகியவன் நோயில்லாமல் இருப்பின் நல்லது’ என வருந்திய உள்ளத்தோடு அஞ்சிக் கூறினோம். அவ்வாறு அஞ்சிய, குறித்த ஏழாம்நாள் வந்தது. இன்று வலிமை மிக்க யானை தும்பிக்கையை நிலத்திலே கிடத்தித் துயில் கொண்டது. திண்மையான வாரால் கட்டப்பட்ட முரசம் கண்கிழிந்து உருண்டது. உலகைக் காக்கும் அரசனின் வெண் கொற்றக்குடை கால் ஒடிந்து விழுந்தது. காற்றைப் போல விரைந்து செல்லும் குதிரைகள் இயக்கமின்றிக் கிடந்தன. இவ்வாறாக அரசன் தேவர் உலகை அடைந்தான். பகைவரைச் சிறைப்படுத்தும் வலிமையையும், விரும்பி வந்தவர்க்கு அளந்து கொடுத்தலை அறியாத கொடையையும் உடைய நீலமலை போலும் வேந்தன் ஒளி பொருந்திய வளைகளை உடைய வான மகளிர்க்குத் துணையாகி, இந்நிலவுலகில் தனக்குத் துணையான மகளிரை மறந்தான் போலும்”.

    பங்குனி மாதத்தில் நட்சத்திரம் வீழ்ந்தால் அரசனுக்குக் கேடு என்பர். அவ்வாறு மீன் வீழ்ந்த ஏழாம் நாளில் சேரன் உயிர் நீத்திருக்கின்றான்.

    புலத்துறை முற்றிய புலவர்

    கூடலூர் கிழார் வானியல் அறிந்தவர். ஆடு என்பது மேட ராசி. அக்கினியைத் தனக்குரிய தேவதையாகக் கொண்டமையால் கார்த்திகை அழல் என்ற பெயர் பெற்றது. பங்குனி மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் உள்ள நாள் சப்தமி ஆகும். எனவே அந்நாளின் பாதி இரவு செறிந்த இருளைப் பெற்றது. அனுஷத்தின் வடிவமாகிய ஆறு நட்சத்திரங்களின் தொகுதி வளைந்த பனைமரம் போன்ற தோற்றமுடையது. இன்ன நாளில் மீன் விழுந்தால் இன்னது நிகழும் என்பது சோதிட நூல் துணிபு. இச்செய்திகளை அறிந்த நிலையில் பின்னர் வரப்போவதை அறிந்து முன்னரே கூறினார் கூடலூர் கிழார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:41:39(இந்திய நேரம்)