தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Purananooru-4.3-அதியமான் நெடுமான் அஞ்சி

  • 4.3 அதியமான் நெடுமான் அஞ்சி (235ஆம் பாட்டு)

    235ஆம் பாட்டு சிறியகட் பெறினே எனத் தொடங்குவது; இருபது அடிகளைக் கொண்டது. அதியமான் நெடுமான் அஞ்சி மீது ஒளவையாரால் பாடப்பெற்றது இப்பாட்டு.

    பாட்டின் சூழல்

    அதியமான் நெடுமானஞ்சி தகடூரை ஆண்ட குறுநில மன்னன். கடையெழு வள்ளல்களில் ஒருவன். இம்மன்னன் ஒளவையாரோடு நெருங்கிய நட்புக் கொண்டிருந்தான். உண்டாரை நெடுங்காலம் வாழ வைக்கக் கூடிய அருநெல்லிக்கனி ஒன்றைக் காட்டில் மிகவும் முயன்று பெற்று அதனைத் தான் உண்ணாமல் ஒளவைக்குக் கொடுத்து உண்ணச் செய்தவன் இவன். பகைவர் எழுவரை ஒரு போரில் வென்று அவர்களுக்குரிய அணிகலன்களையும் அரச உரிமையையும் இம்மன்னன் கவர்ந்து கொண்டான். இவனுடைய திருக்கோவலூர் வெற்றியைப் பரணர் புகழ்ந்து பாடியுள்ளார். இம்மன்னன் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையால் வெல்லப்பட்டான். அதியமான் பகைவரோடு புரிந்த போரில் பகைவர் எறிந்த வேல் அவனுடைய மார்பில் தைக்க அவன் உயிரிழந்தான். ஒளவையார் ஆற்றாமல் வருந்திச் சிறியகட் பெறினே என்று தொடங்கும் இப்பாடலைப் பாடினார்.

    4.3.1 பாட்டின் கருத்து

    இறந்துபட்ட அதியமானின் பல்வேறு நற்பண்புகளைச் சொல்லிப் புலவர் கலங்குவதாக அமைந்தது இப்பாட்டு. இதன் கருத்து வருமாறு:

    “சிறிய அளவினை உடைய மதுவைப் பெற்றால் எங்களுக்குக் கொடுப்பான்; அந்நிலை போய்விட்டது. பெரிய அளவில் மதுவை அவன் பெற்றால் அதனை யாம் உண்டு பாட, எஞ்சிய மதுவைத் தான் மகிழ்ந்து அருந்துவான். அந்நிலையும் போயிற்று. எல்லார்க்கும் பொதுவான நிலையில் தனக்குக் கிடைக்கும் சோறு சிறு அளவினதாயினும் மிகப் பலரோடும் கலந்து உண்பான். பெரிய அளவினதாகிய சோறு கிடைப்பினும் மிகப் பலரோடும் கலந்து உண்பான். அதுவும் கழிந்தது. சோற்றின் இடையே எலும்பும் ஊனும் தட்டுப்பட்டால் அவற்றை எங்களுக்கு அளிப்பான். அதுவும் நீங்கிற்று. அம்போடு வேல் வந்து பாயும் போர்க்களங்களில் தான் சென்று முன்னிற்பான். அதுவும் இல்லையாயிற்று. தான் காதலிப்பார்க்குத் தன் கையால் மாலை சூட்டுதலால் நரந்தப் பூ மணம் வீசும் தன்னுடைய கையால் அருள்மிகக் கொண்டு புலால் நாறும் என் தலையைத் தடவுவான். அஃதும் இனி நிகழாதாயிற்று. அவனுடைய கரிய மார்பில் தைத்த வேல் அருங்கலை வளர்க்கும் பெரும்பாணர்களின் கையில் உள்ள மண்டைப் பாத்திரத்தை ஊடுருவியது; அவர்கள் கைகளையும் துளைத்தது; அழகிய சொற்களை ஆராய்ந்து கூறும் நுண்ணிய அறிவுடையார் நாவிலும் போய்த் தைத்தது. எங்களுக்குப் பற்றுக் கோடான எங்கள் தலைவன் எங்கே உள்ளானோ? இனிப் பாடுகின்றவரும் இல்லை; பாடுகின்றவர்களுக்கு ஈவாரும் இல்லை. குளிர்ந்த நீரை உடைய துறையில் தேனைக் கொண்ட பகன்றை மலர்கள் பிறராற் சூடப்படாமல் உதிர்வது போலப் பிறர்க்குப் பொருளைக் கொடுக்காமல் மாய்ந்து போகின்றவர்கள்தாம் இவ்வுலகில் பலராக உள்ளனர்”.

    ஒளவையாரின் கண்ணீர்

    அதியமான் அரசவைக்குத் தம் புலமையால் பெருமை சேர்த்தவர் ஒளவையார். உண்டாரை நெடுங்காலம் வாழவைக்கும் நெல்லிக்கனியை மலைப் பிளவுகளையெல்லாம் தாண்டிச் சென்று கொண்டு வந்து, அதன் பெருமையைக் கூறாமல் ஒளவை உண்ணுமாறு தந்தவன் அதியமான். ஒளவையார் அதியமானையும் பாடி அவன் மகன் பொகுட்டெழினியின் வீரத்தையும் பாடினார். அதியமானுக்காகத் தொண்டைமானிடம் தூது சென்றார். இவ்வாறு நட்புக் கொண்டிருந்த நிலையில் அதியன் இறந்துபட்டான். ஒளவையின் கண்ணீர்ப் பெருக்கு வற்றவில்லை. அவன் மார்பில் தைத்த வேல் அந்த அளவோடு நின்றதா! இல்லை,

    அருங்கலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ
    இரப்போர் கையுளும் போகிப்
    புரப்போர் புன்கண் பாவை சோர
    அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
    சென்றுவீழ்ந் தன்று...

    என்று சொல்லி அழுகின்றார் ஒளவையார்.

    இப்பாட்டில் ‘மன்’ என்னும் இடைச்சொல் பல இடங்களில் வந்தது. மன் என்பது கழிந்தது என்ற பொருளைத் தருவது.

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2017 11:40:31(இந்திய நேரம்)