தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 5.0 பாட முன்னுரை

        பொதுவாகப் பாடல்கள் வடிவம், உள்ளீடு அணி நலன்கள் , உணர்ச்சி நிலைகள் என்ற நான்கு நிலைகளைக் கொண்டு விளங்கும். இவற்றில் வடிவம் என்பது ஒன்று.சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத வேண்டும் என்ற முதுமொழிக்கு இது நல்ல எடுத்துக்காட்டு.

        சித்திரம் வரையத் தாள் தேவைப்படுவது போல் உள்ளீட்டைத்தாங்கி நிற்க வடிவம் தேவை. இதனை யாப்பு என்பர். எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்ற உறுப்புகளைக்கட்டி உரைக்கும் தன்மையால் இது யாப்பு எனப்பட்டது.

        பாடல்களில் காணப்படும் வடிவ அமைதியை ஒலிவடிவம், பொருள்வடிவம் என்று பிரிக்கலாம். பாடலைப் பொருள் ஒழுங்கிற்கு ஏற்றாற்போல் இன்று படித்து வருகிறோம். ஆனால் இதன் ஓசை அமைதியைச் சுவைக்க இன்று தவறவிட்டுவிட்டோம். மௌனமாகப் படிக்கும் முறையாலும்,
    யாப்பு உரைநடையால் அமைந்தமையாலும் பாட்டை ஓசை வடிவத்தோடு படிக்கும் பழக்கம் இன்று மிக மிகக் குறைந்துவிட்டது. வாய்விட்டுப் படிக்கும் போது அதன் ஓசையினிமையை உணர இயலும், அதன் நடைப்பாங்கினை அறியஇயலும்.

        பாடலில் காணப்படும் ஓசை ஒழுங்கைச் சந்தம் என்பர். இந்த ஓசை ஒழுங்கு ஒவ்வொரு பாடலுக்கும் அடிநாதமாக விளங்கும். படைப்போன் இவ்வோசை ஒழுங்கினை முறைப்படுத்திக்கொண்டு, பொருளோடும், உணர்ச்சிப்பாங்கும் கற்பனை வளமும் கலந்தும் தரும்போது ஓசைகளுக்கேற்பச் சொற்கள் அமையும். அப்பொழுது சொற்கள் கவிஞனிடத்தில் நடனமாடும். இந்த அரிய, இனிய கலையை இன்றைய தமிழ் உலகம்மெல்ல, மெல்ல இழந்து வருகிறது. இதற்குப் புத்துணர்வு தரவும், மீட்டுருவாக்கம் தரவும், இப்பாடப்பகுதி இசைப்பாடல்களில் சந்த அமைப்புகள் என்ற நிலையில் உருவாக்கப்படுகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:05:16(இந்திய நேரம்)