தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நாட்டுப்புறப் பாடல்களில் மெட்டு

  • 5.5 நாட்டுப்புறப் பாடல்களில் மெட்டு

        நாட்டுப்புறப் பாடல்களில் இசை மெட்டு அடிப்படையில் அமையும். மெட்டின் அடிப்படையில் அடுத்தடுத்து வரும் பாடல் வரிகள் அமையும். எடுத்துக்காட்டாக, தாலாட்டுப் பாடலில் வரும் மெட்டமைப்பு ‘ஆராரோ ஆராரோ’ என்ற சொல்லடிப் படையில் அமையும்.

    ஆராரோ ஆரிராரோ - கண்ணேநீ
        ஆரரிரோ ஆராரோ
    ஆரடித்தார் நீ சொல்லியழு - கண்ணே வுனை
        அடித்தாரைச் சொல்லியழு
    பஞ்சு மெத்தை பட்டுமெத்தை கண்ணே வுனக்குப்
        பாட்டன் கொடுத்த மெத்தை

    என்று வரும். இது வரும் பாடலின் கருத்தைப் பற்றிக்கூட கவலைப்படாமல் தாயின் உணர்வு மெட்டாக அமைந்து குழந்தையை உறங்க வைக்கும்.

    • மாரியம்மன் பாட்டு

        நாட்டுப்புற மக்களின் வழிபடும் தெய்வமான மாரியம்மன் மீது பாடப்படும் பாடல்கள் பல உள. மாரியம்மன் ஆலய வழிபாட்டின் பொழுது இவை ஆட்டப் பாடல்களாக அமையும். கொட்டு முதலான இசைக் கருவிகளின் மூலம் முழங்கும் நடைக்கேற்ப இப்பாடல்களை இசைப்பர்.

    தன்னான னன்ன னானே தன்னான னன்ன னானே
    ஒன்னாங் கரகமடி எங்கமுத்து மாரி
    என் வளத்துத் தாயே

    இது போலத் தேரோட்டத்தின் பொழுது சந்த நயமிக்க பாடலைப் பாடி ஆடுவர்.

    நன்னானே நன்னானே தானே நன்னே
    நன்னானே நன்னானே தான நன்னே

    என்ற மெட்டை இசைத்துப் பாட்டுப் பாடுவர்.

    ஆடுங்கடி பெண்களே பாடுங்கடி - நம்ம
    அம்மன் மாரியம்மா கோயிலாலே
    நல்ல சிலம் பெடுத்து ஆடுங்கடி - நம்ம
    நல்லம்மா தேரும் ஓடையிலே............ (கண்ணானே)

    இது இன்பக் களியாட்டமிக்க ஆட்டப்பாடலாக அமையும். ஒலிக்குத் தக்கவாறு மெட்டு அமையும்.

    • ஏற்றப்பாட்டு

        ஏற்றப்பாட்டிற்கு எதிர்பாட்டில்லை என்பர். தண்ணீரை ஏற்றம் மூலம் இறைக்கும் பொழுது அலுப்புத்தட்டாத நிலையில் இசை இனிமையோடும் பாடுவர். ஏற்றம் இறைக்கும் பொழுது இருவர் மாறி மாறி விளித்துக் கொண்டு பாடுவர்.

    வேலமரப் பாதையிலே - வேலையா
    வேலையிலே கண்ணிருக்கு - சுப்பையா
    வேலியோரம் போகுதுபார் - வேலையா
    வேட்டித்துணி போட்டிருக்கோ - சுப்பையா
    • தெம்மாங்கு

        நாட்டுப்புற மக்களின் பாடல்களில் மிகவும் சிறப்புடையது தெம்மாங்குப் பாடல்களாகும். இவற்றை மக்கள் இசையுடன் பாடி ஆடிமகிழ்வர். தென்பாங்கு என்பது தெம்மாங்கு ஆயிற்று.

    வட்ட வட்டப் பாறையிலே - குட்டி
    வரகரசி தீட்டையிலே
        தூயச் சேல- குட்டி
    ஆல வட்டம் போடுதடி

    தேனினும் இனிய தெம்மாங்குப் பாடல்கள் தேன் பாங்காகத் திகழும். இதனாலும் தேன்பாங்கு தெம்மாங்கு ஆயிற்று என்றும் கூறுவர். உரையாடல் அமைப்பில் அமைந்தும் விளங்கும்.

    ஆண்:
    வட்ட வட்டப் பாறையிலே - குட்டி வலிய நெல்லு குத்தையிலே ஆர் கொடுத்த சாயச்சீலை - குட்டி ஆலவட்டம் போடுதடி.
    பெண்:
    யாரும் கொடுக்க வில்லை - மாமா யாசகமும் பெறவில்லை. பாடுபட்டு நாளும் தானே - மாமா வாங்கி னேடா சாயச்சேல.
    • ஒப்பாரி

        பிறந்த மனிதன் இறப்பது இயற்கை. இறந்தவனை எண்ணி அவன் செய்த சேவைகளை எண்ணிப் பாடுவது மரபு. இதற்கு மெட்டுகளே உயிரோட்டமாக அமையும், ஒவ்வொரு வரியும் பாடி முடிக்கும் பொழுது மெட்டை ஒலித்துக் கொண்டே வருவர். இதனைப் பின்பாட்டுப் பாடுவது என்றும் கூறுவர்.

    தன்னானே தானனே தானனே தானனே
    தன்னானே தானனே தானனான தானனே
    கல்லளித்து மண்ணளித்துக் கானகம் போனாயே,
    கானகம் போகுமுன்னே கன்னியிடம் சொன்னாயோ
    வாயார முத்தமிட்டு வண்ணத் திலகமிடுவாய்
    வாயெதுவும் கூறாமல் வான்வழியே சென்றாயே
புதுப்பிக்கபட்ட நாள் : 04-08-2017 19:16:03(இந்திய நேரம்)