Primary tabs
-
3.0 பாட முன்னுரை
இலக்கியவுலகில் மிகவும் செல்வாக்கு வாய்ந்த திறனாய்வுமுறை, மார்க்சியத் திறனாய்வு ஆகும். மார்க்சியம் எனும் சமூகவியல் தத்துவத்தை அடித்தளமாகவும் வழிகாட்டுதலாகவும் கொண்டது மார்க்சிய அணுகுமுறையாகும். மார்க்சியம் என்பது அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய சமூக தளங்களில் மனிதகுல விடுதலையை முன்னிறுத்துவது ஆகும். இது, அறிவியல் பூர்வமானது; தருக்கம் சார்ந்தது; இயங்கியல் தன்மை கொண்டது. மார்க்சியத்தின் மூல ஊற்றுக்கண் கார்ல்மார்க்ஸ் ஆவார்; மற்றும் அவருடன் சேர்ந்து சிந்தித்த, சேர்ந்து செயல்பட்ட ஏங்கல்சும், தொடர்ந்துவந்த லெனினும் மாசேதுங்கும் மார்க்சிய சித்தாந்தத்தின் முன்னணிச் சிந்தனையாளர்கள் ஆவர். மேலும், இந்தத் தத்துவத்தை இவர்களும், தொடர்ந்து ஜார்ஜ் லூகாக்ஸ், கிறிஸ்டோபர் காட்வெல், மற்றும் இக்காலத்து டெர்ரி ஈகிள்டன், ஃபிரெடெரிக் ஜேம்சன் முதலியோரும் இலக்கியத் திறனாய்வுக்குரிய ஒரு நெறிமுறையாக விளக்கிக் காட்டியுள்ளனர் இவர்களின் எழுத்துக்களையும் சிந்தனைகளையும் கொண்டு அமைவது மார்க்சியத் திறனாய்வு.