Primary tabs
-
3.5 தொகுப்புரை
சமுதாயவியலோடும் வரலாற்றியலோடும் நெருக்கம்கொண்டது மார்க்சியத் திறனாய்வு. இலக்கியம் மக்களிடமிருந்து தோன்றுகிறது; மக்களிடம் செல்கிறது; திறனாய்வு இதற்கு அனுகூலமாக இருக்க வேண்டும் என்று அது கூறுகிறது. மார்க்சியம் அரசியல்- பொருளாதார - சமூக அறிவியல் சித்தாந்தம் எனினும், சமூக அமைப்பை இயங்குநிலையோடு காண்பதாலும், அந்தச் சமூகத்தை, மனித மேன்மை குறித்ததாக ஆக்க வேண்டும் என்று விரும்புவதாலும், கலை, இலக்கியம், அழகியல் ஆகியன குறித்தும் மார்க்சும் ஏங்கல்சும் பேசுகின்றனர். பொருளாதார அமைப்பு சமூகத்தின் அடிக்கட்டுமானமாக, இறுதித் தீர்மான சக்தியாக விளங்கினாலும், மேல்கட்டுமானங்களில் ஒன்றாகிய இலக்கியம், சமூக- பொருளாதாரக் கட்டமைப்புக்களில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இலக்கியம், இந்நிலையில், அவ்வக்காலச் சமூகத்தின் பிரதிநிதியாகவும் பிரதிபலிப்பாகவும் அமைகின்றது. இலக்கியத்தில் உள்ளடக்கமே பிரதானமானது என்றாலும் அதனை வடிவமைக்கிற உருவமும் முக்கியமானது ஆகும். இலக்கியம், நேர்த்தியாகவும் கலையியல் தன்மையோடும் அமைய வேண்டுவது; எனவே புறவய உண்மைகள், இலக்கியத்தில் கலையியல் உண்மைகளாக மறு ஆக்கம் பெறுகின்றன. இத்தகைய உண்மைகளில் நேர்மையும் அக்கறையும் இருக்க வேண்டுவது படைப்பாளியின் பொறுப்பு ஆகும் . மார்க்சியத் திறனாய்வு, இவ்வாறு சமூகத்தின் மேன்மைக்கு உரியதாக இலக்கியத்தைக் கண்டு மதிப்பிடுகிறது; படைப்பாளியை ஊக்கப் படுத்துகிறது.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
-