தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- அடிப்படைக் கூறுகள் - 1

  • 3.3 அடிப்படைக் கூறுகள் - 1

        மார்க்சிய இலக்கியக் கொள்கையில் உள்ளடக்கத்திற்கேற்ற உருவம் என்பது அடிப்படையான கூறாக இருக்கிறது. அதுபோல இலக்கியத்தை மதிப்பிட எதார்த்த இயல்பை அடிப்படையாகக் கொள்கிறது. இவ்விரண்டு அடிப்படைக் கூறுகளும் படைப்பைச் சார்ந்தவை.

    3.3.1 உருவமும் உள்ளடக்கமும்    

        பொருள்கள்     தமக்குள்     உறவுபெற்றவை. அவை, எதிர்முறையான சக்திகளின் உள்ளார்ந்தனவும் புறமார்ந்தனவுமான மோதல்கள் கொண்டவை. மோதல்கள்-இணைவுகள் என்ற தன்மை காரணமாகப் பொருள்கள் இயங்கு சக்தி கொண்டிருக்கின்றன. இவ்வாறு மார்க்சிய இயங்கியல் சொல்லுகிறது. காரணகாரிய விதிமுறைகளுக்குட்பட்ட இந்த இயங்குநிலை, பொருள்களின் பண்புநிலை (quality)     மற்றும் அளவுநிலை (quantity) மாற்றங்களுக்குக் காரணமாகின்றது. பண்புநிலையில் ஏற்படுகிற மாற்றம் அளவுநிலை மாற்றத்திற்கும், அளவு நிலை மாற்றம், பண்புநிலை மாற்றத்திற்கும் இட்டுச் செல்லுகிறது. இரண்டும் இவ்வாறு தமக்குள் சார்ந்து செயலாற்றலுடன் இருக்கின்றன. அளவுநிலை என்பது உருவத்தையும், பண்பு நிலை என்பது உள்ளடக்கத்தையும் குறிக்கின்றது.

        உருவம்-உள்ளடக்கம் (form and content) என்பவற்றுள், உள்ளடக்கம்     முதன்மையானது,     ஆனால், உருவத்தின் முக்கியத்துவம் குறைந்தது அல்ல. உள்ளடக்கத்தின் பண்புக்கும் தேவைக்கும் மாற்றத்துக்கும் ஏற்ப, உருவம் அமைகின்றது; அதேபோது உருவம் உள்ளடக்கத்தைத் தன்னுடைய செல்வாக்கிற்கு உட்படுத்தி அதனுடைய வளர்ச்சியை முன்கொண்டு செல்லக்கூடிய ஆற்றல் படைத்தது. மார்க்சிய சித்தாந்தத்தில் உருவம்-உள்ளடக்கம் பற்றிய கருத்துநிலை முக்கியமான ஒன்றாகும். நேர்த்தி, உத்தி முதலியவற்றிற்கு உட்பட்ட உருவத்தை மார்க்சியம் குறைத்து மதிப்பிடாமல் போற்றுகிறது. லெனின் சொல்லுவார்: உருவத்துக்கும் உள்ளடக்கம் போலவே , சார்புடைத் தனித்துவம் (relative independence) உண்டு. உள்ளடக்கத்தின் வீச்சுக்கு அது பின்தங்கிப் போவதும், அதனை மீறிச் சிலபோது பெரும் வேகம் கொள்வதும் உண்டு. மேலும், ஒரு உள்ளடக்கத்திற்கு ஒரே வகையான உருவம்தான் சாத்தியம் என்பதில்லை; ஒத்த அல்லது பலவேறு பட்ட வடிவங்கள் இருக்கலாம். மார்க்சிய அழகியல் இவ்வாறு உருவத்தையும் உள்ளடக்கத்தையும் பரஸ்பரம் சார்ந்து இயங்குகிற சக்தியாக விளக்குகிறது.

        இதன் பின்னணியில், சிறு கதை என்ற இலக்கிய வடிவத்திற்கும் நாவல் எனும் இலக்கிய வடிவத்திற்குமுள்ள வேறுபாடுகளை, உருவம் உள்ளடக்க வீச்சுக்கள் அடிப்படையில் அறிந்துகொள்ளலாம். மையமான ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு உணர்வு நிலையைச்சுற்றி, ஒரு இடம் அல்லது ஒரு சூழலை மையமாகக் கொண்டு (பிறவும் வரும் எனினும் அவை மையங்களைச் சார்ந்தனவாகவே இருக்கும்), குறுகிய நேரத்தில் வாசிக்கக்கூடிய கூர்மையைக் கொண்டிருப்பது சிறுகதை. நாவல் என்பது, விரிவான சூழல்களையும், விளக்கமான நிகழ்ச்சிகளையும் பலவான உணர்வு நிலைகளையும் கொண்டு, நீண்ட நெடும் நேரத்தில் வாசிக்கக் கூடியதாக அமைந்திருக்கும்; குறிப்பிட்ட வாழ்நிலையின் விளக்கத்தை அதன்     பல அம்சங்களைச் சொல்வதாக அமைந்திருக்கும். காட்டாக, கி. ராஜநாராயணன், கம்மவார் எனும் தெலுங்கு பேசும் மக்கள், கரிசல் காட்டுப்பகுதியில், கிராமப் புறங்களில் குடியேறி அமர்ந்திருப்பதையும், அவர்களின் வாழ்க்கையில் உள்ள முரண்களையும் சிரமங்களையும் சொல்ல விரும்புகிறார். இதனைக் ‘கிடை’ எனும் சிறுகதையாக ஆடுகள்- காதல் - கிராமத்து நியாயம் என்ற உணர்வுநிலையில் கம்மவார் மக்களைச் சித்திரிப்பார். ஏறத்தாழ அதேவகையான கிராமத்து வாழ்க்கையை - ஒரு விரிவான தளத்தில், சொல்லுவதற்கு, அவர் நாவல் எனும் வடிவத்தைத் தேர்ந்தெடுக்கிறார். கோபல்ல கிராமம என்பது அப்படி அமைந்த ஒரு நாவலாகும். இப்படி உள்ளடக்கத்தின் தேர்வும் அதன் தன்மையும் பண்பும், பொருத்தமான வடிவத்தை தேர்ந்தெடுத்துக் கொள்வதைத் தமிழ் இலக்கியங்களின் வழி அறிந்து கொள்ளவேண்டும். இரண்டும் ஒன்றற்கொன்று     ஒத்தும்     பொருந்தியும் எவ்வாறு அமைந்திருக்கின்றன என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

    3.3.2 தார்த்தம் அல்லது நடப்பியல்

        எதார்த்தம் (realism) என்பது ஓர் உள்ளடக்கம். எதார்த்தம் என்பது ஓர் உத்தி அல்லது வடிவம். ஆம், எதார்த்தம் இவ்விரண்டும் தான். நல்ல இலக்கியத்தில் இவ்விரண்டும் இணைந்து பரிணமிப்பதைக் காணமுடியும். மார்க்சியத் திறனாய்வு இதன் காரணமாகத்தான், இதனை முதன்மைப் படுத்துகிறது. இதனை ஒரு சக்தி வாய்ந்த கருவியாகக் கருதுகிற மார்க்சிய முன்னவர்கள், இது இலக்கியத்தில் எவ்வாறு அமைந்திருக்கும் அல்லது எப்படி இதனை உருவாக்கவேண்டும் என்பதை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளனர். மார்க்சியத் திறனாய்வுக்கு எதார்த்தவியல் அல்லது நடப்பியல் என்பது ஒரு நல்ல அளவுகோலாக விளங்குகிறது/பயன்படுகிறது. கண்டதைக் கண்டவாறே சொல்லுதலோ, விவரங்களை அடுக்குதலோ எதார்த்தமாகி விடாது. அது இயல்பு நவிற்சி (Naturalism) யாகலாம். வெளித்தோற்றமெல்லாம் உண்மையாகிவிடுவதில்லை.

        கண்ணால்     காண்பது     அல்ல, அதனைத் தீர விசாரித்தறியவேண்டும். காரண காரியங்களோடு வெளிப்படுத்துதல் வேண்டும். சமூகப் பின்புலமும் நடத்தைகளின் சுருக்கநிலைகளும் எதார்த்தத்தைச் சரிவரக் காட்டும்.

        இலக்கியங்களில் இது எவ்வாறு வெளிப்படக்கூடும்? விவரங்களின் உண்மையோடு, சித்திரிக்கப்படும் சூழ்நிலைகள் வகைநிலையாகவும் (type) பொருத்தமாகவும் அமைய வேண்டும்; பாத்திரங்களும் அதுபோல, இந்த இந்தச் சூழ்நிலையில் இன்னின்னவாறு இருக்கும் என்று உறுதிபடக் கூறுகிற அளவில் வகைநிலை உடையதாகப் பொருத்தமுற அமைய வேண்டும். இதனை ஏங்கல்ஸ் typical characters in the typical situations என்பார். வகைநிலையான பாத்திரம் என்பது பொதுமையின் பிரதிநிதியாக, அதே நேரத்தில் பிரத்தியேகப் பண்புகளுடன் அமையக் கூடியது ஆகும். மாந்தர்களும் அவர்கள் தோன்றும் சூழல்களும் பொருத்தமாகவும் உண்மையாகவும் இருக்கிறபோது, சித்திரமாகியிருக்கும்     இலக்கியம்     நடப்பியல் அல்லது யதார்த்தத்தைப் பெற்றிருக்கும்.

        இத்தகைய எதார்த்தம், விமரிசனப் போக்குக் கொண்டதாக அமையலாம். சோஷலிசம் போன்ற சமூகக் கட்டுமானத்தை உருவாக்க உதவுவதாகவும் இருக்கலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:49:59(இந்திய நேரம்)