Primary tabs
-
6.0 பாட முன்னுரை
தமிழ்த் திறனாய்வுப் பரப்பில், பல சூழ்நிலைகளின் காரணமாகப் புதிய புதிய கொள்கைகளும் தளங்களும் தோன்றுகின்றன. சமூக வரலாற்றிலும் இலக்கிய வரலாற்றிலும் ஏற்படுகின்ற மாற்றங்களும் வளர்ச்சிகளும் இத்தகைய புதிய தளங்களையும் புதிய பரிமாணங்களையும் தவிர்க்க முடியாதனவாக ஆக்குகின்றன. பின்னை அமைப்பியலும் பின்னை நவீனத்துவமும் அதுபோலப் பெண்ணியமும் தலித்தியமும், கொள்கைகளையும் அவற்றின் புதிய கோணங்களையும் ஒட்டிப் பிறந்தன. புலம்பெயர்வு என்பது குறிப்பிட்ட கொள்கை அல்லது முறையியல் சார்ந்தது அல்ல; மாறாக, வித்தியாசமான சூழ்நிலையையும் வாழ்நிலையையும் அது குறிக்கின்றது. புலம்பெயர்வு என்ற நிகழ்வு பழைமையானது; ஆனால் அது பற்றிய உணர்வும் ஆய்வும் புதியது. இன்று அது சமூகவியலாளர்களிடையேயும், இலக்கிய ஆய்வாளர்களிடையேயும் பெரிதும் கவனத்திற்குள்ளாகி வருகிறது. தமிழ்ச் சூழலிலும் இத்தகைய ஆய்வுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகக் கருதப்படுகிறது.