தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 1.0 பாட முன்னுரை

    பழங்காலத்தில், மக்கள் பேசிப்பேசி மகிழ்ந்த கதைகளை, சொற்சுவை, பொருட்சுவையுடன் உணர்வு பொங்க, மக்கள் மகிழ்ந்து பேசும் வகையில் புலவர்களால் படைக்கப்பட்ட தொடர்நிலைச் செய்யுள்தான் காப்பியம் என்பது. ஐம்பெருங்காப்பியங்களைக் கூறும்போது, சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்றும், ஐஞ்சிறுகாப்பியங்களாகச் சூளாமணி, யசோதரகாவியம், உதயணகுமார காவியம், நீலகேசி, நாககுமார காவியம் ஆகியவற்றையும் தமிழிலக்கியத்தில வகைப்படுத்தி உள்ளனர்.

    காப்பியங்களின் தலைப்புகளைக் கவனித்தால் ஓர் உண்மை புலப்படும். கதை மாந்தர்கள் அணிந்திருந்த அணிகள் தலைப்புகள் ஆகியிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, சிலப்பதிகாரம் சிலம்பு என்னும் அணியின் பெயரைப் பெற்றிருக்கிறது. அதே போல மணிமேகலை. (மணிமேகலை இடையில் அணிவது) இவ்வாறே சீவகனின் தாய் தன் மகனைச் சிந்தாமணி என அழைக்கிறாள். அதுவே அக் காப்பியத்தின் பெயராக அமைந்தது. (சீவகசிந்தாமணி)

    அதுபோலவே, வணிகக் குடியினரின் ஆக்கத்தால் வளர்ந்த சமண சமயத்தில் அன்றைய சமுதாய நாகரிக வளர்ச்சியின் சின்னமாக விளங்கிய அணிகலன்களில் தலையில் அணியும் சூளாமணியை ஆசிரியர் தோலாமொழித் தேவர் தேர்ந்தெடுத்துக் காப்பியம் புனைந்துள்ளார்.

    தொடக்கக் கால மனிதன் தன்னைவிட வலிமை வாய்ந்த சிங்கம், புலி, யானை போன்ற விலங்குகளோடு, போரிட்டுத் தன் உடலாண்மையை வெளிப்படுத்தியதுபோல, இயற்கையோடு போரிட மனிதன் தன் ஆற்றலைவிட, மந்திர ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும் என்பது போன்ற கருத்துகளைக் கொண்ட வடநாட்டுப் பழமரபுக் கதைகள் போல, சூளாமணியும் இயற்றப்பட்டுள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:59:07(இந்திய நேரம்)