தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 1.7 தொகுப்புரை

    காப்பியத் தொடக்கத்தில்     நாட்டுவளம்,     நீர்வளம், பொருள்வளம் ஆகியவற்றின் பெருமைகள் பேசப்பட்டுள்ளன. பயாபதி மன்னன் ஆட்சிச் சிறப்பு, மக்கட்பேற்றின் மாண்பு, கனவு  பற்றிய நம்பிக்கைகள், அரசன் அறிவுடைப் பெரியோரின்  துணையை நாடுதல் ஆகியவற்றை     வெளிப்படுத்துகிறார்  தோலாமொழித் தேவர். ஆட்சிப் பரப்பைப் பெருக்கத் திருமணம்  என்பதை ஒரு துணைக் கருவியாகக் கையாண்டுள்ளார்.

    மண்ணுலகக் காட்சியைப் பற்றிப் பாடிய புலவர் வித்தியாதர  உலகத்திற்கும் கதையைக் கொண்டு செல்கிறார். பல நிறமணிகள்,  மலர்கள், தெய்வமரங்கள், ஆறுகள் ஆகிய எல்லாவற்றிலும்  பெருமதிப்பும் தெய்வ நலனும் பொலிவதைக் காட்டி விண்ணுலக அரசன் சுவலனசடிக்கு, அருக்ககீர்த்தியும் சுயம்பிரபையும் பிறந்த செய்தியும் கூறப்பட்டுள்ளது.

    வித்தியாதரருடன் மானுடர் மணவினை கொள்வதும் விஞ்சையர் மனிதரே எனப் பழமரபு கூறிக் கதையைத் தொடர விட்டிருப்பதும் காப்பியப் போக்கில் ஆவலைத் தூண்டுவதாக அமைக்கப்பட்டுள்ளன.

    இன்பச் சூழலைப் பற்றிப் பேசிய பகுதிகளுக்கு அடுத்து, துன்பச் சூழலை வெளிப்படுத்த நினைக்கும் ஆசிரியர், அச்சுவ கண்டனையும் திவிட்டனையும் போரிடச் செய்கிறார். அதன்படி திவிட்டன் பக்கம் நற்சகுனமும் பகைவர் பக்கம் தீச்சகுனமும் தோற்றுவித்து, திவிட்டன் வெற்றி பெறலும் பகைவர் அழிவும் விளக்கமாகக் காட்டப்பட்டுள்ளன. இதன்வழியே, அரசுச் செல்வம், மகளிர் இன்பம் ஆகியவை நிலையா என்னும் கருத்தை, வெற்றி தோல்வி இரண்டின் இடையே தூவுகின்றார் ஆசிரியர்.

    அதற்கடுத்த நிலையில், உலக இன்பத்தையே கூறிவந்த நிலைமாறி அழியா நிலையை அடைய வழி எது என்பதை எண்ணச் செய்து, அருக மார்க்கத்தை ஒரு முனிவர் வாயிலாகப் பேச வைத்து, துறவு பூணுவதே நன்னெறி என்பதையும் பயாபதி அரசன் மூலம் விளக்கியிருக்கிறார் ஆசிரியர். இதன் வழி, மனித வாழ்வில் உயர்நிலை பெறுவதே சூளாமணியாகத் திகழ வழிகாட்டும் எனக் காப்பியத்தை முடிக்கிறார் ஆசிரியர், தோலாமொழித் தேவர்.

         தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1.
    சூளாமணியின் சமயக் கொள்கை யாது?
    2.
    நன்னிமித்தம், தீநிமித்தம் பற்றிச் சூளாமணி குறிப்பிடுவது யாது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2017 11:07:35(இந்திய நேரம்)