Primary tabs
-
1.3 கதை மாந்தர்
காப்பிய மாந்தர் என்ற நிலையில் மண்ணுலக அரசர்களையும் விண்ணுலக அரசர்களையும் அமைத்துள்ளார் ஆசிரியர். காப்பியத்தில் தலைமைப் பாத்திரம் திவிட்டனா? அல்லது பயாபதியா? என்பது தெளிவற்று இருப்பதை உணரலாம்.
காப்பியத்தில் இன்பச் சுவை, யாரைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கிறதோ, அவரே காப்பியத் தலைவர்! சூளாமணியில், திவிட்டனே காதல் சுவையைத் தாங்கி வரும் பாத்திரம்; அதுமட்டுமல்லாமல், வீரச்சாகசச் செயலையும் அவனே புரிகிறான். ஆனால், காப்பியம் வலியுறுத்தும் வீடுபேறு, பயாபதி மன்னனைச் சுற்றியே அமைக்கப்பட்டுள்ளது!
சீவக சிந்தாமணியில், சீவகனே வீரன், காதலன், தவம் செய்பவன். அதனால் அக்காப்பியத்தில் சிக்கல் இல்லை.
ஆனால், சூளாமணியில் காதலனாகவும் வீரனாகவும் மட்டுமே திவிட்டன் உள்ளான். வீடுபேறு அடைவது பயாபதியைச் சார்ந்திருக்கின்றது. காப்பியம் இவ்வாறு முரண்பட்டு, தெளிவற்று, சுவைகள் முறிவுபட்டு இருப்பதால்தான், சூளாமணியைச் சிறுகாப்பியத்தில் சேர்த்தனர்! அளவில் பெரிதாக இருப்பினும், சிறுகாப்பியமாக இருக்கலாம் என்பதற்குச் சூளாமணி ஒரு சான்று. அறம், பொருள், இன்பம், வீடு எனும் நாற்பொருளும் பெற்றிருந்தாலும், தலைமைப் பாத்திரம் சிதைபடுவதால், சூளாமணி சிறுகாப்பியமானது. தமிழ்க் கதைமரபு, காப்பிய மரபு இவற்றின்படி, திவிட்டனே காப்பியத் தலைவனானான்.
விண்ணுலக அரசர்கள், மண்ணுலக அரசர்கள் என உயர்நிலை மக்களைப் பற்றியே கவிதைகள் படைத்திருக்கிறார் ஆசிரியர்.
இக்காப்பியத்தில், பெண்கள் மிகவும் குறைவாக உள்ளனர் உணர்ச்சி மிக்க படைப்பாக அச்சுவகண்டனின் சொல்லும் செயலும் அமைக்கப்பட்டுள்ளன.