தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

காப்பியங்களின் சிறப்பு

  • 5.5 காப்பியங்களின் சிறப்பு

    வாணிதாசன் சிறந்த இயற்கை ஈடுபாடு உடையவர். எனவே இயற்கையைப் பற்றிச் சிறப்பாகப் பாடியுள்ளார். மேலும் அவரது கற்பனை வளத்தையும், அணிநலன்களைக் கையாளும் திறனையும் இக் காப்பியங்களில் காணலாம். இவை காப்பியங்களின் சிறப்புக் கூறுகளாகக் காணப்படுகின்றன.

    5.5.1 இயற்கை

    இயற்கையை அனுபவித்து மகிழாத கவிஞனோ, இயற்கையின் நுட்பங்களைக் கூர்ந்து நோக்காத கவிஞனோ இதுவரையில் தோன்றியதில்லை. அவ்வகையில் வாணிதாசனைத் தமிழ்நாட்டின் இயற்கைக் கவிஞர் என்றே அழைக்கலாம்.

     

    தேன்ததும்பும் பூப்பறித்தாள் முல்லை, நாளும்
    செடி பறித்தாள், தொடுத்திட்டாள் ; ஆங்குவந்த
    மானைத் தன் மார்பணைத்தாள் ; போ ! போ ! என்று
    வந்தஇளம் பசுங்கன்றை விரட்டி நின்றாள்

    எனக் கொடிமுல்லையில் இயற்கையின் ஈடுபாடு அவரைக் கதையைத் தொடரச் செல்லவைக்கிறது. இதேபோல்,

    தீங்குயில்கள் மரக்கிளையில் சிறகடிக்கும் ;
    தென்னையிலே கூடமைக்கும் காக்கை

    என்றும் இயற்கையின் மீது கவிஞருக்கு இருக்கும் ஈடுபாட்டினை அறிய முடிகின்றது. அதுபோலவே,

    தமிழச்சியிலும், பெண்கள் தண்ணீர்த் துறையில் குடத்தில் நீர் முகக்கும் காட்சியைப் படைக்க விரும்பிய கவிஞர், படித்துறை எங்கும் வட்டமதிக்கூட்டம் என்று பாடுகிறார்.

     தாமரை மொட்டுக்குள்ளே - அழகு
    தங்கிக் கிடக்குதடி

    என்று மலர்களைப் பற்றியும்,

    நொந்துபோன உள்ளத்தினை மாற்றும் நுழைபுலத்தோர்
    ஒக்கும் சோலை

    என்று சோலையைக் கவலை தீர்க்கும் மருந்து போலவும் இயற்கையைப் பாடுகிறார் கவிஞர். இவ்வாறு இயற்கையைக் கவலைக்கு மருந்தாகவும், கற்பனைக்கு வித்தாகவும் படைத்துள்ளார். இயற்கையின் மூலம் மக்களுக்கு அறிவூட்ட முற்படுவதையும் இவரது காவியங்களில் காணலாம்.

    5.5.2 கற்பனை

    கொடிமுல்லைக் காவியமே கவிஞனின் கற்பனையில் உருவானது. “மாமல்லபுரம் சென்றிருந்தோம். கலையும் மலையும் கத்தும் கடலும் என் கருத்தைக் கவர்ந்தன. கற்பனையைத் தூண்டின. அதன் விளைவே இந்நூல்” என்கிறார் கவிஞர்.

     ஞாயிற்றின் ஒளியோடு தொடங்கும் ‘தமிழச்சியில்’

     வானிடைத் தோன்றும் செம்மை
    வளம் பெறப் பரிதி காலை

    தானொரு ஓவியன்போல்
    பொன்னிறம் தடவும் ; ஆங்கே
    ஏனெனை மறந்தாய் என்றே
    எதிர்நின்று தடுக்கும் மேகம்
    கான்மலர் இவற்றைக்கண்டு
    கைகொட்டி நகைத்து நிற்கும்

    எனக் கதிரவனுக்கும் கார் முகிலுக்கும் இடையே நடக்கும் போராட்டம் கவிஞனால் அழகுபட வருணிக்கப்படுகிறது.

    மாலை நேரத்தில் காற்றுவாங்கச் சென்ற கவிஞன் குளத்தில் உள்ள தாமரையை நேசிக்கிறான். தாமரை இலைமேல் நிற்கும் தண்ணீர் கொற்கையில் குளித்த முத்தாகவும், தாமரை இலை தட்டாகவும் தவளை கத்துவது தென்னை மரங்களைக் கூவி அழைப்பதாகவும், தென்னைமரம் வாங்குவோனாகவும், தாமரைப்பூ விலை பேசுபவனாகவும் கவிஞன் கண்ணில் படுகின்றன. பிறிதொருபாடலில்,

    மதியவன் மறைந்துவிட்ட வானத்தை இருளரசி எப்படி ஆட்கொள்கிறாள் என்பதை, கீழ்வானை இருள் விழுங்கக் கண்டான் என்று கொடிமுல்லையில் படைக்கிறார்.

     செவ்வல்லி தீச்சுடர் போல் மலரும் ; மேற்குத்
    திசை மறையும் பரிதி கண்டு முளரி கூம்பும்
    அவ்வோடை பூக்காத ஆம்பல் நோக்கி
    அண்டிவரும் நீர்ப்பாம்பு காதல்பேச

    (பரிதி = சூரியன்; முளரி = தாமரை)

    என மதியின் வருகையைக் கவிஞன் நம்முடைய மதியை மயக்கும் வகையில் வருணிக்கிறார். இவ்வாறு கண்ணால் கண்ட காட்சியைக் கற்போரும் கண்டதுபோல இன்பமடையச் செய்வது கவிஞனின் கற்பனையாற்றலுக்குச் சான்றாகின்றது.

    5.5.3 அணிநலன்கள்

    ‘அணிகள் இல்லாத கவிதை பணிகள் இல்லாத பாவை’ என்பர். வாணிதாசனின் கவிதைகளில் அணிகளுக்குக் குறைவேயில்லை. கருத்துகளுக்கேற்ப ஆங்காங்கே அணிகள் எழிலாக ஒளிர்கின்றன.

    பொதுவுடைமை, பகுத்தறிவு, தீண்டாமை, சாதி ஒழிப்பு எல்லாம் ஏட்டளவில்தான். உழைப்பதற்கு மட்டுமே சேரி மக்கள் தேவை என்ற நிலையில் கொத்தடிமைகளாக நடத்தப் படுவதை,

     கல்லிக் கீழ்ச் செடியைப் போலக்
    காலத்தைக் கடத்தி விட்டீர்

    என்ற தமிழச்சியின் கூற்றால் அறியலாம்.

    கொடிமுல்லைக் காப்பியத் தலைவன் அழகனும் கொடிமுல்லையும் முதல் சந்திப்பிலேயே இதயத்தைப் பறிகொடுத்தனர். அதனைக் கூறவந்த ஆசிரியர்,

     அடிபட்டுக் கால்முறிந்த மானைப் போல
    அவளவனைப் பார்த்திருந்தாள்

    என்று குறிப்பிடுகிறார்.

    கொடி முல்லையும் அவளது தோழி அல்லியும் ஓடிப்பிடித்து விளையாடி மகிழ்கின்றனர். ஓடும் முல்லையைத் துரத்தும் அல்லியைப் பற்றிக் குறிப்பிடும் கவிஞர், அதனை

     ..................... இன்பம்
    அள்ளுதற்குப் பெட்டையினைத் துரத்திச் செல்லும்
    ஆண்கோழி போல் அல்லி துரத்துகின்றாள்

    என்ற உவமையின் வாயிலாக வெளிப்படுத்துகிறார். அதேபோல் கொடிமுல்லை தன் கூந்தல் அங்கும் இங்குமாக அலைய ஓடினாள் என்பதற்கு எருமை வாலொத்த சடை அலையச் சென்றாள் என்பது கேளாத உவமைகளாயுள்ளன.

    காதலி கொடிமுல்லையிடம் மனத்தைத் தூதுவிட்ட அழகன் துயிலிழந்து தலைசாய்க்காது தவிக்கும் காட்சியைத்

     தலையணைமேல் கையூன்றிப் பிடரிதாங்கிக்
    கிணறேறத் தத்தளிக்கும் நல்ல பாம்பின்
    நிலையினிலே படுத்திருந்தான்

    என்று படம்பிடித்துக் காட்டுகிறார்.

     

    பொரியுருண்டை என உம்முள்ளே
    பெண்களை நினைத்தீர் போலும்

    என ‘மிகமலிவான விலையில் கிடைப்பது குழந்தையின் பல்லுக்கு மெதுவாக இருக்கும்’ என்ற உவமையின் மூலம் பெண்களை மலிவான பொருளாகக் கருதுவதைத் தமிழச்சியின் மூலம் கண்டிக்கிறார்.

    ‘வயதில் நாங்கள் அம்மியைப் போலே வீட்டில் இருந்தனம்’ என்பதில், பெண்களை ஓர் உயிரற்ற திடப்பொருள் போலக் கருதி நடத்துவதைக் கண்டிக்கிறார். அதே நேரத்தில் பெண்களே தங்கள் நிலையை உணராமல் வாழ்ந்த பாங்கினையும் இவ்உவமையின் மூலம் வெளிப்படுத்துகிறார். இவ்வாறாக, தமிழச்சியிலும் கொடிமுல்லையிலும் உவமைகள் பல விரவிக் கிடக்கின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 11-07-2018 14:35:00(இந்திய நேரம்)