Primary tabs
-
5.8 தொகுப்புரை
இயற்கையாகவே சேரி மக்களின் மீது கொண்ட இரக்கத்தின் காரணமாகவே கவிஞர் வாணிதாசன் தமிழச்சி காப்பியத்தைப் படைத்துள்ளார். சேரி மக்களது வாழ்வில் மாற்றம் உருவாக வேண்டும் என்பது கவிஞரின் எண்ணமாகிறது. இந்தக் காவியத்தில் பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளார்.
- சேரியில் சீர்திருத்தம்.
- காதலை உயர்த்திப் பேசுதல்.
- கைம்மையைக் கண்டிப்பது.
- கற்பின் அவசியத்தைப் பாதுகாக்குமாறு
பெண்களுக்கு வலியுறுத்தல்.
- இதிகாச புராணங்களைச் சாடுதல்.
- சாதியக் கொடுமைகளையும் பாகுபாட்டினையும்
எதிர்த்தல்.
- பொதுவுடைமைச் சமுதாயத்திற்கு அடிகோலுதல்.
- பெண்கல்வி, முதியோர் கல்வியின்
அவசியத்தை வலியுறுத்தல்.
- குடும்பக் கட்டுப்பாட்டினைப் போற்றல்
- தாய்மொழி, தாய்நாட்டின் பெருமை
பேசுதல்.
- திராவிட நாட்டுப் பெருமையை எடுத்துச்
சொல்லல்.
- விதவை மணத்தை ஆதரித்தல்
எனக் கவிஞரின் கருத்துகளைக் காவியம் முழுவதிலும் காணலாம்.
வரலாற்றுப் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள கொடிமுல்லை, இயற்கையின் அழகு, பெண்ணுரிமைச் சிந்தனை, பகுத்தறிவு, மூடநம்பிக்கைகளை ஒழித்தல் போன்ற சிந்தனைகளின் தொகுப்பாகக் காணப்படுகிறது.
காதலுக்குச் சாதியில்லை என்னும் சீர்திருத்த நோக்கு இச்சிறுகாவியத்தில் சிறப்பிடம் பெறுகின்றது. கதைமாந்தர்களின் இயல்புகள் அழகாகச் சுட்டப்படுகின்றன. உவமை, உருவகம், கற்பனை, தனித்தமிழ் நடையெனக் காப்பியங்களின் சுவைக்கு மேலும் மெருகூட்டப்பட்டுள்ளன.
தமிழச்சியும் கொடிமுல்லையும் காவிய உலகில் புதியன படைக்கும் புரட்சி நூல்கள் என்றால் அது மிகையாது எனலாம்.
மக்களின் பேச்சு வழக்கில் காணும் சொற்களைக் கொண்டு காவியம் படைத்துள்ளார். கவிஞரின் இராகம், தாளம் ஈடுபாட்டையும் இசைப் பாடல்கள் வடிக்கும் ஆர்வத்தையும் இக்காவியங்களில் காண முடிகிறது. திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன், தந்தைபெரியார், தற்காலக் கவிஞர்கள் ஆகியோரின் சிந்தனைகளை மேற்கோள்காட்டியிருப்பது இக்காவியங்களுக்கு மேலும் வலுவூட்டுகின்றன.
- சேரியில் சீர்திருத்தம்.