தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வாழ்க்கை நெறி

  • 5.4 வாழ்க்கை நெறி

    கவிஞர் வாணிதாசன் காலத்தில் பெரியாரின் பகுத்தறிவு இயக்கம் தமிழகத்தில் மிகப்பெரிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. சமூக விழிப்புள்ள எவரையும் பெரியார் இயக்கம் வெகுவாகக் கவர்ந்தது. அவ்வகையில் பெரியாரின் சுயமரியாதைக் கோட்பாடும், சீர்திருத்தத் திருமண முறையும் கவிஞரைக் கவர்ந்தன. இவரது உள்ளமும் அவற்றிற்கு ஆட்பட்ட காரணத்தால்,தமது காவியங்களில் சீர்திருத்தத் திருமணமும், கலப்பு மணம், காதல் மணமும் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தமையால் இதனை அப்படியே தமிழச்சியிலும் கொடிமுல்லையிலும் படைத்துள்ளார்.

    5.4.1 திருமணம்

    திருமணம் என்பது மனப்பொருத்தமும் குணப்பொருத்தமும் பார்த்து நடத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.

    தமிழச்சியில் ‘மதுரைவீரன் - பாப்பாத்தி’ திருமணம் சீர்திருத்தத் திருமணமாகவும் கலப்புத் திருமணமாகவும் நடைபெறுகிறது.

    பஞ்சாங்கம் பார்க்கவில்லை !
    பார்ப்பானைத் தேடவில்லை!
    மஞ்சள் நூல், தாலி, பீலி
    வாங்கவும் இல்லை ! தீயைக்
    கொஞ்சமும் வளர்க்கவில்லை !
    குந்தாணி, அம்மி எல்லாம்
    வஞ்சகர் திணித்தார் !
    (தமிழச்சி : பக்கம் : 66)

    என்று அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல் இல்லாமல், நெல்லும் மலரும் தூவி மணமக்களை வாழ்த்தித் திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்குமுன் தமிழர்கள் திருக்குறளை ஓதி மணம் முடித்தல் வேண்டும் என்கிறார் கவிஞர். தமிழச்சியில் நடைபெறும் திருமணத்தில் தாலி அணிதலும் இல்லை; அகற்றலும் இல்லை.

    5.4.2 காதலின் மாண்பு

    தமிழச்சியிலும் கொடிமுல்லையிலும் காதலின் மாண்பு குறித்து அதிகமாகவே பேசப்பட்டுள்ளது. தமிழச்சியின் காதலன் சாதாரண உழவன். கொடிமுல்லையின் காதலன் சாதாரணக் கல்தச்சன். தங்களுடைய காதலுக்குத் தடையாக இருப்பவற்றை உடைத்தெறியும் முயற்சியிலேயே இருவரும் காணப்படுகின்றனர்.

    • காதலர்

    மன இன்பத்திற்கேதடி சாதிமதம் என்று பாடும் கவிஞர் வாணிதாசன் தமிழச்சி-யில் பாப்பாத்தி-துரைவீரன் திருமணத்தைக் காதல் மணமாகவும் அதே வேளையில் கலப்பு மணமாகவும் நடத்தி வைக்கிறார். கொடிமுல்லையில் அழகன்-கொடிமுல்லைக் காதல் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு உடையது எனினும் வாழ்வில் இணையாத காதலர்கள் சாவில் இணைகின்றனர். தமிழச்சியில் காதல் ஒரு கூறாகிறது. கொடிமுல்லையில் காதலே உயிர்நாடியாக அமைகிறது.

    கயற்கண்ணாள் என் இன்பத்தலைவி ! உள்ளக்
    கடலலைக்கும் கதிர்க்கற்றை

    என்ற அழகன் கூற்று காதல் படுத்தும் பாட்டினை விளக்குகிறது கொடிமுல்லைக் காவியம். இங்குக் காதலனின் உள்ளம்கடலாகிறது. அவள் கதிர்க்கற்றையாகிறாள். நிலவொளி கடலை அலைக்க, காதலியின் கண்ணொளி காதலனின் உள்ளக் கடலை அலைக்கிறது

    என் மனம் கொள்ளை கொண்டான்
    இருக்கின்றான் அவனை யன்றி
    முன்னாண்ட மூவேந்தர்கள்
    முளைத்தாலும் விழையேன்
    (தமிழச்சி : ப-28)

    என்று காதலித்தவனையே மணக்கும் உறுதி பூண்டவளாகத்தமிழச்சி காணப்படுகிறாள். ‘காதல் துணைவனை அடையாவிட்டால் குவளை தின்று இறந்து படுவேன்’ என்றும் தமிழச்சியில் ‘காதல்’ பற்றிய கருத்துகளை விதைத்துள்ளார் கவிஞர்.

    காதலியின் கண் வீச்சில் விழுந்த காதலன் நிலையை,

    வலைப்பட்ட மீனொப்ப அவள் மைக்கண்ணில்
    அகப்பட்ட மனமடக்கி நடந்திட்டானே

    என்று கொடிமுல்லைக் காப்பியத்தில் காதலின் வல்லமையைப் புலப்படுத்துகிறார் கவிஞர்.

    மேலும்,

    காதலுக்குத்
    தொலைதூரம் சாதிமதம் ; அரசன் ஆண்டி
    சொக்கும் எழில்

    என்றும்,

    மலையினுக்கும் மடுவிற்கும் உள்ளவேறு
    பாடு, உண்மைக் காதலுக்கு வணங்கும்

    என்று கொடி முல்லையில் காதலின் மேன்மைகளையும், காதலுக்குக் குறுக்கே நிற்கும் உயர்வு தாழ்வு தடைக்கல் உடைத்தெறியப்பட வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார் கவிஞர். மேலும், ‘விலை கொடுத்து வாங்க முடியாதது காதல்’ என்றும் கூறுகிறார். ‘காதலுக்கு மதிப்பளிக்காத நாடு இருப்பதைவிட அழிவதே மேல்’ என்பன போன்ற கருத்துகளையும் கொடிமுல்லையில் படைத்திருக்கிறார்.

    காதலுக்கு ஓர் உயர்வளித்துப் பேசப்பட்ட கொடிமுல்லையில் வாழ்வில் ஒன்றுசேராமல் இறப்பில் ஒன்று சேர்வதையே காணமுடிகிறது.

    • மாற்றுமருந்து

    காதல் நோய் தீரவேண்டுமானால் அதற்கான மாற்று மருந்து என்ன என்பதைச் சொல்ல வருகிறார் கவிஞர்,

    நச்சுப் பாம்பின்
    கடிபட்டார் பிழைத்திடுவார் ; தோளணைப்பே
    காதலுக்கு மாற்று

    என்று கொடிமுல்லைக் காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. இவ்வாறு அன்பின் உயர்ந்த வெளிப்பாடான காதல் உணர்வுகளைத் தமது இருகாப்பியங்களிலும் படைத்திருக்கிறார் வாணிதாசன்.

    5.4.3 சாதியும் தீண்டாமையும்

    சாதிகளைத் தோற்றுவிப்பவன் மனிதனே. தன் வாழ்விற்கும் வசதிகளுக்கும் ஏற்ப அதனை மாற்றிக் கொள்கிறான் என்பதும் மனிதனின் முன்னேற்றத்திற்குச் சாதி ஒரு தடையாக உள்ளது என்பதும் கவிஞர் வாணிதாசனின் கருத்து.

    சாதியை வகுத்து நம்மைப்
    பாழ்செய்த தடியர் கூட்டம்
    ஏதேனும் சிறிய நன்மை
    நமக்காக நினைத்த(து) உண்டா?

    என்று தமிழச்சி பாத்திரத்தின் மூலம் சாதியை ஒழிக்க நினைக்கிறார் கவிஞர். தாழ்த்தப்பட்ட சாதி என்று தள்ளிவைக்கப்பட்ட சேரி மக்களின் வாழ்வில் சீர்திருத்தத்தை விரும்பும் தமிழச்சி, சாதி பார்ப்பவனைத் தடியர் கூட்டம் என்றே சாடுகிறாள்.

    காதலுக்குத் தொலை தூரம் சாதிமதம் என்று கொடிமுல்லையில் பேசப்படுகிறது.

    • கல்வியின் சிறப்பு

    சாதியை ஒழிக்க வேண்டுமானால் அவனுக்குக் கல்விக்கண்ணைத் திறந்திடல் வேண்டும் என்பது கவிஞரின் எண்ணம். தமிழச்சியில்

    படித்திடில் சாதிப்பேச்சும்
    பறந்திடும் ; அறிவும் உண்டாம் ;
    படித்திடில் அடிமை ஆண்டான்
    எனும் பேச்சும் பறக்கும் அன்றோ

    என்று சாதியை எளிதில் ஒழிக்க வேண்டுமானால் கல்வி ஒன்றினால் தான் முடியும் என்பதைக் கவிஞர் விளக்குகிறார்.

    • தீண்டாமை

    தீண்டாமை அகல வேண்டும் மனத்தில், தீண்டாமை ஒழி என்று நினைத்த கவிஞர், முதலியார் வீட்டுப் பெண்ணாகத் தமிழச்சியைப் படைத்து, சேரி மக்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபட வைத்துள்ளார்.

    சேரி மக்களின் அடிமை வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்திட எழுந்த காப்பியமே தமிழச்சி.

    ஆண்டான் அடிமைகள் ஏய்ப்பதற்கே - நம்மை
    அடிமைக் குழியினில் சாய்ப்பதற்கே
    தீண்டாமை என்றொரு பொய்யுஞ் சொன்னார் -

    என்று பாடுகிறார் கவிஞர்.

    மதுரைவீரன் - பாப்பாத்தித் திருமணமும் சாதியை உடைத்தெறிய நடத்திவைக்கும் மணமாகவே காணமுடிகிறது. இதேபோலக் கொடிமுல்லையிலும், சாதியையும், தீண்டாமையையும் ஒழிக்கவே அழகன் எனும் பாத்திரத்தைப் படைத்திருக்கிறார் கவிஞர்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1.
    வாணிதாசனின் வாழ்க்கைக் குறிப்பு - வரைக.
    2.
    வாணிதாசனின் முதல் கவிதை எது?
    3.
    வாணிதாசன் படைத்த நூல்கள் எத்தனை?
    4.
    வாணிதாசன் எந்தெந்த இதழ்களில் கவிதைகள் எழுதினார்?
    5.
    தமிழச்சி காவியம் உருவான விதம்பற்றிக் குறிப்பிடுக.
    6.
    சாதி வேறுபாட்டினைக் கவிஞர் எவ்வாறு கண்டிக்கிறார்?
    7.
    காதல் பற்றி இரு காவியங்களின் கருத்தினைக் குறிப்பிடுக

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2017 12:15:53(இந்திய நேரம்)