தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.3-சைவசித்தாந்தக் கொள்கைகள்

  • 6.3 சைவ சித்தாந்தக் கொள்கைகள்


        உலகத்தில் உள்ள பொருள்களை மூன்றாகக் காண்பது சைவ
    சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இதில் காட்சி
    அளவையின் மூலம் உயிர்கள் உள் பொருள் என்பது
    உணரப்படுகிறது. ஓரறிவு முதலாக ஆறறிவு வரை உள்ள உயிர்கள்
    அனைத்தும் கண்ணால் காணப் பெறுபவையாகும். இந்த உயிர்கள்
    இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றன. அவ்வாறு அனுபவிக்கின்ற
    பொழுது எல்லா உயிர்களும் ஒரே மாதிரியான இன்ப துன்பங்களை
    அனுபவிப்பதில்லை. எடுத்துக்காட்டாக ஒரு குடும்பத்தில் ஒரு
    பெற்றோருக்குப் பிறந்த பிள்ளைகள் அனைவரும் ஒரே உயரமோ,
    ஒரே குணமோ, ஒரே நிறமோ, ஒரே அறிவோ பெற்று
    விளங்குவதில்லை. வெவ்வேறான குணங்களோடு, வெவ்வேறான
    நிறத்தோடு,     அறிவு     நிலையில்     ஏற்றத் தாழ்வோடு
    விளங்குகின்றார்கள். இவ்வாறு விளங்குவதற்குக் காரணம் அவர்கள்
    முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினைகள்தான் என்பதை
    அனுமான அளவையால் உணர்கின்றோம்.

        இவ்வாறு இரு வினைகளுக்கு ஏற்ப உயிர்களை
    அனுபவிக்கச் செய்பவன் இறைவன் என்று இறைவனை
    அனுபவித்துக் கண்டறிந்த ஞானிகளின் கூற்றுகள் உரையளவையாகத்
    தருகின்றன. இத்தகைய அளவைகள் மூலம் இறை, உயிர், பாசம்
    ஆகிய முப்பொருள்களின் தத்துவங்கள் சைவ சித்தாந்தத்தில்
    விளக்கப் படுகின்றன. சைவ சித்தாந்த சாத்திரங்கள் கூறுகின்ற
    இத்தத்துவங்களை முழுமையாகத் தருவதென்றால் தனி ஒரு நூலாக
    அமையும். ஆதலால் பாடத்தின் எளிமை கருதி முப்பொருள்களின்
    கொள்கைகளில் முக்கியமானவவை மிகச் சுருக்கமாக இப்பாடத்தில்
    தரப்பெற்றுள்ளன. பாடத்தின் சுருக்கம் கருதி, தந்திருப்பது மட்டுமே
    சைவசித்தாந்தக் கொள்கைகள் என்று நினைத்துவிடக் கூடாது.
    கொள்கைகளைச் சாத்திர நூல்கள் விரிவாகத் தருகின்றன.
    அவற்றைப் பயிலும்போது முழுமையான கொள்கைகளை அறியலாம்.

    6.3.1 இறைவன் பற்றிய கொள்கைகள்

        சைவத்தின் இறைவன் ஒருவனே ஆவான். அவன்
    பதி என்று அழைக்கப் படுகின்றான். இப்பதியே சிவன்
    என்றும் அழைக்கப்படுகிறது. சிவம் என்ற சொல் மங்கலம்
    என்ற பொருளைத்தரும். எனவே நிறைவான நன்மையை
    உடையதாக, தீமையே இல்லாது விளங்குகின்றவன் என்ற
    பொருளைச் சிவன் என்ற சொல் தருகிறது. இதனைத்
    திருநாவுக்கரசர், “சிவன் எனும் நாமம் தனக்கே உரிய
    செம்மேனி அம்மான்” எனக் குறிப்பிடுவார். இச்சிவனைக்
    கடவுள் என்று பொதுவாகக் குறிப்பிடுகின்ற வழக்கம் உண்டு.
    கடவுள் என்றால் கடவுதல் என்பது ஒரு பொருள். உலகத்தை
    இயக்குவதால் அவருக்கு இப்பெயர் ஆயிற்று. மற்றொரு
    பொருள் கடந்தவர் என்பதாகும். உலகத்துப் பொருள்கள்
    எல்லாவற்றையும் கடந்து மேம்பட்டவர் என்பதால் இப்பெயர்
    ஏற்பட்டது. மற்றொரு பொருள் உள்ளத்தைக் கடந்தவர்
    என்பதாகும்.     மனிதர்களின்     உள்ளத்தைக் கடந்தவர்
    என்பதனாலும் இப்பெயர் உண்டாயிற்று.

        கடவுள் உண்டு என்பதைச் சைவசித்தாந்தம் முதற்கண்
    விளக்கிச் செல்கிறது. சித்தாந்த சாத்திரங்கள் பரபக்கம் என்ற
    தலைப்பில் கடவுள் இல்லை என்பாரின் கூற்றை மறுத்துக்
    கடவுள் உண்டு என்று நிறுவித் தங்கள் கொள்கைகளை
    வலியுறுத்துகின்றன. கடவுள் உண்டு என்பதைப் பெரும்பாலும்
    சைவ சித்தாந்தம் அனுமான அளவையாலும் உரையளவையாலும்
    நிரூபிக்கிறது.

        கடவுளின் தன்மைகள் தடத்த இலக்கணம், சொரூப
    இலக்கணம் என்ற வகையில் விளக்கப் பெறுகின்றன.
    இறைவனின் பொதுத் தன்மைகள் தடத்த இலக்கணமாகும்.
    அவற்றைக் கீழ்வருமாறு குறிப்பிடலாம்.

    1. இறைவன் தோற்றமும் அழிவும் இல்லாதவன். அதாவது
      பிறப்பு, இறப்பு இல்லாதவன்.
    2. உயிர்களைப் போல் மலங்களினால் என்றைக்கும் பிணிக்கப்
      படாதவன்.
    3. இறைவன் ஓர் உருவமாகவோ, ஒரு பொருளாகவோ
      விளங்காது அதிசூட்சுமப் (உருவமற்ற)     பொருளாக
      விளங்குபவன்.
    4. படைத்தல் (உயிர்களை), காத்தல், அழித்தல் என்ற
      முத்தொழிலையும்     அவன் செய்கின்றான். அதைத்
      திருவிளையாடல் என்று குறிப்பிடுவர். மேலும் மறைத்தல்,
      அருளல் என்ற இருதொழில்களை உயிர்களுக்கு அருளின்
      பொருட்டுச் செய்கின்றான். உயிர்களின் அறிவை மறைப்பது
      ஆணவ மலமாகும். அந்த மறைக்கும் ஆற்றலைத் தூண்டி
      உலக இன்ப துன்பங்களை அனுபவிக்கச் செய்து தன்னைக்
      காட்டாது ஆணவ மலத்தின் சக்தி ஒடுங்க உயிர்களை
      அனுபவிக்கச் செய்வது மறைத்தலாம். அருளல் என்பது
      ஆணவமலம் அடங்க அடங்க உயிர்களை அருளை நோக்கி
      வரச்செய்தல் ஆகும்.
    5. அவ்வாறு தொழில்களைச் செய்யும்போது தான் தனித்து
      நின்றும், உயிர்களோடு உடனாக நின்றும் செய்கின்றான்.
    6. குறிப்பிட்ட உருவம் இல்லாதவன். தன் தொழில்களைச் செய்ய,
      உயிர்களுக்கு அருள் வழங்குதற்கு ஏற்ப வேண்டும்
      வடிவங்களை எடுத்துக் கொள்வதும் உண்டு. அவ்வாறு
      உருவம் எடுப்பது உயிர்களுக்கு உதவும் பொருட்டே ஆகும்.
    7. இறைவனின் உருவத்தைத் திருமேனி என்று கூறுவர். இவை
      மூன்றாகும். அருவம், உருவம், அருவுருவம் என்பவை
      அவை. அருவம் என்பது கண்களுக்குப் புலப்படாதது.
      அவ்வாறு புலப்படாத சக்தியாய் நின்று இறைவன்
      உயிர்களுக்கு அருள்புரிகின்றான். உருவம் என்பது
      கண்களுக்குப் புலப்படுவது; உயிர்களுக்கு ஞானம் தருகின்ற
      பொழுது ஞானாசிரியர் வடிவில் தோன்றி அருள்புரிவது.
      அருவுருவம் என்பது புலப்பட்டும் புலப்படாதும் நிற்பது.
      அதாவது நம் போன்றவர்களுக்குப் புலப்படாது ஞானிகளாகிய
      உயிர்களுக்குப் புலப்படுகின்ற திருமேனி. இவ்அருவுருவ
      வடிவத்தை அறிவுறுத்துவதற்குத் திருக்கோவில்களில் இலிங்க
      வடிவம்     அமைந்துள்ளது.     பொதுவாக, இறைவன்
      உருவமில்லாது இருப்பதுதான் அடிப்படை இலக்கணமாகும்.
      தன் பொருட்டன்றி உயிர்களுக்கு அருள் தருவதற்காகவே
      இவ்வடிவத்தைப் பெறுகின்றான். இவ்வாறு என்றும்
      உள்ளவனாய், பிறப்பு இறப்பு அற்றவனாய், தனக்கென
      உருவம் அற்றவனாய், உயிர்களுக்கு அருளும் பொருட்டு
      மூவகைத் திருமேனிகளைக் கொண்டவனாய், ஐந்து
      தொழில்களைச் செய்கின்றவன் இறைவன் ஆவான் என்பது
      இதுவரை கூறப்பெற்றது.

    · இறைவன் குணங்களாக எட்டினைக் குறிப்பிடுவர். அவை :

    1)
    தன்வயத்தனாதல்
    :
    சுதந்திரம் உடையவனாய் விளங்குதல்.
    அதாவது பிறர் வயப்பட்டுச்
    செயல்புரியாது     அனைத்திலும்
    சுதந்திரமுடையன் ஆதல்.
    2)
    இயற்கை
    உணர்வினன் ஆதல்
    :
    அனைத்தையும் தானே அறியும்
    தன்மை உடையவன் ஆதல்.
    3)
    முற்றுணர்வினன்
    ஆதல்
    :
    ஒருகாலத்தில்     அனைத்துப்
    பொருள்களையும் அறிந்து நிற்றல்.
    அதாவது ஒவ்வொரு பொருளையும்
    ஒவ்வொன்றாக அறியாமல் எல்லாப்
    பொருள்களையும் ஒரே நேரத்தில்
    அறிதல்.
    4)
    அளவிலா ஆற்றல்
    உடையவன் ஆதல்
    :
    எச்செயலையும் எக்காலத்தும் செய்ய
    வல்லமை உடையவன் ஆதல்.
    5)
    வரம்பிலா இன்பம்
    உடையவன் ஆதல்
    :
    பேரின்பம் உடையவனாய் விளங்குதல்.
    6)
    பேரருள்
    உடையவன் ஆதல்
    :
    பயன் கருதாது அருள்வழங்கும்
    தன்மை உடையன் ஆதல்.
    7)
    இயல்பாகவே
    பாசங்களிலிருந்து
    நீங்குதல்
    :
    பாசம் என்னும் கட்டுக்குள் இறைவன்
    சேர்தலில்லை.
    8)
    தூய இயல்பினன்
    ஆதல்
    :

    பாசம்     சாராத காரணத்தால்
    குற்றங்களுக்குரிய உடம்பு இல்லாது
    தூய உடம்பை உடையவன் ஆதல்.

        இறைவன் இவ்வாறு எட்டுக்குணங்களை உடையவன். அவன்
    அருள் புரிகின்ற பொழுது சக்திநிலையில் அருள் புரிகின்றான்
    என்பது சைவ சித்தாந்தக் கொள்கையாகும். இச்சக்தியைத்தான்
    பெண் வடிவமாகச் சைவ சித்தாந்தம் கொள்ளுகிறது. ஆனால்
    இறைவன் வேறு, சக்தி வேறு அல்ல. இறைவன் ஒருவன்
    என்றாலும், சிவம், சக்தி என்ற இரு தன்மைப்பட்ட நிலைகளில்
    நின்று முன்குறித்த ஐந்து தொழில்களைச் செய்கின்றான். இதற்கு
    உவமை சூரியனும், சூரியஒளியும் ஆகும். இந்தச் சக்தியின்
    மூலமாக இறைவன் அருளுகின்ற போது அருளவேண்டிய
    உயிர்களுக்கு ஏற்ப அருளுகின்றான். இவ்வாறு சைவசித்தாந்த
    தத்துவக் கொள்கையில் இறைவனைப் பற்றிய பொது, சிறப்புக்
    கொள்கைகள் கூறப் பெறுகின்றன.

    6.3.2 உயிர் பற்றிய கொள்கைகள்

        கடவுளைப் போல உயிரும் அநாதியானது. அதாவது
    அழிவில்லாதது என்பது பொருள். கடவுள் இல்லையென்று
    மறுப்பவர்கள் உயிர் இல்லை என்று உறுதியாக மறுப்பதில்லை.
    எனவே உயிர் உள்பொருளாகும். இதனைப் பசு என்ற சொல்லால்
    குறிப்பர். பசு என்பது கட்டுப்பட்டிருப்பது என்ற பொருளைத்தரும்.
    வீட்டுத் தொழுவத்தில் பசு எவ்வாறு கயிற்றால் கட்டப்படுகிறதோ
    அதுபோலப் பாசம் என்ற மலங்களால் கட்டப்படுவதால் உயிர், பசு
    என அழைக்கப்படுகிறது. உயிர் என்பது எது என்ற கேள்வியைச்
    சித்தாந்தம் கேள்வியாகக் கேட்டு, இறுதியில் உயிர் என்பது
    உணர்தல் தன்மைத்து என்ற முடிவைக் கூறுகிறது. சிறிது
    விளக்கமாகச் சொன்னால் உயிரானது தானே அறிந்தும் அறிவித்தும்
    நிற்பதுமாகிய கடவுளும் அன்று; அறிவித்தாலும் அறிய மாட்டாத
    பாசமும் அன்று; அறிவித்தால் அறியும் அறிவுடைய ஒரு
    பொருளாகும். அறிவே வடிவாகிய கடவுள் சித்துப் பொருள்
    என்றும், அறிவே இல்லாத சடப் பொருள்களாகிய பாசங்கள்
    அசித்து என்றும் கூறப்படும். இவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாகிய
    உயிர் சதசித்து என்று கூறப்படும்.

        உயிர்கள் எண்ணற்றவையாகும். அவை யாராலும்
    படைக்கப்பட்டதும் இல்லை. அவற்றிற்குத் தோற்றமும் இல்லை,
    அழிவும் இல்லை. தானே உணர்கின்ற ஆற்றல் இல்லாதது.
    அறிவிக்க அறியும் அறிவுடையதால் சிற்றறிவு என்றும் கூறப்படும்.
    இவ்வுயிரைச் ‘சார்ந்ததன் வண்ணமாதல்’ என்று குறிப்பிடுவதும்
    உண்டு. உயிரின் நிலைகளை அவத்தைகள் என்று குறிப்பிடுவர்.
    அவத்தை என்ற சொல்லுக்கு நிலை என்பது பொருள். இந்த
    நிலைகளைக் காரண அவத்தை என்றும், காரிய அவத்தை
    என்றும் இருவகையாகக் கூறுவர். காரண அவத்தை மூன்று
    வகைப்படும். அவை கீழ்வருமாறு கூறப்படுகின்றன.

    (1)
    கேவல அவத்தை
    :
    ஆதிகாலம்      தொட்டு
    ஆணவமலத்தோடு இருக்கின்ற
    உயிரின்     நிலை     கேவல
    அவத்தை எனப்படும்.
    (2)
    சகல அவத்தை
    :
    மாயையினால்     உடம்பைப்
    பெற்று உலகப் பொருளை
    நுகர்வது சகல அவத்தையாகும்.
    (3)
    சுத்த அவத்தை
    :
    பல்வேறு     பிறப்பெடுத்துப்
    படிப்படியாக முக்திப் பேற்றை
    அடைந்து     இறைவனின்
    திருவருளுக்கு     உரியதாகும்
    நிலை     சுத்த     அவத்தை
    எனப்படும்.

        இம்மூன்று நிலைகளில் உயிரானது நிற்பது கூறப்படுவதால்
    காரண அவத்தையாயிற்று.

        அடுத்து, காரிய அவத்தை என்பது உயிர் செயல்படும்
    நிலையைக் கூறுவதாகும். செயல்படுவது கேவலம் முதலிய
    மூன்றிலும் நிகழும். அவ்வாறு செயல்படும் பொழுது ஒவ்வொரு
    நிலையிலும் ஐந்தாகச் செயல்படும். எனவே கேவலம் முதலிய
    மூன்றிலும் ஐந்து செயல்நிலைகள் அமைந்து பதினைந்து காரிய
    அவத்தைகள் ஆகின்றன. பொதுவான ஐந்து காரிய அவத்தைகள்
    கீழ்வருமாறு :

    1)
    நனவு
    :
    இது வடமொழியில் சாக்கிரம் என்ற
    சொல்லப்படும். இந்நிலையில் உயிர்
    புருவ நடுவிலிருந்து செயல்படும்.
    2)
    கனவு
    :
    சொப்பனம்     என்று கூறப்படும்.
    இந்நிலையில் கண்டத்திலிருந்து உயிர்
    செயல்படும்.
    3)
    உறக்கம்
    :
    சுழுத்தி     என்று     கூறப்படும்.
    இந்நிலையில் உயிர் இருதயத்திலிருந்து செயல்படும்.
    4)
    பேருறக்கம்
    :
    இது துரியம் என்று கூறப்படும்.
    இந்நிலையில் உயிர் உந்தியிலிருந்து
    செயல்படும்.
    5)
    உயிர்ப்படக்கம்
    :
    துரியாதீதம்     என்று கூறப்படும்.
    இந்நிலையில் உயிர் மூலாதாரத்திலிருந்து
    செயல்படும்.

        கேவல நிலையில் ஐந்து அவத்தைகள் செயல்படும் பொழுது
    கீழாலவத்தை என்பர். சுத்த நிலையில் செயல்படும் பொழுது
    மலோலவத்தை என்பர். சகலத்தில் செயல்படும் பொழுது
    மத்தியாலவத்தை என்பர். இவ்வாறு கடவுளைப் போல
    அநாதியாய்த் தோன்றி என்றும் உள்பொருளாகி எண்ணற்றவைகளாய்
    விளங்கி, சார்ந்ததன் வண்ணமாகி, உணர்த்த உணரும் தன்மை
    உடையதாய், மூன்று நிலைகளில் நின்று, ஐந்துவகை நிலையில்
    செயல்படுவது உயிராகும்.

        அளவில்லாத உயிர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
    உயிரின் அடிப்படைநிலை பாசங்களோடு விளங்குவதாகும்.
    அப்பாசங்கள் மூன்றாகும். அவை ஆணவம், கன்மம், மாயை
    என்பன. இம்மூன்று பாசங்களோடு சேர்ந்திருப்பதைக் கொண்டு
    உயிர்கள் மூன்று வகையாகப் பிரிக்கப் படுகின்றன. ஆணவத்தோடு
    மட்டும் நிற்கும் பொழுது விஞ்ஞானகலர் என்று அழைக்கப் படும்.
    ஆணவம், கன்மம் என்ற இரண்டோடு நிற்கும்பொழுது பிரளயாகரர்
    என்று அழைக்கப்படும். ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று
    மலங்களோடு நிற்கும் பொழுது சகலர் என்று அழைக்கப்படும்.
    இவ்வாறு மூன்று வகைப்பட்ட உயிர்கள் இன்ப, துன்ப, பிறப்பு,
    இறப்புகளுக்கு ஆட்பட்டு உழல்வது செயற்கைநிலை என்று
    கூறப்படும். இறைவனின் அருளுக்கு ஆட்பட்டு மாறாத
    பேரின்பத்தைப் பெறுதல் இயற்கைநிலை எனப்படும்.

        இந்த உயிர் தன் வினைக்கு ஏற்பப் பல்வகைப் பிறப்புகளுக்கு
    ஆளாகிறது; இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றது; இறுதியில்
    இறைவனின் திருவருளுக்கு ஆளாகிறது என்பது சித்தாந்தக்
    கொள்கையாகும்.

    6.3.3 பாசம் பற்றிய கொள்கைகள்

        சைவசித்தாந்த முப்பொருள்களில் பாசம் என்பது மூன்றாவது
    பொருளாகும். இதனைத் தளை என்றும் கூறுவர். பாசத்தளை என்று
    சேர்த்துச் சொல்வதும் உண்டு. பாசம் என்பது கயிற்றைக் குறிக்கும்.
    தளை என்பது கட்டுவதைக் குறிக்கும். எனவே கட்டப் படுகின்ற
    கயிறு என்ற நிலையில் பாசங்கள் குறிக்கப் படுகின்றன. இப்பாசங்கள்
    மூன்று வகைப்படும். அவை ஆணவம், கன்மம், மாயை எனப்படும்.

        ஆணவம் என்பது முதலாவது. செம்பு என்ற உலோகப்
    பொருள் என்றைக்கு உண்டோ அன்றே அதற்குக் களிம்பு இருப்பது
    போல, உயிர் என்று உண்டோ அன்றே அதற்கு ஆணவம் உண்டு.
    எனவே இதனை மூலமலம் என்று குறிப்பிடுவர். ஆணவம் என்ற
    சொல் சைவசித்தாந்த அடிப்படையில் செருக்கு என்ற பொருளைத்
    தராது. உயிரை அறியாமைப்படுத்தும் நிலையைக் குறிக்கும். சிறிது
    விளக்கமாகச் சொன்னால் கண்ணை மறைக்கின்ற இருள்போல
    உயிர்கள் எதிரில் உள்ள பொருள்களை அறிய முடியாத நிலையில்
    அவ்வுயிர்களுக்கு அறியாமையைத் தருவது ஆணவமாகும். இது
    ஆணவத்தின் முதல் நிலையாகும். அதாவது உயிர்களின் அறிவு,
    இச்சை, செயல் என்ற மூன்றனையும் நிகழவிடாது தடுத்து உயிர்
    என்ற ஒன்றே உண்டு என்பதே தோன்றாதவாறு மறைத்துத்
    தானேயாய் நிற்பது ஆணவமாகும். இதுதான் உயிர்களின்
    கேவலநிலை என்றும் ஆணவத்தின் முதல்நிலை என்றும் கூறப்படும்.

        பின், கன்மம், மாயை இவற்றோடு சேர்ந்து அறிவைத்
    தடுக்கும்பொழுது இரண்டாவது நிலையை அடைகிறது. அதாவது
    மங்கலான ஒளியினில் கண்களானது பொருள்களைத் தவறாகக்
    காண்பது போன்றதாகும். இது உயிரின் சகலநிலை என்றும்,
    ஆணவத்தின் இரண்டாவது நிலை என்றும் கூறப்படும். இவ்வாறு
    ஆணவ நிலை இரண்டு வகைப்படும்.

        ஆணவமலம் என்பது பிறபொருளைக் காட்டாது
    மறைப்பதோடு தன்னையும் காட்டுவதில்லை. சைவசித்தாந்தம்
    மட்டுமே ஆணவத்தை ஏற்கிறது. பிறமதங்கள் ஆணவத்தை
    ஏற்பதில்லை. நெல்லுக்கு உமிபோல, செம்பினில் களிம்புபோல,
    உயிர்களைத் தோற்றத்தின் காலத்திலேயே பற்றிவிடுகின்ற ஆணவம்
    இறுதிவரை உயிர்களைப்பற்றி நின்று இறுதியில் உயிர்கள் இறைவன்
    அருளைப் பெறுகின்ற பொழுது அடங்கி நிற்குமே தவிர
    அழிவதில்லை. ஆணவத்தின் மறைப்பால் தன்னிடத்தில் நிறைந்து
    நின்ற கடவுள் அருளை அறியாத உயிர், ஆணவம் அடங்கி அறிவு
    மறைத்தலை ஒழித்தவுடன் பேரானந்தத்தைப் பெறுகிறது.

        இரண்டாவது பாசம், கன்மம் ஆகும். உயிரில் ஆதியாய்
    நிற்பது ஆணவமலம். மற்ற கன்மம், மாயை என்பவை இடையில்
    வந்து சேருவன ஆகும். எனவே இதனை ஆகந்துக மலம் என்பர்.
    இவ்விரண்டு மலங்களும் ஆணவ மலம் அடங்கும் காலத்து
    நீங்கிவிடும். கன்மம் என்பது வினை என்றும் ஊழ் என்றும்
    சொல்லப்படும்.     இந்தியத்     தத்துவக்     கோட்பாடுகளில்
    வினைக்கோட்பாடு என்பது இன்றியமையாததாகும். இவ்வினைக்
    கோட்பாடுகளின் வேறுபாடுகளே இந்தியத் தத்துவக் கோட்பாட்டில்
    பல சமயங்கள் ஏற்படுவதற்குக் காரணம் ஆகும். சைவசமயத்தில்
    வினைக்     கொள்கை     பிறசமயக்     கோட்பாட்டிலிருந்து
    வேறுபட்டிருக்கிறது.     உயிர்கள் வினையை அனுபவித்தே
    ஆகவேண்டும் என்பது சைவசித்தாந்தத்தின் அடிப்படைக்
    கொள்கையாகும். இந்தக் கன்மமாகிய வினைதான் பிறப்புக்கும்,
    அதன்கண் உளவாகும் இன்ப துன்ப வினைக்கும் காரணமாகும்.
    எனவே உயிர்களின் அறிவை மறைத்தல் ஆணவமலம் என்று
    கூறுவதுபோல் உயிர்களின் இன்ப துன்பங்களை அனுபவிக்க
    வைப்பது கன்மம் எனக் குறிப்பிடலாம்.

        வினையானது சடப்பொருள், அறிவற்றது. எனவே
    செய்தவனைத் தேடி அடையாது. ஆகவே இறைவன்தான்
    வினைகளை உயிர்களிடத்தில் அடைவித்து இன்ப துன்பங்களை
    அனுபவிக்கச் செய்கின்றான். ஒரு பிறப்பில் செய்த நல்வினை,
    தீவினை அடுத்தடுத்த பிறப்பில் நன்மை தீமைகளைச்
    செய்வதால்தான் வினையை ஊழ்வினை என்கின்றனர். நல்வினை,
    தீவினை இரண்டுமே பிறப்பைத் தரும் என்பது உணரத்தக்கது.

        வினைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முற்பிறப்புகளில்
    உயிரால் செய்து ஈட்டப் பெற்ற நல்வினை, தீவினை இரண்டும்
    சஞ்சிதம் (பழவினை) எனப்படும். எடுத்த     இப்பிறவியில்
    அனுபவிக்கும் வினை பிராரத்தம் (நுகர்வினை) எனப்படும்.
    இப்பிறவியில் செய்கின்ற அறம், பாவங்களால் மேலும் ஏற்படுகின்ற
    வினை ஆகாமியம் (ஏதுவினை) எனப்படும். இவ்வாறு கன்ம
    வினைகள் செய்வதாகிய உயிர், செய்யப்படுவதாகிய வினை,
    வினையின் பயன், அந்தப் பயனைக் கொண்டு உயிர்களிடத்தில்
    சேர்ப்பவனாகிய கடவுள் என்ற நான்கின் அடிப்படையில்
    வினைக்கோட்பாடு சித்தாந்தத்தில் கூறப் பெறுகின்றன எனலாம்.

        மூன்றாவது மலமாகிய மாயையும் உயிர்களிடத்தில் இடையில்
    வந்து இணைவதாகும். இம்மாயை உள்பொருள் ஆகும்.
    நித்தப்பொருள். கண்ணுக்குப் புலன் ஆகாத அருவப் பொருள்.
    உலகத்திற்கு வித்தாக அமைவது. உயிருக்கு உடல், கருவி,
    நுகர்ச்சிப்பொருள் ஆகியவற்றைத் தருவது. ஆணவத்தால்
    மறைக்கப்பெற்ற உயிரைச் சிறிது விளக்கம் செய்வது. ஆணவத்தின்
    கொடிய செயலை நீக்குவதற்கு இறைவனால் பயன்படுத்தக் கூடியது.

        ஒருபொருள் தோன்றுவதற்கு மூன்று காரணங்கள் உண்டு.
    முதற்காரணம், துணைக்காரணம், நிமித்த காரணம் என்பன அவை.
    உதாரணமாக மண்குடம் என்ற ஒரு பொருள் தோன்ற மண்
    முதற்காரணம், குயவன் நிமித்தகாரணம், அவன் உபயோகிக்கும்
    கருவிகள் துணைக்காரணம். அதுபோலத்தான் உலகம் தோன்ற
    மாயை முதற்காரணம், இறைவன் நிமித்தகாரணம், அவனுடைய சக்தி
    துணைக் காரணம், இது சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக்
    கொள்கையாகும்.

        ஒரு பெரிய ஆலமரத்தின் உற்பத்தி ஒரு சிறிய விதையில்
    அடங்கியிருப்பது போல இவ்வுலகத்து அம்சங்கள் யாவும் சூட்சுமப்
    பொருளாகிய மாயையுள் அடங்கிக் கிடக்கின்றன. இம் மாயையை
    இறைவன் தன் சக்தியினால் இயக்க இதில் படிப்படியாக 36
    தத்துவங்கள் தோன்றுகின்றன. 36 தத்துவங்கள் என்பன
    மாயையிலிருந்து தோன்றும் பொருள்கள் ஆகும். இவ்வாறு
    தோன்றும் பொருள்களை 3 வகையாகப் பிரிப்பர். அவை
    சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதி மாயை என்பன. சுத்த
    மாயையிலிருந்து ஐந்து தத்துவங்கள் தோன்றுகின்றன. அவை : சிவம்,
    சக்தி, சாதாக்கியம், ஈசுவரம், சுத்தவித்தை ஆகும். இவை ஐந்தும்
    இறைவனுடைய ஐந்து தொழில்கள் செய்வதற்குரிய இடங்களாகும்.
    ஆதலால் இவை சிவதத்துவம் எனப்படுகின்றன.

        அடுத்த அசுத்த மாயையிலிருந்து தோன்றும் தத்துவங்கள் 7
    ஆகும். அவை : காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன்,
    மாயை என்பனவாகும். இவை வித்யா தத்துவங்கள் எனக்
    கூறப்பெறும். இவையனைத்தும்     உயிரினுடைய நிலைகள்
    தோன்றுவதற்குரிய தத்துவங்கள் ஆகும்.

        பிரகிருதி மாயையிலிருந்து தோன்றும் தத்துவங்கள் 24
    ஆகும். அவை : அந்தக்கரணங்கள் நான்கு, ஞானேந்திரியங்கள்
    ஐந்து, கன்மேந்திரியங்கள் ஐந்து, தன்மாத்திரைகள் ஐந்து, பூதங்கள்
    ஐந்து ஆகியனவாம். இவை ஒவ்வொன்றையும் விளக்கின் மிக
    விரியும். ஆதலால் பெயர்கள் மட்டும் குறிக்கப் பெற்றுள்ளன.
    இந்த 36 தத்துவங்கள் அடிப்படையில்தான் உலகத்துப் பொருள்கள்
    தோன்றுகின்றன. இவை தோன்றி உலகத்தை இயங்க வைக்கின்றன.
    எனவே மாயை என்ற மலம்தான் சைவசித்தாந்தத்தில் விரிவான
    செய்தியைப் பெற்றதாகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:27:09(இந்திய நேரம்)