வள்ளல் பாரி

வள்ளல் பாரி

பாடம்
Lesson


காட்சி - 1

இடம் - பாரதி வீடு
இடம் பெறுவோர் - பாரதி, அவனது அம்மா தவமணி

 

(பாரதி பள்ளிக்குச் செல்லத் தயாராகிறான். அப்போது அவனது அம்மா தவமணி சொல்கிறார்.)

தவமணி - பாரதி இன்றைக்குப் பள்ளி முடித்துச் சீக்கிரம் வருகிறாயா?
பாரதி - ஓ! வருகிறேனே. என்ன காரணம்?
தவமணி - தோட்டத்தில் வேலை இருக்கிறது பாரதி.
பாரதி - என்ன வேலை அம்மா?
தவமணி - நம் வீட்டில் போட்ட முல்லைக் கொடிக்குக் கொம்பு நட்டுப் பந்தல் போடவேண்டும் என்று சொன்னேனே?
பாரதி - அம்மா. அது இன்னும் சிறு செடியாகத்தானே இருக்கிறது? அதற்குள் என்னம்மா அவசரம்?
தவமணி - நன்றாகப் பார். இதோ அந்தச் செடியின் நுனியில் கொடிக்கான முளை வருவதை.......
பாரதி - வரட்டுமே. இன்னும் பெரிதாக வந்தவுடன் கொம்பு நடலாமே அம்மா?
தவமணி - பசிக்கிற நேரத்தில் உணவு உண்ணாமல் காலம் கடந்து உண்டால் என்ன ஆகும்? இது தான் சரியான பருவம்
பாரதி - அடுத்தவாரம் பள்ளி விடுமுறை. அந்த நாளில் பந்தல் போட்டுக் கொள்ளலாமே அம்மா?
தவமணி - இல்லை பாரி..... இதோ காற்று அடித்தவுடன் அந்தக் கொடி என்ன பாடுபடுகிறது பார். முல்லைக் கொடிக்காகத் தன் தேரையே கொடுத்தான் ஒரு மன்னன். நீ ஒரு பந்தல் போடவாவது உதவக்கூடாதா?
பாரதி - கொடிக்காகத் தன் தேரையே கொடுத்தானா?
தவமணி - ஆமாம். பாரதி. அப்படி நடந்த வரலாறு இருக்கிறது.
பாரதி - உண்மைதானா, அம்மா?
தவமணி - ஆம். அந்த வரலாற்றை நான் மாலையில் சொல்லுகிறேன். முல்லைக் கொடிக்குப் பந்தல் போட்டுக்கொண்டே சொல்லலாமா?
பாரதி - நிச்சயமாக அம்மா. எனக்கு அந்த வரலாற்றைக் கேட்க ஆவலாக இருக்கிறது. எனவே, எனது விளையாடும் நேரத்தைக் குறைத்துக் கொண்டு சீக்கிரம் வந்துவிடுகிறேன்.
தவமணி - நல்லது பாரதி. கவனமாகச் சென்றுவா.
பாரதி - சரி அம்மா.