வள்ளல் பாரி

பாடம்
Lesson


காட்சி - 3

இடம் - பாரியின் அவைக்களம்
இடம் பெறுவோர் - பாரி, கபிலர், பாணன், விறலியர்

 

(அவையில் இசையுடன் நடனமும் அரங்கேறுகிறது; கண்டு மகிழ்ந்தபடி கபிலரிடம் பாரி கூறுகிறார்)

பாரதி - ஆகா! எத்தனை நளினம்.... என்ன அழகு... விறலி சுழன்றாடும் அழகில் மயில் தோற்று ஓடிவிடும் இல்லையா, கபிலரே!.
கபிலர் - (ஆமாம்!.
பாரி - பாணன் யாழில் எத்தனைக் குழைவு! ஆகா, இசையும் கூத்தும் இணையக் காண்பது எத்தனை இன்பம்! கலைஞர்களே, இதோ எமது இனியப் பரிசிலை ஏற்றுக் கொள்க!
விறலியர் - வரையாது வழங்கும் வள்ளலே வாழ்க!
பாரி - பறம்புநாட்டிலேயே இருந்து பண் பல பாடலாம் நீங்கள்!
பாணர் - நன்றி மன்னவா!
பாரி - காவலா, இக்கலைஞர்களுக்கு ஓய்வறை தந்து விருந்துபேணுக!
பாணர் - (வணங்கி) அப்படியே ஆகுக. மன்னவா!
பாரி - (கலைஞர்கள் காவலருடன் சென்றபின்) கபிலரே ஒன்றும் பேசாமலேயே இருக்கிறீர்களே....?
கபிலர் - எல்லாம் செயலில் நீ நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது பேச என்ன இருக்கிறது?
பாரி - என்ன?
கபிலர் - வள்ளலே, வளரும் கலைஞர்களின் கலைத்திறனைவிடவும் அவர்களை வருத்தும் வறுமையைப் போக்கவே நீ வாரி வழங்குவதைக் காணும்போது பேசுவதற்கு என்ன இருக்கிறது? முல்லை மலராக இருந்தாலும், எருக்கம் பூவாக இருந்தாலும் இரண்டையும் ஒன்றாகவே ஏற்றுக் கொண்டு இறைவன் அருளுவதைப்போன்று கலையில் வல்லவர்க்கும், கற்று வளர்பவர்க்கும் ஒரே தரத்தில் கொடை அளிக்கும் உமது அருட்திறம் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது மன்னா.......
பாரி - இல்லையென்று வருபவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கொடுப்பதைவிட நான் வேறு என்ன செய்தேன்? அது என் கடமைதானே.....
கபிலர் - (தனக்குள்) இப்படி ஒவ்வொரு மன்னனும் நினைத்துவிட்டால் நாட்டில் ஏன் இல்லாமை வரப்போகிறது?
பாரி - என்னக் கபிலரே மெல்ல முணுமுணுக்கிறீர்கள்?
கபிலர் - ஒன்றுமில்லை. இன்று மாலை ஓர் இனிய கலைவிழாக் காண என்னுடன் வர இயலுமா?
பாரி - கலைவிழாவா? எங்கே?
கபிலர் - போகலாமா?
பாரி - ஓ..! புலவர் அழைக்கையில் மறுப்பு உண்டோ? இப்போது விருந்துண்ணலாமே...