தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A0111-பாட முன்னுரை

  • 1.0 பாட முன்னுரை

    இலக்கிய உலகில் காப்பியம் ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளது. இதனைச் செவ்விலக்கிய வகையில் (Classical Literature) அடக்குவர். இலக்கிய வளம் நிறைந்த பழமையான மொழிகளில் முதல் இலக்கியம் காப்பியமாக அமைவதைக் காணலாம். இந்த நிலை தமிழுக்கு இருக்கிறதா? என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். இதனால் மட்டுமே தமிழ் பழமையான செம்மொழி அன்று என்று கூறிவிட முடியாது. இங்குக் கர் என்பார் கூற்று நினைத்தற்கு உரியது. அவர் “வீரயுகத்தில் காப்பியம் மட்டுமே எழ வேண்டும் என்ற நியதி இல்லை. பல மொழிகளில் ஹோமரின் இலியத், ஒதீசி போன்ற காவியங்களுக்குப் பதிலாக, கதை எதுவும் இன்றித் தங்கள் தங்கள் நாட்டுச் சிற்றரசர்களையும் தலைவர்களையும் பாராட்டிப் பாடும் பாடல்கள் எழுந்துள்ளன” என்கிறார். சங்க இலக்கியமான புறநானூறும், பதிற்றுப்பத்தும் பத்துப்பாட்டில் பல பாடல்களும் இத்தகைய வீரயுகப் பாடல்கள்தாம். சீன மொழியிலும் இத்தகைய உதிரிப் பாடல்களே வீரயுகத்தில் எழுந்துள்ளன.

    தமிழ் இலக்கிய வரலாற்றில் வீரயுகத்தை அடுத்துத்தான் காப்பியக் காலம் தொடங்குகிறது. இக்காப்பிய எழுச்சிக்கு வித்திட்டவர் இளங்கோ அடிகள் ஆவார். இவர் எழுதிய காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். சிலப்பதிகாரத்திற்கு முன் பல காப்பியங்கள் எழுந்திருக்க வேண்டும் என அறிஞர்கள் கருத்துத் தெரிவித்தாலும் அவை அனைத்தும் ஊகங்களே. தமிழில் தோன்றிய முதல் காப்பியமே சிலப்பதிகாரம்தான். இதனை அடியொற்றியே தமிழில் பல காப்பியங்கள் எழுதப்பட்டுள்ளன.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:16:07(இந்திய நேரம்)