Primary tabs
பாடம் - 6
A01116 ஐஞ்சிறு காப்பியங்கள்
தமிழ்க் காப்பிய வகைகளில் எண்ணிச் சொல்லப்படும் ஐந்து சிறுகாப்பியங்கள் பற்றி இந்தப் பாடம் பேசுகிறது. இவற்றில் ஒன்றான ‘சூளாமணி’ சிறுகாப்பிய வகையில் அடங்காத ‘பெருங்காப்பியம்’ என்பதை எடுத்துச் சொல்கிறது. அதோடு இக்காப்பியங்கள் எழுந்த காலச் சூழல், எழுதிய காப்பிய ஆசிரியர் வரலாறு, காப்பியக் கதை, காப்பியக் கொள்கை, காப்பியம் உணர்த்தும் சமூக - சமய - அரசியல் சிந்தனைகள் ஆகியன இப்பாடத்தில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. அதோடு இவற்றின் இலக்கிய நயமான பாடல்களும் மாணவர்களின் சுவை உணர்வு கருதித் தரப்பட்டுள்ளன.
சமண சமயத் துறவிகளின் செல்வாக்கு தமிழ் இலக்கியத்தில் பதிவு பெற்றிருப்பதை இந்தப் பாடம் தெளிவாகக் காட்டுகிறது. இவற்றிற்கான நோக்கங்களும் பலவாக இருப்பதையும் இந்தப் பாடம் எடுத்துக்காட்டுகிறது. ஒட்டு மொத்தமான மனித நேயம் இவற்றின் பாடுபொருளாக அமைவதையும் இப்பாடம் விளக்கிக் காட்டுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
●தமிழில் தோன்றியுள்ள ஐஞ்சிறு காப்பியங்கள் எவை? அவற்றை எழுதிய ஆசிரியர்கள் யாவர்? அக்காப்பியங்கள் தோன்றிய காலச் சூழல் என்ன? இவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.
●சூளாமணி என்ற காப்பியத்தை ஐஞ்சிறு காப்பியம் என்ற பாகுபாட்டில் அடக்கியதன் பொருந்தாமை உணரப்படும்.
●இந்தப் பாடப் பகுதியிலுள்ள ஐந்து காப்பியங்களுமே சமண சமயச் சார்புடையன என்பது தெரிய வரும்.
●உயிர்க்கொலை கூடாது; தெய்வங்களுக்கு உயிர்ப்பலி கொடுத்தல் மிகப் பெரிய பாவம் என்ற கருத்து யசோதர காவியம் மற்றும் நீலகேசியில் சிறப்பிடம் பெறுகிறது என்பதை அறியலாம்.
●இந்தியத் தத்துவ ஞானத்தின் முழுமை நீலகேசியில் தெளிவாகப் பேசப்பட்டிருப்பதை வியந்து பாராட்டலாம்.