Primary tabs
6.0 பாட முன்னுரை
வடமொழியில் பஞ்ச மகா காவியம். பஞ்ச காவியம் என்ற பாகுபாடு உண்டு. இதனை ஒட்டியே தமிழிலும் ஐம்பெருங் காப்பியம், ஐஞ்சிறு காப்பியம் என்ற பாகுபாடு காணப்படுகிறது. தமிழில் ஐஞ்சிறு காப்பியங்களாகச் சூளாமணி, யசோதர காவியம், நீலகேசி, உதயண குமார காவியம், நாக குமார காவியம் என்ற ஐந்தினை எண்ணிச் சொல்வர்.
தண்டியலங்காரம் என்ற இலக்கண நூல், காப்பியப் பாடுபொருளான அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகியவற்றில் ஒன்று குறைபடினும் அது சிறுகாப்பியம் என்று குறிப்பிடுகிறது. ஆனால் இங்குள்ள ஐந்து காப்பியங்களில் சூளாமணிக்கு இந்த இலக்கணம் பொருந்தவில்லை. அது அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நான்கு பொருளையும் எடுத்தியம்பும் ஒரு பெருங்காப்பியமாகவே அறிஞர்களால் போற்றப் பெறுகிறது. மேலும் சீவக சிந்தாமணிக்கு இணையான ஒரு பெருங்காப்பியம் என்பது இன்று அனைத்துத் தமிழ் அறிஞர்களாலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. என்றாலும், இது, தமிழ் இலக்கிய வரலாற்றுக் கல்வியில் சிறு காப்பிய வகையாகவே பழமரபுப்படி பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.