தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஒலி மாற்றங்கள்

  • 5.2 ஒலி மாற்றங்கள்

    தமிழ்மொழி வரலாற்றை நோக்கும் போது மொழி வளர்ச்சியடைந்து உள்ளதை அறிய முடியும். ஒரு மொழியில் இத்தகைய மாற்றங்கள் ஏற்படுவது இயற்கையே. அம்மாற்றங்கள் ஒரு மொழியின் பல்வேறு மொழிக்கூறுகளிலும் காணப்படும் மொழி பெரும்பாலும் ஒலி நிலையில்தான் மிகுதியான மாற்றத்திற்கு உள்ளாகின்றது. பிறமொழிச் செல்வாக்கு, முயற்சிச் சிக்கனம், எளிமை, சோம்பல் போன்ற பல்வேறு காரணங்களால் ஓர் ஒலி வேறொரு ஒலியாக மாற வாய்ப்புள்ளது. இத்தகைய மாற்றத்திற்கு அண்மை ஒலிச் சூழலும் காரணமாக அமைகின்றது.

    5.2.1 உயிர், மெய் ஒலிகள்

    பல்லவர், சோழர் காலத்தில் வழங்கிய உயிர் ஒலிகளும் மெய் ஒலிகளும் நாயக்கர் காலத் தமிழிலும் ஒலிகளாக விளங்கின.

    உயிர் ஒலிகள்
    இ ஈ உ ஊ
    எ ஏ ஒ ஓ
    அ ஆ
    மெய் ஒலிகள்
    க் ச் ட் ற் த் ப்
    ஞ் ண் ன் ம்
    ய் ந் ழ் ர் ல் வ்
    ள்

    5.2.2 உயிரொலி மாற்றங்கள்

    அண்மை ஒலிகளின் சூழலால் உயிர் ஒலிகள் சிலவற்றில் ஓர் ஒலி மற்றொரு ஒலியாக மாற்றம் அடைகின்றது.

    • இகரம் உகரமாதல்

    வளைநா ஒலி அல்லது இதழொலியை அடுத்து ரகரமோ, ழகரமோ, லகரமோ வரும்போது, அம்மெய்யோடு சேர்ந்த உயிரொலியான இகரம் உகரமாகிறது.

    சான்று:

    துளிர்
    >
    துளுரு
    தமிழ்
    >
    தமுழு
    மதில்
    >
    மதுலு

    அ) அகரம் இகரமாதல்

    இரு மெய்களுக்கு இடையில் அகரம் வரும்போது இகரமாகவோ உகரமாகவோ மாறும்.

    சான்று:

    தண்டனை
    >
    தண்டினை
    வஞ்சனை
    >
    வஞ்சினை

    ஆ) அகரம் உகரமாதல்

    சான்று:

    வந்தது > வந்துது

    • இகரம் யிகரமாதல்

    இம்மாற்றம் பல்லவர் காலத்திலும் உள்ளது.

    சான்று:

    இது
    >
    யிது
    இனி
    >
    யினி

    • எகரம் அகரமாதல்

    தற்காலப் பேச்சுவழக்கிலும் இந்த மாற்றம் நிலைத்து விட்டது.

    சான்று:

    எல்லாம்
    >
    அல்லாம்
    வேண்டாம்
    >
    வாண்டாம்

    • ஐகார மாற்றம்

    ஐகாரம் அகரமாகவும் எகரமாகவும் பலவிடங்களில் வழங்குகிறது.

    அ) ஐகாரம் அகரமாதல்

    சொல்லின் முதல், இடை, கடை என மூன்று நிலைகளிலும் இம்மாற்றம் நிகழ்கிறது.

    சான்று:

    சொல் முதல்
    :
    ஐம்பது
    >
    அம்பது
    சொல் இடை
    :
    வளையல்
    >
    வளயல்
    சொல் கடை
    :
    தலை
    >
    தல

    ஆ) ஐகாரம் எகரமாதல்

    சான்று:

    நைவேத்யம் > நெய் வேத்தியம்

    • யகர மாற்றம்

    யகரம் எகரமாகியும் மறைந்தும் பல சொற்களில் வழங்கப்படுகிறது.

    (யகரம் அரையுயிர் என்பதால் உயிரொலி மாற்றத்திலேயே கூறப்பட்டுள்ளது)

    அ) யகரம் எகரமாதல்

    சான்று:

    யமன்
    >
    எமன்
    யாது
    >
    ஏது

    ஆ) யகரம் மறைதல்

    மொழி முதல் யகரம் பல்லவர் காலத்திலேயே மறைந்து விட்டது.

    சான்று:

    யார்
    >
    ஆர்
    யாண்டு
    >
    ஆண்டு

    • உயிர்நெடில் அளவு குன்றல்

    உயிர்மெய் நெடில்களை அடுத்தோ மெய்ம் மயக்கங்களுக்குப் பிறகோ உயிர்கள் தம் மாத்திரையில் குறைந்து ஒலிக்கப்படுகின்றன.

    சான்று:

    காண்பாம்
    >
    காண்பம்
    தண்ணீர்
    >
    தண்ணி

    5.2.3 மெய்யொலி மாற்றங்கள்

    நாயக்கர் காலத்தில் மெய்யொலி மாற்றங்கள் ஏற்படக் கீழ்வரும் கூறுகள் சில காரணமாகின்றன.

    (அ) வடமொழிச் சொற்கள் தமிழில் புகுந்தமை.

    (ஆ) அவ்வடமொழிச் சொற்களைத் தமிழாக்கம் செய்தல்.

    (இ) அச்சொற்களைத் தமிழில் எழுதக் கிரந்த வரிவடிவங்கள் பின்பற்றப்பட்டமை.

    (ஈ) சொல்லிறுதி ஒலிகள் சில இழக்கப்பட்டமை.

    • வடமொழிச் சொற்கள் தமிழாக்கப்படல்

    வடமொழிச் சொற்களைத் தமிழாக்கம் செய்யும்போது பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன.

    (அ) ஷ >

    சான்று:

    ரிஷி
    >
    ரிசி
    வேஷம்
    >
    வேசம்

    (ஆ) க்ஷ >

    சான்று: க்ஷணம் > கணம்

    (இ) ஷ்ட் > ஸ்தி

    சான்று: கஷ்டம் > கஸ்தி

    (ஈ) அம் >

    சான்று: மாதம் > மாத்தை

    (உ) ஐ > அல்

    சான்று: கார்த்திகை > காத்தியல்

    (ஊ) ஹ்ய் > ங்

    சான்று: அஸஹ்ய > அசிங்கம்

    (எ) ர் > ழ்

    சான்று: அமிருத் > அமிர்தம் > அமிழ்தம்

    • மொழியிடை ஒலிப்புடை, ஒலிப்பிலா வெடிப்பொலிகள்

    வெடிப்பொலிகள் சொல்லின் முதலில் தனித்து வரும் போதும், சொல்லின் இடையில் இரட்டித்து வரும்போதும் ஒலிப்பிலா வெடிப்பொலிகளாகின்றன. அவையே இரண்டு உயிர்களின் இடையே வரும்போதும் மூக்கொலியை அடுத்து வரும்போதும் ஒலிப்புடை ஒலிகளாகின்றன.

    (அ) ஒலிப்பிலா வெடிப்பொலிகள்

    சான்று:

    சொல் முதல்
    :
    கன்று
    இரட்டிக்கும் போது
    :
    பக்கம்

    (ஆ)ஒலிப்புடை வெடிப்பொலிகள்

    சான்று:

    இரு ஒலிகளுக்கிடையில்
    :
    அகம்
    மூக்கொலி அடுத்து
    :
    சுங்கம்

    (இ) மொழி முதல் ஒலிப்புடை ஒலிகள்

    வடமொழிச் செல்வாக்கால் மொழி முதலிலும் ஒலிப்புடை வெடிப் பொலிகள் தோன்றின.

    சான்று:

    ப(b)லம்
    கு(g)ண்டு

    • பிறமொழி மாற்றங்கள்

    (அ) றகரம் வளைநா மூக்கொலியாதல் (ற > ண)

    சான்று:

    கன்று
    >
    கண்ணு
    ஒன்று
    >
    ஒண்ணு

    (ஆ) டகரம் சகரமாதல் (ட > ச)

    சான்று:

    மாட்சி
    >
    மாச்சி
    காட்சி
    >
    காச்சி

    (இ) யகரம் ககரமாதல் (ய > க)

    சான்று: இடையூறு > இடைகூறு

    (ஈ) னகரம் இழக்கப்படுதல் (ன>Ø)

    னகர மெய் நெடில் உயிர்மெய்களுக்குப் பின்னர் இழக்கப்படுகிறது.

    சான்று: நான்முகன் > நாமுகன்

    (உ) ரகர லகர மெய்கள் இழக்கப்படுதல் (ர/ல > Ø)

    மொழியிறுதியில் ரகர லகர மெய்கள் ஒலிக்கப்படுவதில்லை.

    சான்று:

    தண்ணீர்
    >
    தண்ணி
    தூண்டில்
    >
    தூண்டி

    (ஊ) ரகர, யகர மெய்கள் இழக்கப்படுதல் (ர/ய > Ø )

    மொழியிடையில் இவ்விரு மெய்களும் இழக்கப்படுகின்றன.

    சான்று:

    பார்த்து
    >
    பாத்து
    வாய்க்கால்
    >
    வாக்கா

    • மெய்ம்மயக்கம்

    நாயக்கர் காலத்தில் வடமொழிச் சொற்களின் தாக்கத்தினால் தமிழ் மொழியில் மெய்ம்மயக்கங்கள் மிகுந்திருந்தன.

    -ம்ச்-, -ல்ச்-, -த்ண்-, -த்வ்-, -பர்-, -த்ர்-, -ச்ர்-

    போன்ற மெய்ம்மயக்கங்கள் வில்லிபாரதத்தில் காணப்படுகின்றன. வடமொழி ஒலிகளான ஸ, ஷ, க்ஷ ஆகியன தமிழில் புகுந்தமையால் கீழ்க்காணும் மெய்ம்மயக்கங்கள் ஏற்பட்டன.

    St. Sn, Sm. Sp. Sk. St, Kr, Ks

    • உறழ்ச்சி

    பல சொற்கள் உறழ்நிலைகளில் (இருவேறு ஒலிகளும் ஒரே இடத்தில் வழக்கத்தில் இருத்தல்) ஒலிக்கப்படுதலைக் காணலாம்.

    சான்று:

    ~
    மனுசன்
    ~
    மானுடன்
    ண்
    ~
    ட்
    நண்பு
    ~
    நட்பு
    ண்
    ~
    ம்
    சண்பகம்
    ~
    சம்பகம்
    ர்
    ~
    ல்
    பந்தர்
    ~
    பந்தல்
    ~
    கழறுக
    ~
    கழலுக
    ~
    கோயில்
    ~
    கோவில்

    • ஓரினமாக்கம்

    ஓர் ஒலிக்கு முன்னரோ, பின்னரோ வருகின்ற மற்றோர் ஒலி அதன் ஒலி உச்சரிப்புக்கு ஏற்ப மாறிவிடுகிறது.

    சான்று:

    மாண்பு
    >
    மாம்பு
    மாட்சி
    >
    மாச்சி
    செல்வம்
    >
    செல்லம்
    இன்சொல்
    >
    இஞ்சொல்

    மேற்கூறிய ஒலி மாற்றங்களேயன்றிப் பல்லவர், சோழர் கால மாற்றங்களான நகர னகர மெய்கள் ஒன்றாதல், ரகர றகர மெய்கள் ஒன்றாதல் போன்றவை, நாயக்கர் காலத்திலும் தொடக்கத்தில் வழக்கிலிருந்து பின்பு நிலைத்துவிட்டன.

புதுப்பிக்கபட்ட நாள் : 28-07-2017 18:50:00(இந்திய நேரம்)